துணிச்சலான நடவடிக்கை.. மீட்டிங்கிற்கு பின் முதல்வர் எடுத்த முடிவு.. தமிழக எல்லைகளை மூடியது ஏன்?
தமிழகத்தின் எல்லைகளை கொரோனா பாதுகாப்பிற்காக மூடியது மிக முக்கியமான துணிச்சலான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
சென்னை: தமிழகத்தின் எல்லைகளை கொரோனா பாதுகாப்பிற்காக மூடியது மிக முக்கியமான துணிச்சலான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை இந்த வைரஸ் காரணமாக 223 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மொத்தம் 5 பேர் இந்த வைரசால் பலியாகி உள்ளனர்.
இந்த வைரஸை கட்டுப்படுத்த, நாளை நாடு முழுக்க மக்கள் தாமாக முன் வந்து ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்க வேண்டும், வீட்டிற்குள் இருக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி மக்கள் முன் தோன்றி இந்த ஜனதா ஊரடங்கு திட்டத்தை வெளிப்படுத்தினார்.
கனிகா கபூர்.. ஒரே பெண்ணால் குடியரசுத் தலைவர் முதல் எம்பிக்கள் வரை.. கொரோனா அச்சம்.. என்ன நடந்தது?
ஆலோசனை செய்தார்
அதன்பின் பிரதமர் மோடி நேற்று மாநில முதல்வர்கள் உடன் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆலோசனை செய்தார். அனைத்து மாநில முதல்வர்களும் கலந்து கொண்ட இந்த ஆலோசனையில் 9 மாநில முதல்வர்கள் பேச அனுமதிக்கப்பட்டார்கள். கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களை சேர்ந்த முதல்வர்கள் பேச அனுமதிக்கப்பட்டார்கள். கொரோனாவை எப்படி எதிர்கொள்வது என்று பிரதமர் மோடி இதில் ஆலோசனை வழங்கினார்.
மாநிலம்
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் தமிழக முதல்வர் இரண்டு முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டார். முதல் அறிவிப்பு தமிழகத்தில் இந்த ஊரடங்கு வரும் ஞாயிற்றுகிழமை கண்டிப்பாக கடைபிடிக்கப்படும் என்று கூறினார். இதற்காக தமிழகம் முழுக்க அன்று அரசு பேருந்துகள் இயக்கப்படாது. தனியார் பேருந்துகளை இயக்குவதை நிறுவனங்கள் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.
வேறு என்ன
அதேபோல் பிற மாநிலங்களிலிருந்து வாகனங்கள் தமிழகத்திற்குள் வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. மார்ச் 31 வரை தமிழக அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் எல்லைப் பகுதிகளான கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு பேருந்துகள் எதுவும் வர முடியாது. மொத்தமாக எல்லைகள் இதற்காக மூடப்படுகிறது. பெட்ரோல், டீசல், காய்கறிகள், பால், மருந்து, சரக்கு வாகனங்கள் மட்டும் இயக்கப்படும்.
மிக துணிச்சல்
முதல்வரின் இந்த நடவடிக்கை மிகவும் துணிச்சலாக பார்க்கப்படுகிறது. இந்தியாவில் தனது எல்லைகளை மொத்தமாக மூடும் ஒரே மாநிலம் தமிழகம்தான். இதன் மூலம் தமிழகம் பிற மாநிலங்களுக்கு மிக சிறந்த முன்னுதாரணமாக மாறி உள்ளது. தமிழகத்தின் எல்லைகளை கொரோனா பாதுகாப்பிற்காக மூடியது மிக முக்கியமாக நேரத்தில் சரியாக எடுக்கப்பட்ட நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
இறக்குமதி செய்யப்பட்டது
கொரோனா என்பது இறக்குமதி செய்யப்பட வைரஸ் ஆகும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் குறிப்பிட்டு இருந்தார். ஆம் அது வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் நபர்கள் மூலம்தான் பரவுகிறது. தமிழகத்தில் கொரோனா தாக்கிய மூன்று பேரும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் விமான நிலையங்களில் கடுமையான பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு சோதனைகள் நடந்து வருகிறது.
ஆனால் தடுக்க முடியாதது
விமானங்களில் வரும் பயணிகள் எல்லோரையும் எளிதாக சோதனை செய்து விட முடியும். ஆனால் கர்நாடகா, கேரளா, ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் நபர்களை எப்படி சோதனை செய்வது? பேருந்துகளில் தமிழகம் வரும் இவர்களை சோதனை செய்வது மிகவும் கடினம். முக்கியமாக கர்நாடகா, கேரளாவில்தான் பலருக்கு கொரோனா தாக்கியுள்ளது.
எப்படி கஷ்டம்
இந்த இரண்டு மாநிலங்களில் கொரோனா நோயாளிகள் பலர் உள்ளனர். இங்கிருந்து தமிழகம் வரும் எல்லோரையும் சோதனை செய்வது என்பது இயலாத காரியம். எல்லா பேருந்துகளிலும் சென்று சோதனை செய்ய முடியாது. ஒரே ஒருவருக்கு கொரோனா இருந்தால் கூட, பேருந்தில் இருக்கும் பலருக்கு கொரோனா பரவ வாய்ப்புள்ளது. இதை தடுப்பது கடினம். இதனால்தான் தற்போது மொத்தமாக எல்லைகள் மூடப்பட்டுள்ளது.
செம முடிவு
மற்ற மாநிலங்கள் எடுக்க தயங்கிய முடிவை தமிழக அரசு எடுத்துள்ளது. இதனால் தமிழகத்திற்கு பிற மாநிலங்களில் இருந்து வரும் மக்களின் எண்ணிக்கை மொத்தமாக குறையும். பேருந்து மூலம், மாநிலங்கள் வழியாக வைரஸ் பரவுவது மொத்தமாக குறைக்கப்படும். ரயில் நிலையங்களில் மட்டும் இந்த வைரசுக்கு எதிராக சோதனைகளை மேற்கொண்டால் போதும். கொரோனா வைரஸை எதிர்கொள்ள இது பெரிய அளவில் உதவும்.