தமிழகம் முழுக்க கொரோனாவை பரப்பிய கோயம்பேடு.. கட்டுப்பாட்டில் இருந்த மாவட்டங்களும் பதறும் கொடுமை
தமிழகம் முழுக்க கொரோனாவை பரப்பிய கோயம்பேடு.. கட்டுப்பாட்டில் இருந்த மாவட்டங்களும் பதறும் கொடுமை
Recommended Video
சென்னை: கொரோனா வைரஸ் பரவலின் மையப் புள்ளியாக கோயம்பேடு மார்க்கெட் மாறியுள்ளது. அதன் பாதிப்பு பல மாவட்டங்களுக்கும் விரிவடைந்து சென்றுள்ளது. தமிழகத்தில் சென்னை தவிர பிற மாவட்டங்களில் ஓய்ந்திருந்த கொரோனா அலையை, கோயம்பேடு தட்டி எழுப்பியுள்ளது.
ஆசியாவிலேயே மிகப்பெரிய சந்தை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்தான். இங்கு வட மாநிலங்கள் குறிப்பாக மகாராஷ்டிராவிலிருந்து கணிசமான லாரிகள் சரக்கு ஏற்றி வருகின்றன. எனவே நோய் பரவலை எளிதாக உருவாக்கும் இடம் இது. அப்படி இருந்தும், உரிய சமூக இடைவெளியின்றி இங்கு கடந்த பல நாட்களாக காய்கறி விற்பனை நடைபெற்றது.
இந்த நிலையில்தான், கோயம்பேடு ஒரு கிளஸ்டராக மாறி, பலருக்கும் வைரசை பரப்பியுள்ளது. கோயம்பேடு சந்தையில் இருந்து அரியலூர் மற்றும் பெரம்பலூர் வந்த 20 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கோயம்பேட்டிலிருந்து அரியலூர் சென்ற 19 பேருக்கும், பெரம்பலூர் சென்ற ஒருவருக்கும் இப்படி உறுதி செய்யப்பட்டுள்ளன.
அரியலூர் மற்றும் பெரம்பலூர் நகரம் மற்றும் மாவட்ட கிராம பகுதிகளில் இந்த மக்கள் பாதிப்படைந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் இவர்கள் பணியாற்றியவர்களாம்.

கடலூர் நிலவரம்
இதேபோல கடலூர் மாவட்டத்தில் 9 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவர்கள், கோயம்பேட்டில் வேலை பார்த்த தொழிலாளர்கள்தான். சொந்த ஊர்களுக்கு திரும்பியபோது, காவல்துறையினருக்கு தகவல் கிடைத்து சென்று சோதனை செய்தபோது இந்த தகவல் தெரிய வந்தது. கோயம்பேட்டில் இருந்து அரியலூர் சென்ற 40க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதையடுத்து 8 பேருடன் ஆரஞ்சு மண்டலமாக இருந்த அரியலூர் தற்போது சிவப்பு மண்டலமாக மாற உள்ளது.

தனிமை
கடலூர் மாவட்டத்தில், இன்னும் 600 தொழிலாளர்கள் அவர்களின் வீடுகளுக்குள் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். கோயம்பேடு மார்க்கெட்டில் பணியாற்றி விட்டு, யாரெல்லாம் வீடு திரும்பியுள்ளார்களோ, அவர்கள் அனைவரும் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் கேட்டுக் கொண்டுள்ளன. எனவே நீங்களும், யாராவது வெளியூரிலிருந்து வந்தால், அதுவும் கோயம்பேடு பகுதியிலிருந்து வந்தால், உங்கள் உள்ளூர் போலீசாருக்கு தகவல் கொடுக்க மறவாதீர்கள்.

கோயம்பேடு காரணம்
காய்கறிக்கு 10 ரூபாய் குறைவாக கிடைக்கும் என்பதால், மக்கள் கோயம்பேடு காய்கறி சந்தைக்கு குவிந்தனர். அப்படி குவிந்த மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை என்பதை நாம பல செய்திகளில் போட்டோக்களுடன் சுட்டிக் காட்டியுள்ளோம். அவர்கள் மூலமாகத்தான் இந்த தொழிலாளர்களுக்கும் கொரோனா பரவியிருக்கிறது. கோயம்பேடு சந்தையில் பணிபுரியும் 50 பேருக்கு சென்னையில் இதுவரை, கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதிலும், இன்று, ஒரே நாளில் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கிராமங்களுக்கும் பரப்பிய கொடுமை
அப்படி அவர்கள் பாதிக்கப்பட்டதோடு, இப்போது சொந்த மாவட்டங்களுக்கும் அதை பரப்பும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கடலூர் கொரோனாவிலிருந்து முழுமையாக மீண்டு வருவதாக நல்ல செய்தி கிடைத்த நிலையில், கோயம்பேடு மார்க்கெட் தொழிலாளர்களால், அந்த மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. கோயம்பேடு மார்க்கெட்டுடன் தொடர்புள்ள விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 7 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மதியம் நிலவரப்படி, கோயம்பேடு மார்க்கெட்டுடன் தொடர்புடையதாக தமிழகம் முழுக்க 88 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications