சென்னையில்.. பிரபல பெண் டிவி தொகுப்பாளருக்கு கொரோனா.. மருத்துவமனையில் அனுமதி
சென்னையில் தனியார் டிவி பெண் தொகுப்பாளருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது
சென்னை: சென்னையில் தனியார் தொலைக்காட்சி பெண் தொகுப்பாளருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை தந்து வருகிறது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதியாக தலைநகர் சென்னை தான் நீடித்து வருகிறது.. மாநகரில் உள்ள 15 மண்டலங்களிலும் பாதித்தோரின் எண்ணிக்கை 2,644ஆக உயர்ந்துள்ளது.
இவற்றில் அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 461 பேருக்கும், அதற்கு அடுத்த இடத்தில் திருவிக நகர் மண்டலத்தில் 448 பேருக்கும், அதற்கு அடுத்த இடத்தில் ராயபுரத்தில் 422 பேருக்கும் நோய் பரவியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
தொற்றிலிருந்து 358 பேர் இதுவரை குணமாகியிருந்தாலும் 23 பேர் மரணமடைந்துள்ளனர். மேலும், 2, 255 பேர் சிகிச்சையில் உள்ளனர். அதனால்தான் சென்னையில் டாஸ்மாக் திறக்கப்பட மாட்டாது என்று உறுதியாக அரசு அறிவித்தது.. இன்றும்கூட சென்னை கோயம்பேடு உதவி ஆணையருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. அவரை உடனடியாக ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதேபோல, சென்னையில் உள்ள தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக வேலை செய்து வரும் பெண் ஒருவருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது.. டாக்டர்கள், போலீஸ்காரர்களை போலவே மீடியாவில் உள்ளவர்களும் உயிரை பணயம் வைத்துதான் வேலை பார்த்து வருகின்றனர்.. சில தொலைக்காட்சி நிறுவனங்கள் பாதுகாப்பு கவசங்களை செய்தியாளர்களுக்கு தந்து பாதுகாப்பு நடவடிக்கையும் எடுத்துள்ளது. எனினும் சிலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
முன்னதாக வேறு ஒரு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பணி புரிந்து வந்த பிரேக்கிங் செய்தி ஆசிரியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மற்றொரு பெண் செய்தியாளருக்கும் கொரோனா தொற்று உறுதியதாகி உள்ளது மீடியா உலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது.