தமிழகத்தில் இன்று புதிதாக 231 பேருக்கு கொரோனா தொற்று... ஒருவர் உயிரிழப்பு
சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக மேலும் 231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 2,757 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 -ஆக அதிகரித்துள்ளது. அதில் இன்று மட்டும் ஒருவர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் தமிழகம் முழுவதும் கொரோனாவில் இருந்து மீண்டு 1341 பேர் நலமுடன் வீடு திரும்பியுள்ளார்கள். அதில் இன்று மட்டும் 29 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.
தமிழகத்திலேயே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது. இதுவரை சென்னையில் மட்டும் 1257 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. காற்றைவிட வேகமாக கொரோனா பரவி வருவதால் சென்னை மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர். கடந்த 4 நாட்களாகவே சென்னையில் கொரோனா பாதிப்பு அதிக எண்ணிக்கையில் உள்ள நிலையில் இன்று மட்டும் 174 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக அரியலூரில் 18 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 13 பேருக்கும், அதிக எண்ணிக்கையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கடலூர், திருப்பூர், விழுப்புரம், பெரம்பலூர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் தலா 2 பேருக்கும், சேலம் மற்றும் தேனி மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதிர்ச்சி!.. ஒரே நாளில் 174 பேருக்கு கொரோனா.. சென்னையில் கிடுகிடு உயர்வுக்கு காரணம் என்ன?
இதனிடையே தமிழகத்தில் 20 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று இல்லாதது குறிப்பிடத்தக்கது. கிருஷ்ணகிரியில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக இன்று காலை செய்திகள் வெளியாகிய நிலையில் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் கொரோனா தொற்று இல்லாத மாவட்டம் என்ற பெருமையை அடைகிறது கிருஷ்ணகிரி.