கொரோனா காலத்திலாவது ஜாதி, மதபிடிமானத்தை தளர்த்தி மனிதாபிதாமனத்தை வேர்பிடிக்க செய்யுங்க
சென்னை: கொரோனா என்பது ஒட்டுமொத்த மனித குலத்தை தாக்கி வரும் வைரஸ்.. இந்த துயரமான காலத்தில் மனிதர்கள் தங்களது ஜாதி, மத பிடிமானங்களையும் வன்மங்களையும் கைவிட்டு மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டியதுதான் தற்போதைய தேவை.
டெல்லியில் தப்லீக் மத மாநாட்டுக்கும் போனவர்களுக்கும் கொரோனா வந்தது உண்டு..சாய் பாபா கோவிலுக்கு போனவர்களுக்கும் கொரோனா பாதிப்பு இருக்கிறது... தேவாலயத்தில் கூட்டு பிரார்த்தனையில் பங்கேற்றோருக்கும் இருக்கிறது. இதேபோல் ஜாதி பார்த்தும் இந்த கொரோனா தொற்று அமருவதும் இல்லை.. ஒரு குறிப்பிட்ட ஜாதியினரே கொரோனாவை பரப்புவதாக கருதுவதும் அவர்கள் மீது வன்முறையை ஏவுவதும் மனிதாபிமானமும் அல்ல.
கொரோனா லாக்டவுனால் பாதிப்பு- ஏழைகளுக்கு ரூ7,500 உதவித் தொகை வழங்க வேண்டும்- ராகுல் காந்தி
தலித்துகள் மீது தாக்குதல்
அண்மையில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டத்தில் மறவபட்டி என்ற கிராமத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்தது. அவர் கரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படு நலமடைந்து வீடு திரும்பிவிட்டார். கொரோனா பாதிப்புக்குள்ளான நபரின் உறவினர் அருகே உள்ள எரியோடு என்கிற சிறுநகரப் பகுதிக்கு கடை வீதிக்கு வந்திருக்கிறார். அவர் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். இதனால் ஜாதியின் பெயரை கூறி நீ எப்படி கொரோனாவுடன் இந்த ஊருக்கு வரலாம் என சிலர் தாக்கி இருக்கின்றனர்.
விழுப்புரம் ஏழுசெம்பொன் கிராமம்
இதேபோல் விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பில் ஜாதியம் எப்படி இணைந்திருக்கிறது என்பதை லோக்சபா எம்.பி. ரவிக்குமார் விவரிக்கிறார். அவரது ஃபேஸ்புக் பக்கத்தில், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டம் ஏழுசெம்பொன் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சில நடைமுறை சிக்கல்களை என்னிடம் தெரிவித்தார்கள்.'அங்கிருந்து கோயம்பேடு போய் வேலைசெய்த ஒருவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டு மருத்துவமனையில் உள்ளார். அதனால் அந்த கிராமத்தைச் சேர்ந்த இரண்டு தெருக்களில் இருப்பவர்களுக்கு கடைகளில் பொருள் தர மறுக்கிறார்கள். ரேஷன் பொருட்களும் கொடுக்கவில்லை. அங்கிருந்து பால் கறந்து ஊற்றிக்கொண்டிருந்தார்கள்.அந்தப் பாலையும் வாங்க மறுக்கிறார்கள்' எனக் கூறினார்கள்.
கோயம்பேடு பாதிப்புக்கு பின் அதிகம்
அதுபற்றி விழுப்புரம் மாவட்ட கலெக்டரிடம் கூறினேன். தாசில்தாரிடம் அதை கவனிக்குமாறு சொல்லியிருக்கிறேன் என்றார். கொரோனா நோய்த்தொற்று கிராமங்களில் ஏற்கனவே இருக்கும் சாதிய பாகுபாடுகளை அதிகமாக்கி வருகிறது.கோயம்பேடு க்ளஸ்டரிலிருந்து வந்தவர்களில் பெரும்பாலோர் எஸ்சி வகுப்பினராய் இருப்பதால் அந்தப் பாகுபாடு இப்போது அதிகரிக்கிறது. கடலூர், அரியலூர்,பெரம்பலூர் மாவட்டங்களிலும் இந்த சிக்கல் எழுந்துள்ளது.
தலித்துகள் வாகனம் எரிப்பு
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் ஒன்றியம் மேல மங்கலம் கிராமத்தில் சாதிய தாக்குதலாக அது உருமாறியுள்ளது. எஸ்சி தெருவைச் சேர்ந்தவர்கள் கடைக்குப் போனபோது அவர்களைத் தாக்கியதோடு அவர்கள் சென்ற 4 இரு சக்கர வாகனங்களையும் எரித்துள்ளனர். 6 பேர் படுகாயப்படுத்தப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோயம்பேடு கொரோனா நோயாளிகளைக் கையாளும் மாவட்ட ஆட்சியர்கள் இந்த சாதியப் பரிமாணத்தையும் கவனத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதிலும், அது தொடர்பாக எழும் பிரச்சனைகளைக் கையாள்வதிலும் விழுப்புரம் ஆட்சியர் சிறப்பாக செயல்படுகிறார்.இப்படியான சிக்கல்களையும் அவர் தீர்த்துவைப்பார் என நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.
கொரோனா - மனித குலத்துக்கு எதிரானது- மதங்களையும் ஜாதிகளையும் இணைக்காமல் மனிதாபிமானத்துடன் நாம் நடந்து கொள்ள வேண்டிய தருணம் இது.. இது மட்டும்தான்!