டயட் மூலம் தமிழகம் செய்யும் வித்தை.. கொரோனா நோயாளிகள் வேகமாக குணமாவது எப்படி? செம பின்னணி!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அதிக அளவில் கொரோனா நோயாளிகள் குணப்படுத்தபடுவதற்கு தமிழக மருத்துவமனைகளில் வழங்கப்படும் சரியான டயட் முறையும் முக்கியமான காரணம் என்று கூறுகிறார்கள்.
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அதிக அளவில் கொரோனா நோயாளிகள் குணப்படுத்தபடுவதற்கு தமிழக மருத்துவமனைகளில் வழங்கப்படும் சரியான டயட் முறையும் முக்கியமான காரணம் என்று கூறுகிறார்கள்.
Recommended Video
தமிழகத்தில் நேற்று மேலும் 64 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1885 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நேற்று மட்டும் கொரோனாவிலிருந்து 60 பேர் குணமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் ஒரே நாளில் 60 பேர் டிஸ்சார்ஜ் ஆனதால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1020 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா நோயாளிகளை குணப்படுத்துவதில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது.

அதிக வேகம்
இந்தியாவில் தமிழகத்தில் மட்டும்தான் கொரோனா நோயாளிகள் இவ்வளவு வேகமாக குணப்படுத்தப்படுகிறார்கள். கேரளாவில் நோயாளிகள் எல்லோரும் கடைசி கட்டத்தில்தான் குணப்படுத்தப்பட்டனர். அதேபோல், டெல்லியில் இப்போதுதான் நோயாளிகளை குணப்படுத்தும் வேகம் அதிகரித்துள்ளது. ஆனால் அங்கு இன்னும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தற்போது அங்கு 2918 கொரோனா நோயாளிகள் உள்ளனர்.

மொத்தம் எத்தனை
ஆனால் தமிழகத்தில் 1885 கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 1020 பேர் குணப்படுத்தப்பட்டுவிட்டனர். மொத்தம் 841 பேர் மட்டுமே மீதம் இருக்கிறார்கள். கிட்டத்தட்ட 55% பேரை தமிழகம் குணப்படுத்தி உள்ளது. மிக விரைவாக கொரோனா நோயாளிகளை குணப்படுத்துவதில் தமிழகம் இரண்டாம் இடம் வகிக்கிறது. கேரளா 75% நோயாளிகளை குணப்படுத்தி முதல் இடம் வகிக்கிறது.

எப்படி ?
ஆனால் எண்ணிக்கை கணக்கு, மக்கள் தொகை எல்லாம் கணக்கிட்டு பார்த்தால் தமிழகம்தான் முதல் இடம் வகிக்கிறது. இப்படி தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அதிக அளவில் கொரோனா நோயாளிகள் குணப்படுத்தபடுவதற்கு தமிழக மருத்துவமனைகளில் வழங்கப்படும் சரியான டயட் முறையும் முக்கியமான காரணம் என்று கூறுகிறார்கள். ஆம் தமிழகம் கொரோனா நோயாளிகளுக்கு மிக சிறப்பான உணவை வழங்குகிறது.

உணவு முக்கியம்
தமிழகத்தில் தொடக்கத்தில் இருந்தே கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு முறையில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. கொரோனா நோய் மூலம் எதிர்ப்பு சக்தி உடலில் வேகமாக குறையும். இதனால் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை அதிக அளவில் கொடுக்க வேண்டும். எவ்வளவு அதிகமாக எதிர்ப்பு சக்தி உள்ள உணவுகளை கொடுக்கிறோமோ அவ்வளவு வேகமாக நோயாளிகள் குணமடைய வாய்ப்புகள் உள்ளது. தமிழகம் இதில் மிகவும் கவனமாக இருந்தது.

போதுமான நீர் சத்து
போதுமான நீர் சத்து போதுமான புரதம் இருக்கும்படி உணவுகளை வழங்கி வருகிறார்கள். அதன்படி கபசுர குடிநீர், எலுமிச்சை சாறு, பூண்டு பால் போன்ற எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திரவ வகைகள் தொடர்ந்து வழங்கப்படுகிறது. இது மட்டுமின்றி சுண்டல், வேர்க்கடலை, பிஸ்கெட் என்று இடைப்பட்ட நேரங்களில் போதுமான அளவு சிற்றுண்டி வழங்கப்படுகிறது. அதேபோல் காபி, சாதம், சாம்பார் , ரசம், முட்டை, பொரியல், தயிர் சாதம், சாப்பாத்தி, மீன் என்று கலவையாக உணவு வழங்கப்படுகிறது.

உணவு முறை
மொத்தம் 7 வேளையாக உணவு பிரித்து வழங்கப்படுகிறது. நோன்பு இருக்கும் இஸ்லாமியர்களுக்கும் அதற்கு ஏற்றபடி இரவு நேரத்தில் சரியாக உணவு வழங்கப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட பலர் தங்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதே தெரியாத வகையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, எந்த பிரச்சனையும் இன்றி டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்கள். இதுதான் கொரோனா நோயாளிகளை தமிழகத்தில் எளிமையாக குணப்படுத்த முக்கிய காரணம் என்கிறார்கள்.

எதிர்ப்பு சக்தி உணவு
அதாவது எதிர்ப்பு சக்தி சரியும் நேரத்தில் அதை சரி கட்ட சரியான உணவை கொடுத்து உடலில் எதிர்ப்பு சக்தியை கட்டுக்குள் வைத்து இருக்கிறார்கள். இதற்கு கபசுர குடிநீரும் மிக முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. இதைத்தான் கடந்த முறை செய்தியாளர்களை சந்தித்த போது அமைச்சர் விஜயபாஸ்கர் அழுத்தமாக குறிப்பிட்டார். நாங்கள் நோயாளிகளுக்கு கொடுக்கும் உணவில் அதிக கவனம் செலுத்துகிறோம் என்று குறிப்பிட்டு இருந்தார்.

டெல்லி ஐடியா
இதனால்தான் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலிடம் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நோயாளிகளின் உணவு முறையில் கவனம் செலுத்துங்கள் என்று குறிப்பிட்டார். இப்போது வரிசையாக டெல்லியில் கொரோனா நோயாளிகள் குணமடையும் வேகம் அதிகரித்துள்ளது. அங்கு அதிக அளவில் நோயாளிகள் குணப்படுத்தப்பட்டு வருகிறார்கள். கொரோனாவிற்கு எதிரான போரில் தமிழகம் கொஞ்சம் கொஞ்சமாக வெல்ல தொடங்கி உள்ளது.












Click it and Unblock the Notifications