ஏஆர்டிஎஸ் பிரச்சனை.. நன்றாக தேறி வந்த உடல்நிலை.. கடைசி நேரத்தில் பலியான அன்பழகன்.. என்ன நடந்தது?
சென்னை: கடந்த வாரம் இறுதியில் உடல் நிலை தேறி வந்த திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் கடைசி நேரத்தில் கொரோனா பாதிப்பு தீவிரம் அடைந்து பலியாகி உள்ளார். இவருக்கு தீவிர சுவாச கோளாறு நோய்க்குறி ஏற்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
திமுக எம்எல்ஏ மற்றும் சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஜெ. அன்பழகனுக்கு கடந்த 2ம் தேதி காய்ச்சல் அறிகுறி வந்தது. அதன்பின் அவருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட நிலையில் உடனடியாக சென்னை குரோம்பேட்டையில் டாக்டர் ரெலா இன்ஸ்டிடியூட் அண்ட் மெடிகல் சென்டரில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டார். அவருக்கு 10 நாட்களாக தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

உடல்நிலை மோசம்
இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட தொடக்கத்தில் உடல் நிலை மிகவும் மோசமாக இருந்தது. ஜூன் 3-4 ம் தேதிகளில் இவரின் உடல்நிலை மிக மோசம் ஆனது. இவருக்கு ஏஆர்டிஎஸ் எனப்படும் acute respiratory distress syndrome ஏற்பட்டு இருந்தது. பொதுவாக கொரோனா பாதிப்பு ஏற்படும் பலருக்கு இந்த ஏஆர்டிஎஸ் ஏற்படும். இதனை தீவிர சுவாச கோளாறு நோய்க்குறி என்று அழைப்பார்கள்.

ஏஆர்டிஎஸ் வந்தது
இந்த ஏஆர்டிஎஸ் ஏற்பட்டால் மூச்சு விடுவதில் பெரிய அளவில் சிக்கல் ஏற்படும். சரியாக ஆக்சிஜன் மூச்சு குழல்களுக்கு செல்லாது. இதனால் மூச்சு விடுவதில் பலருக்கு பிரச்சனை இருக்கும். தமிழகத்தில் கொரோனா காரணமாக பலியான பலருக்கு ஏஆர்டிஎஸ் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஏஆர்டிஎஸ் பாதிப்பின் அளவை பொறுத்து சிலருக்கு சுவாசிக்க ஆக்ஜிசன் சிலிண்டர்கள் கொடுக்கப்படும்.

வெண்டிலெட்டர்கள் உதவி
ஏஆர்டிஎஸ் அளவை பொறுத்தே வெண்டிலெட்டர்கள் அளிக்கப்படும். இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அடுத்த சில நாட்களில் அன்பழகனுக்கு வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டது. அவருக்கு சுவாசிப்பதில் பிரச்சனை மிக அதிகமாக இருந்ததால் வெண்டிலேட்டர் வைக்கப்பட்டது. மொத்தம் 90% ஆக்சிஜன் உதவியுடன் அன்பழகனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

அதிக உடல்நிலைய
அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக அன்பழகனுக்கு உடல் நிலை தேறி வந்தது. கடந்த வாரம் இறுதியில் அவரின் உடல் நிலை பெரிய அளவில் மேம்பட்டது. இதனால் அவருக்கு 90% ஆக்சிஜன் தேவை 60% ஆக குறைந்தது. அதன்பின் 20% மட்டுமே இவருக்கு வெண்டிலேட்டர் மூலம் ஆக்சிஜன் அளிக்கப்பட்டது. இதனால் அவரின் உடல் நிலை குணமாகிவிடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

மிக மோசம்
ஆனால் திடீர் என்று நேற்று அதிகாலையில் இருந்து அன்பழகனுக்கு உடல் நிலை மிக மோசமானது. நேற்று அதிகாலை அவருக்கு மீண்டும் ஏடிஆர்எஸ் பிரச்சனை வந்தது. மூச்சு விடுவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டது. அதோடு இன்னொரு பக்கம் அன்பழகனுக்கு சிறுநீரக கோளாறு இருந்தது. சில நாட்களாக சிறு நீரகத்தில் இவருக்கு பிரச்சனை இருந்தது. இதனால் அவரின் உடல் நிலை மிக மோசம் அடைந்தது.

கல்லீரல் சிகிச்சை
பொதுவாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களில் சிறுநீரக கோளாறு இருப்பவர்கள் அதிகமாக பலியாகிறார்கள். இதற்கு முன் அன்பழகனுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருந்தது.அதேபோல் உயர் ரத்த அழுத்தமும் ஏற்பட்டு இருந்தது. இதுவே அவரின் மரணத்திற்கு காரணம் என்று மருத்துமனை வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

என்ன காரணம்
பொதுவாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு பலியான நபர்களில் 80% பேர் உடலில் வேறு பிரச்சனை இருந்த காரணத்தால பலியாகி உள்ளனர். முக்கியமாக சிறுநீரக பிரச்சனை, கல்லீரல் பிரச்சனை மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள்தான் அதிகமாக கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அன்பழகனும் இதேபோல் உடல் பிரச்சனைகளை கொண்டு இருந்ததால் சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளார்.












Click it and Unblock the Notifications