பிறமாநில தொழிலாளர்கள்.. 1 வாரத்திற்குள் சொந்த ஊருக்கு அனுப்பப்படுவார்கள்.. முதல்வர் பழனிசாமி உறுதி!
சென்னை: தமிழகத்தில் இருக்கும் வெளிமாநில தொழிலாளர்கள் ஒரு வாரத்திற்குள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுக்க மே 17ம் தேதி வரை நாடு முழுக்க ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் வெவ்வேறு மாநிலங்களில் வசிக்கும் வெளி மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்காக பல மாநிலங்களில் நேற்று சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டது. சிறப்பு ரயில்கள் மூலம் வெளிமாநில தொழிலாளர்கள் பலர் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி வருகிறார்கள். தமிழகத்தில் இருந்து இதேபோல் வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு சென்றனர்.
தமிழகத்தில் மீதம் உள்ள வெளிமாநில தொழிலாளர்கள் எப்போது சொந்த ஊருக்கு அனுப்பப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக தமிழக முதல்வர் பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து பணி புரியும் வெளி மாநில தொழிலாளர்களை அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில், அவரவர் மாநிலங்களுக்கு, சம்மந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியுடன், படிப்படியாக அனுப்பி வைக்க தமிழ்நாடு அரசு அனைத்து விதமான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
ரயில் சேவை துவங்கியாச்சு.. அடுத்து விமானங்கள் பாய்ந்து பறக்கப்போகிறது.. ஏற்பாடுகள் ரெடி
இதுவரை 9 ஆயிரம் வெளி மாநில தொழிலாளர்கள், சம்மந்தப்பட்ட மாநிலங்களின் ஒப்புதலுடன் 8 ரயில்களில் அவரவர் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மீதமுள்ள வெளி மாநில தொழிலாளர்களும் சம்மந்தப்பட்ட மாநிலங்களின் ஒப்புதலுடன் ரயில்கள் மூலம் அவரவர் மாநிலங்களுக்கு ஒரு வார காலத்திற்குள் அனுப்பி வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, அதுவரை வெளி மாநில தொழிலாளர்கள் முகாம்களிலேயே தங்கியிருக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன், என்று தெரிவித்துள்ளார்.