கொரோனா பாதிப்பு.. உரிமை பெறாத குடிநீர் ஆலைகளுக்கு இயங்க அனுமதி.. சென்னை ஹைகோர்ட்
சென்னை: கொரோனா பாதிப்பு மற்றும் குடிநீர் தேவைகளை கருத்தில் கொண்டு உரிமம் பெறாத குடிநீர் ஆலைகளை ஜூலை 31ம் தேதி வரை இயங்க அனுமதி அளித்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுக்கும் குடிநீர் ஆலைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி சிவமுத்து என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கு, நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ்குமார் அடங்கிய அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், உரிமம் கோரி விண்ணப்பித்த 690 குடிநீர் ஆலைகளில் 121 ஆலைகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 569 குடிநீர் ஆலைகள் அளித்த விண்ணப்பங்களை பரிசீலிக்க ஜூலை 31 வரை அவகாசம் வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
மேலும், தற்போது, கொரோனா அச்சுறுத்தல் காரணமாகவும் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டும் உரிமம் கோரி விண்ணப்பித்து தகுதியுடைய குடிநீர் ஆலைகளையும், தற்காலிகமாக ஜூலை 31ம் தேதி வரை இயங்க அனுமதி அளிக்கலாம் என அரசு முடிவு செய்துள்ளதாகவும் இதுதொடர்பாக ஓரிரு நாளில் அரசாணை பிறப்பிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும் இந்த ஆலைகள் உற்பத்தி செய்யும் தண்ணீரில் 15 சதவீதம் தண்ணீரை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அரசுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
நாடு முழுக்க 12 தனியார் லேப்களுக்கு கொரோனா டெஸ்ட் செய்ய அனுமதி.. தமிழகத்தில் எங்கெல்லாம் தெரியுமா?
அதிக நிலத்தடி நீர் உறிஞ்சப்படும் பகுதிகளை பொறுத்தவரை, 396 விண்ணப்பங்கள் உரிமம் கோரி வந்துள்ளதாகவும், அதை உரிய விதிகளின்படி விரைந்து பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், உரிமம் கோரி விண்ணப்பித்துள்ள அனைத்து குடிநீர் ஆலைகளை தற்காலிகமாக இயங்க அனுமதிக்கலாம் என அரசுக்கு ஒப்புதல் அளித்து உத்தரவிட்டனர்.
அதேபோல அரசின் நிபந்தனையின்படி உற்பத்தி செய்யும் தண்ணீரில் 15 சதவீதத்தை அனைத்து குடிநீர் ஆலைகளும், அரசுக்கு வழங்க வேண்டுமெனவும் அறிவுறுத்திய நீதிபதிகள், இதை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஏப்ரல் 28ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.