டெல்லி மாநாடு சென்ற 1103 பேர்.. தாமாக முன் வந்து தகவல் கொடுத்தனர்.. ரொம்ப நன்றி.. பீலா ராஜேஷ் பேட்டி
டெல்லி மாநாடு சென்ற 1103 பேர் தாமாக முன் வந்து தகவல் கொடுத்தனர், அவர்களில் 110 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் பேட்டி அளித்துள்ளார்
சென்னை: டெல்லி மாநாடு சென்ற 1103 பேர் தாமாக முன் வந்து தகவல் கொடுத்தனர், அவர்களில் 110 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் பேட்டி அளித்துள்ளார்
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது. மொத்தம் 110 பேருக்கு இன்று மட்டும் கொரோனா பாதித்துள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை தமிழகத்தில் 234 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று தமிழகத்தில் 57 பேருக்கு கொரோனா தாக்குதல் ஏற்பட்டது. இவர்களில் 50 பேர் டெல்லி மாநாடு சென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் பேட்டி அளித்துள்ளார்

பேட்டி அளித்தார்
பீலா ராஜேஷ் தனது பேட்டியில், தமிழ்நாடு அரசின் வேண்டுகோளை ஏற்று டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் தானாக முன்வந்து எங்களிடம் தகவல் தெரிவித்தமைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அரசின் சார்பாக நேற்று நான் ஒரு வேண்டுகோளை விடுத்து இருந்தேன். டெல்லி மாநாட்டில் யார் எல்லாம் கலந்து கொண்டீர்களோ அவர்கள் எல்லாம் வந்து எங்களிடம் கூறும்படி வேண்டுகோள் விடுத்து இருந்தோம். நீங்கள் எல்லோரும் எங்களிடம் வந்து சொன்னால்தான் உங்களுக்கு நல்லது.

வேறு நபர்களுக்கு இல்லை
அதாவது, டெல்லி சென்று திரும்பிய 110 பேர் தவிர, தமிழகத்தில் இன்று புதிதாக வேறு ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு பதிவாகவில்லை என்று அவர் தெரிவித்தார். சமூக பரவல் என்ற மோசமான நிலைக்கு தமிழகம் செல்லவில்லை என்பதற்கு இது ஒரு உதாரணம். டெல்லியில் பல நாட்டினரும் பங்கேற்ற நிகழ்ச்சி என்பதால், அதில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா வந்துள்ளதே தவிர, சமூக பரவலால் வரவில்லை.

சீல் வைப்பு
மேலும், டெல்லி சென்று திரும்பியவர்கள் பலரிடமும் பழகியிருப்பார்கள். அவர்களின் மூலம் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கருதப்பட்ட நிலையில், டெல்லி சென்று திரும்பியவர்களை தவிர புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்பதை பீலா ராஜேஷ் உறுதி செய்துள்ளார். இது கண்டிப்பாக சற்று ஆசுவாசப்படுத்தக் கூடிய தகவல்தான். டெல்லி சென்று திரும்பியவர்கள் யாரிடமெல்லாம் பழகினார்களோ அவர்களை கண்காணிக்கும் பணி நடக்கிறது. அவர்கள் புழங்கிய 8 கி.மீ சுற்றளவு சீல் வைக்கப்பட்டுள்ளது.

சோதனைகள் குறைவுதான்
இதுபோன்ற நடவடிக்கைகளால் பிறருக்கு நோய் பரவாமல் தடுக்கப்படும் என்ற நம்பிக்கையை பீலா ராஜேஷ் இன்றைய பேட்டியில் தெரிவித்தார். டெல்லி சென்று திரும்பியவர்கள் தவிர தமிழகத்தில் மற்ற மக்களுக்கு, அதிக அளவுக்கு இந்த நோய் பரவவில்லை என்பது நம்பிக்கைக்குரிய செய்தி என்றபோதிலும், அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை, சொற்ப அளவே சோதனைகள் நடந்து வருகின்றன என்பதையும் மறுக்க முடியாது. ஆனால் கொரோனா பாதிப்பு அறிகுறி உள்ளவர்கள் யாராவது மருத்துவமனை சென்றால், அவர்களுக்கு தக்க பரிசோதனை செய்யப்படுவதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவிக்கிறது.












Click it and Unblock the Notifications