கொரோனா.. தமிழகத்தில் 2,635 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.. 28 நாட்களுக்கு!
சென்னை: கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழகத்தில் 2635 பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக பொது சுகாதா இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
Recommended Video
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட விமான நிலையங்களில் இதுவரை ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 861 வெளிநாட்டு பயணிகள் சோதிக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, 2635 பேர் வீடுகளில் 28 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். இதில் 24 பேர் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்படுகிறர்கள்.
வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களில், அதிகபட்சமாக சென்னையில் 934 பேரும், குறைந்தபட்சமாக தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் மாவட்டங்களில் தலா 4 பேரும் இருக்கிறார்கள்.
கொரோனா பாதிப்புகள் குறித்து இதுவரை 140 பேரின் மாதிரிகள் எடுக்கப்பட்டு, ஆய்வகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாகவும், இதில், 139 மாதிரிகளின் முடிவுகள் வந்துள்ளது.
மேற்கு வங்கம், ஹரியானாவில் புதிதாக தலா ஒருவருக்கு கொரோனா பரவியது... இந்தியாவில் 139 ஆக உயர்வு
இதில், 138 பேருக்கு கொரோனா இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஒருவருக்கு நோய் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், ஒரு மாதிரியின் முடிவு மட்டும் வரவில்லை.
சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவருக்கு நோய் குணமடைந்த நிலையில், தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்., உடல்நிலை சீராக இருக்கிறது என்று சுகாதாரத்துறை இயக்குனரகம் அறிக்கையில் கூறியுள்ளது.
இதனிடையே நேற்று செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சி விஜயபாஸ்கர், "பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால், அங்கு பணியாற்றி வந்த தமிழர்கள் 14 பேர் நேற்று துபாய் வழியாக தமிழகம் திரும்பினார்கள்.. அவர்கள் அனைவருக்கும் கொரோனா அறிகுறி இருந்ததால் பூந்தமல்லியில் உள்ள அரசு பொது சுகாதார நிலையத்தில் தனி அறையில் வைக்கப்பட்டனர். அவர்களது ரத்த மாதிரிகளை சோதனை செய்தபோது, கொரோனா பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது" என்றார்.