அந்த 2 நாள் தவறு.. தமிழகத்தில் கொரோனா தீவிரம் அடைய "டாஸ்மாக்" காரணமா?.. இன்றிலிருந்து தெரிய வரும்!
சென்னை: தமிழகத்தில் கொரோனா கேஸ்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதற்கும், திடீர் என்று நேற்று அதிக எண்ணிக்கையில் கொரோனா ஏற்படவும் டாஸ்மாக் திறப்பு ஒரு காரணமா என்று கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக கொரோனா பாதிப்பை தீவிரமாக கண்காணித்து வரும் மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
Recommended Video
தமிழகத்தில் கொரோனா பாதிப்பிற்கு இடையில் கடந்த 7ம் தேதி டாஸ்மாக் திறக்கப்பட்டது. பொருளாதார தேவைகளை கருத்தில் கொண்டு டாஸ்மாக் திறக்கப்பட்டது. மிகுந்த கட்டுப்பாடுகள், விதிமுறைகள் இதற்கு விதிக்கப்பட்டு இருந்தது.
கடைசியில் சென்னை ஹைகோர்ட் மதுக்கடைகளை மூடும்படி உத்தரவிட்டது. இதனால் தமிழகத்தில் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் மட்டும் டாஸ்மாக் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றிலிருந்து அடுத்த 6 நாட்கள்.. கொரோனா கேஸ்கள் வேகம் எடுக்கும்.. சென்னைக்கு காத்திருக்கும் சிக்கல்!
கூட்டம் அலைமோதியது
இந்த இரண்டு நாட்களும் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. குடிமகன்கள் சமூக இடைவெளி விடாமல் மிகவும் நெருக்கமாக நின்று மது பாட்டில்களை வாங்கிவிட்டு சென்றனர். போலீஸ் எவ்வளவு முயன்றும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இரண்டு மாதம் கஷ்டப்பட்டு ஊரடங்கு மூலம் நாம் செய்த பணிகளை எல்லாம் டாஸ்மாக் வெறும் இரண்டு நாளில் சுக்கு நூறாக உடைத்து நொறுக்கியது.
டாஸ்மாக் சென்றாரா?
இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா கேஸ்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதற்கும், திடீர் என்று நேற்று அதிக எண்ணிக்கையில் கொரோனா ஏற்படவும் டாஸ்மாக் திறப்பு ஒரு காரணமா என்று கேள்வி எழுந்துள்ளது. அதாவது கோயம்பேடு சென்றவர்களுக்கு கொரோனா வந்தது போல டாஸ்மாக் சென்றவர்களுக்கு கொரோனா வருமா என்று கேள்வி எழுந்துள்ளது. தமிழகத்தின் புதிய கொரோனா எபிசென்டராக டாஸ்மாக் மாறுமா என்று கேள்வி எழுந்து இருக்கிறது. இது தொடர்பாக கொரோனா பாதிப்பை தீவிரமாக கண்காணித்து வரும் மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
ஏற்கனவே ஒருவருக்கு வந்துவிட்டது
தமிழகத்தில் ஏற்கனவே டாஸ்மாக் சென்று ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தேனியில் கொரோனா பாதிக்கப்பட்ட ஒருவர் இரண்டு நாட்களாக டாஸ்மாக் சென்று கூட்டத்தில் வரிசையாக நின்றது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவருக்கு கோயம்பேடு மூலம் கொரோனா ஏற்பட்டுள்ளது. ஆனால் கொரோனாவோடு இவர் தேனியில் சொந்த ஊருக்கு சென்று டாஸ்மாக் லைனில் நின்று இருக்கிறார்.
இரண்டு நாட்கள்
தேனியில் தேவதானப்பட்டியில் டாஸ்மாக் திறந்து இருந்த இரண்டு நாளும் அவர் மதுக்கடைக்கு சென்று மது வாங்கி இருக்கிறார். டாஸ்மாக் லைனில் கூட்டத்தோடு கூட்டமாக இவர் நின்றுள்ளார். இதனால் இவர் மூலம் அங்கு பலருக்கு கொரோனா பரவி இருக்க வாய்ப்புள்ளது. தமிழகத்தில் இதேபோல் பல மாவட்டங்களில் இன்னும் பலருக்கு டாஸ்மாக் மூலம் இப்படி கொரோனா பரவி இருக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இதுவரை அதிகாரபூர்வமாக ஒரு நபர் மட்டும் டாஸ்மாக் சென்றுள்ளார்.
காண்டாக்ட் டிரேஸ் செய்வார்கள்
ஆனால் உண்மையில் பலர் இப்படி கொரோனாவோடு டாஸ்மாக் சென்று இருக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். வரும் நாட்களில் கொரோனா கேஸ்கள் வர வர அதன் காண்டாக்ட் டிரேஸ் செய்யப்படும். அப்போது அவர்கள் டாஸ்மாக் சென்றார்களா என்று விசாரிக்கப்படும். இதனால் டாஸ்மாக் லைனில் நின்ற கொரோனா நோயாளிகள், "சூப்பர் ஸ்பிரேட்டர்" யார் என்று தெரிய வரும். இதன் மூலம் டாஸ்மாக் மூலம் எத்தனை பேருக்கு கொரோனா வந்துள்ளது என்று தெரிய வரும்.
இனிதான் தெரியும்
தொடக்கத்தில் பொதுவாக கொரோனா அறிகுறி குறைந்தது 14 நாட்களுக்கு பிறகுதான் தெரிந்தது. அதனால் இப்போது கொரோனா உள்ள நபர்களுக்கு கொரோனா இருக்கிறதா இல்லையா என்பது 4-5 நாட்களில் தெரிந்துவிடும். அதிகபட்சம் ஒருவருக்கு கொரோனா தாக்கி தமிழகத்தில் 5 நாட்களில் அது கண்டுபிடிக்கப்படுகிறது. கோயம்பேட்டிற்கு சென்றவர்களுக்கு எல்லாம் அவர்கள் கோயம்பேடு சென்ற நாளில் இருந்து அடுத்த 5 நாட்களில் கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. வேகமான ரேண்டம் டெஸ்டிங்தான் இதற்கு காரணம்.
கேஸ்கள் இனி வரும்
அதேபோல் டாஸ்மாக் கடைக்கு சென்றவர்களுக்கு கொரோனா ஏற்பட்டுள்ளதா என்று இனி தெரிய வரும். இரண்டு நாட்கள் டாஸ்மாக் திறந்ததால் வந்த விளைவு தெரிய வரும். இன்றில் இருந்து எத்தனை பேர் டாஸ்மாக் மூலம் கொரோனா பாதிப்பிற்கு உள்ளானார்கள் என்று தெரியும் என்கிறார்கள். இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட டாஸ்மாக் காரணம் இல்லை. ஆனால் இனி வரும் நாட்களில், தமிழகத்தில் டாஸ்மாக் கொரோனா கேஸ்கள் அதிகம் வர வாய்ப்புள்ளது. நாம் கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.