இனியும் யோசனை கூடாது.. ஒரு மாசத்துக்கு இழுத்து மூடுங்கள் இந்தியாவை.. வேறு வழியே இல்லை!
ஊரடங்கினை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது
சென்னை: இன்னும் குறைந்தது ஒரு மாதத்துக்காவது இந்தியாவை முழுமையாக மூடியாக வேண்டும்... டெஸ்ட்டுகள் பெருமளவில் நடைபெறாததால் நமது பாதிப்பு எண்ணிக்கை குறைவாகவே தெரிகிறதே தவிர, இது தொற்று பாதித்தவர்கள் குறைவு என்ற கணக்கில் எடுத்து கொள்ளக்கூடாது.. அநேகமாக 3வது கட்ட கோட்டை தொட்டு விட்டோமா? என்ற அச்சத்தை நேற்றைய எண்ணிக்கை நமக்கு ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
ஊரடங்கு தளர்வு என்பது 2 நாளாக பரபரப்பான பேச்சாக உள்ளது.. ஆனால் தளர்வு கூடாது என்பதே பெரும்பாலானோரின் கருத்து.
ஊரடங்கு தளர்வு குறித்து மத்திய அரசு யோசிப்பதைவிட வேறு சில விவகாரங்கள் குறித்தும் யோசித்து முடிவெடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகவும் எழுந்து உள்ளது. தற்போது தமிழக அரசு மே 3ம் தேதி வரை ஊரடங்கைத் தளர்த்துவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளது.
துயரம்
"மக்கள் பிரச்சனை தெரிகிறது.. அவர்கள் துயரம் புரிகிறது" என்று பிரதமர் வீடியோ மூலம் அடிக்கடி சொன்னாலும், 2-ம் கட்ட நிதியை பற்றின பேச்சை இன்னும் காணோம்... அவசரம் புரிந்து உடனே வழங்கவேண்டியது நிதி.. காரணம் இது உயிர் பிரச்சனை, சாப்பாட்டு பிரச்சனை, வாழ்வாதார பிரச்சனை.. அதனால் அந்தந்த மாநிலத்துக்கு தேவையான நிதியினை மின்னல் வேகத்தில் வழங்க வேண்டியது மத்திய அரசின் தலையாய கடமை!!
உத்தரவாதம்
அதேபோல, இப்போதுள்ள 2ம் கட்ட ஊரடங்கும் முடிந்துவிட்டால், தொற்று முற்றிலும் ஒழிக்கப்பட்டு விடுமா? என்பதற்கு நம்மிடம் உத்தரவாதம் இல்லை.. அப்படி யாராலும் தரவும் முடியாது. காரணம், இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது.. இதுபோன்ற சூழலில் டெஸ்ட் கிட் கையிருப்பு மாநிலங்களில் குறைவாக உள்ளது.. குறைவான டெஸ்ட் கையிருப்பில் உள்ளபோது, ஊரடங்கினை எப்படி தளர்த்த முடியும்? எந்த இடத்தில் தளர்த்த முடியும்? என்பது மிகப்பெரிய கேள்விக்குறிதான்.
தளர்வு
எவ்வளவு பாதிப்பு என்பதை கண்டறிய துல்லியமான டேட்டா போதுமானதாக இல்லை.. உதாரணமாக தமிழகத்தை எடுத்து கொண்டால், ஒரு குறிப்பிட்ட இடம் தளர்த்தப்படுவதாகவே வைத்து கொள்வோம்.. அந்த இடத்தில் எவ்வளவு டெஸ்ட் செய்து முடிக்கப்பட்டிருக்கும்.. எத்தனை பேருக்கு நடத்தி முடிக்கப்பட்டிருக்கும்? என்பது தெரியாது. அந்த பகுதியில் இனிமேல் ஒருவருக்கும் தொற்று வர வாய்ப்பே இல்லை என்பதை உறுதியாக சொல்ல முடியும் பட்சத்தில்தான் தளர்வு என்ற பேச்சினையே எடுக்க வேண்டும்.
தனித்திருத்தல்
அது மட்டுமில்லை.. எந்த மாநிலமும் முழுமையாக கொரோனாவிலிருந்து விடுபடவில்லை.. கேரளா, கோவா போன்ற மாநிலங்களில் இது ஓரளவு சாத்தியம் என்றாலும் ஒட்டுமொத்தமாக இப்போதைக்கு தளர்வு தேவையில்லை. மக்களும் இன்னும் சரிவர தனித்திருத்தலை கடைப்பிடிப்பதாக தெரியவில்லை.. அடிமனசில் பய உணர்வு முழுமையாக போகவில்லை.. அலட்சியமும் நீடிக்கிறது.. இப்படிப்பட்ட நிலையில் ஆங்காங்கு ஊரடங்கை தளர்த்தினால் சரிவராது.. தளர்த்துவதைவிட மக்களை கட்டுப்படுத்தியாக வேண்டியது முக்கிய கடமையாக உள்ளது.
உணவு பொருட்கள்
இது எல்லாவற்றிற்கும் மேலாக ப.சிதம்பரம் முதல் பிற தலைவர்கள் வரை விடாமல் சொல்லி கொண்டிருப்பது, மத்திய அரசிடம் 5 கோடி டன் அரிசி இருக்கு, கோதுமை இருக்கு.. அதை பகிர்ந்தளிக்க வேண்டும் என்பதுதான்.. அதற்கான முயற்சியில் இனியாவது இறங்க வேண்டும்.. தேவைக்கு அதிகமான உணவுப்பொருட்கள் கிடங்கில் உள்ளதை கிராமப்புற கிடங்குகளில் வினியோகிக்கலாம். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும், வேலையிழந்து வருமானமிழந்து பசியால் தவிக்கும் ஏழைகளுக்கும் இது பேருதவியாக இருக்கும்!
கேள்விக்குறி
"பொருளாதாரத்தை அப்பறம் பார்த்துக்கலாம், மக்கள் உயிர்தான் முக்கியம்" என்றது மத்திய அரசு.. சமூக பரவல் ஒன்றுதான் கொரோனாவை கட்டுப்படுத்தும் என்றும் ஆரம்பத்தில் சொன்னது.. ஆனால் இவை இரண்டுமே இப்போது வரை கேள்விக்குறியாக உள்ளது!! பொருளாதாரத்தை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டு சுங்கச்சாவடி கட்டணம் வசூல் என்பது அதிர்ச்சியாக உள்ளது.. இது எப்படி மக்கள் நலன் சம்பந்தப்பட்டதாக இருக்க முடியும்?
அவசரம்
நம் தமிழகத்தை பொறுத்தவரை, நிலைமை புரியாமல் 3 நாளில் தொற்று ஒழியும் என்று முதல்வர் அவசரப்பட்டு சொல்லிவிட்டாரோ என்றுதான் தோன்றுகிறது.. அதைதான் எதிர்க்கட்சிகளும் விமர்சிக்க ஆரம்பித்துள்ளன.. எனினும் இந்த நேரத்தில் அரசியல் விவாதம் தேவையில்லை என்றாலும், டெஸ்ட்களை யார் யாருக்கு செய்ய வேண்டும் என்பதில் கணக்கு பார்க்க கூடாது. யாருக்கெல்லாம் பாதிப்போ அவங்களுக்கு மட்டும் டெஸ்ட் என்பதுகூடாது..அவர்களின் தொடர்புள்ள அனைவரையுமே டெஸ்ட்டுக்கு உட்படுத்த வேண்டி உள்ளது.
உபகரணங்கள்
36 ஆயிரம் கிட்களை எத்தனை மாவட்டத்துக்கு பிரித்து தந்து, எத்தனை பேருக்கு டெஸ்ட் எடுக்க முடியும் என்ற கேள்வி எழும் நிலையில், போதுமான மருத்துவ உபகரணங்களை மத்திய அரசு வழங்குவது கட்டாயமாகிறது. மேலும் டெல்லி மாநாட்டுக்கு போய்வந்தவர்களால்தான் தொற்று ஏற்பட்டுவிட்டது என்ற பேச்சுக்கு இனி இடமில்லை.. காரணம் பத்திரிகையாளர்களுக்கும் வந்துவிட்டது.. மருத்துவர் ஒருவரின் உயிரையும் காவு வாங்கிவிட்டது.. அதாவது சமூக பரவல் ஏற்பட்டு விட்டதோ என்ற அச்சத்தை இது ஏற்படுத்தி உள்ளது!!
தயக்கம்
மத்திய அரசும் சரி, மாநில அரசும் சரி.. தான் என்ற பாணியில்தான் இந்த விவகாரத்தை ஆரம்பத்தில் இருந்து கையாளுகிறது என்ற பேச்சு உள்ளது.. கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை சம்பந்தமாக எதிர்க்கட்சிகளை தமிழக இணைத்து கொள்ளவே இல்லை.. கேரளாவில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், பாஜக நபர்கள் ஒத்துழைத்து ஒன்றாக வேலை பார்க்கிறார்கள்.. ஆனால் தமிழகத்தில் ஒரு தயக்கம் இருப்பதாக தெரிகிறது.
ஆலோசனை
"நோயிலும் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கிறார்கள்" என்று விமர்சனமும் இதற்கு முன்வைக்கப்படுகிறது.. யாராக இருந்தாலும், இப்படிப்பட்ட நேரத்தில் யாரும் அரசியலாக்க முயல மாட்டார்கள்.. அந்த அளவுக்கு எண்ணம் உடையவர்கள் நம் அரசியல்வாதிகள் இல்லை.. ஒருவேளை அப்படி எதிராகவே செய்தாலும் மக்களுக்கும் அது உடனே தெரியவந்துவிடும்.. அதனால் மத்திய, மாநில அரசுகள் எதிர்க்கட்சிகள் மீது முழு நம்பிக்கை வைக்கவேண்டும். அவர்களின் ஆலோசனையை தயங்காமல் ஏற்க வேண்டும்.
சுய முடிவுகள்
அதேபோல, ஏழைகளுக்கு இலவச மாஸ்க்-கினை தருவதற்கு மத்திய அரசு ஏதாவது நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும். இது எல்லாவற்றிற்கும் மேலாக தளர்த்தல் என்ற முடிவினை அந்தந்த மாநில அரசுகளின் விருப்பத்துக்கே விட்டுவிட்டால் மேலும் சிறப்பாக இருக்கும். அனைத்தையுமே மத்திய அரசு முடிவு செய்வது என்பது இநத விஷயத்தில் சாத்தியம் இல்லை.. காரணம் மாநிலங்களில் மாவட்டங்களில் உள்ள நிலைமை அந்தந்த கலெக்டர்கள், மருத்துவ துறை அதிகாரிகளுக்குதான் நன்கு தெரியும்.. நேரடியாக பிரச்சனையை கையாண்டு வருபவர்கள்.. இது சம்பந்தமான புரிதல் முழுவதுமாக மத்திய அரசுக்கு தெரிய வாய்ப்பில்லை.
தளர்வு
மொத்தமாக இந்த விவகாரத்தை மத்திய அரசே அணுகுகிறபோதுதான் நிறைய நடைமுறை சிக்கல்கள் எழுகின்றன.. அதனால் சுயேச்சையான முடிவு மாநில அரசுகளிடமே விட்டுவிடலாம்.. ஊரடங்கும் சரி, தளர்வும் சரி!! இதையெல்லாம் செய்தால் மட்டுமே இந்தியா கொரோனாவிலிருந்து மீள முடியும்... இவைகளில் எதையும் செய்யாமல் தளர்வு என்ற பேச்சையே எடுக்க கூடாது.. ஒரே வழி, மொத்தமாக இழுத்து மூட வேண்டியதுதான்.. இந்தியாவை!!