டீம் இருந்தும்.. சுயமாக களமிறங்கிய முதல்வர்.. கொங்கில் டாப் கியரில் திமுக.. ஆடும் அதிமுக அஸ்திவாரம்?
சென்னை: கொங்கு மண்டலத்தில் நகராட்சி, மாநகராட்சி தேர்தலுக்கான பணிகளை திமுக தீவிரமாக முன்னெடுக்க தொடங்கிவிட்டது.
தமிழ்நாட்டில் நகராட்சி தேர்தலுக்கான பணிகளை திமுக முன்கூட்டியே தொடங்கி உள்ளது. உள்ளாட்சி தேர்தலில் இமாலய வெற்றிபெற்றது போல இந்த நகராட்சி, மாநகராட்சி தேர்தலிலும் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்பதில் திமுக முனைப்பாக இருக்கிறது. ஆளும் கட்சி என்பதால் இதில் எப்படியாவது அதிக இடங்களில் வெற்றிபெற வேண்டும் என்பதில் திமுக தீர்க்கமாக இருக்கிறது.
கொரோனா தடுப்பூசி இலக்கை எட்டாத 4 மாநிலங்கள்: மத்திய அமைச்சர் ஆலோசனை
முக்கியமாக மற்ற மண்டலங்களை விட கொங்கு மண்டலத்தில் எப்படியாவது நகராட்சி, மாநகராட்சி பதவிகளை வெல்ல வேண்டும் என்று என்பதில்தான் திமுக கவனம் செலுத்தி வருகிறது. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் கோவையில் திமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை.
திமுக
சட்டசபை தேர்தலில் அதிமுகவிற்கு எதிராக அலை நிலவியது. பொள்ளாச்சி பாலியல் வழக்கால் கொங்கு மண்டலத்திலும் அலை நிலவியது. ஆனால் வடமாவட்டங்கள், தென் மாவட்டங்களில் நன்றாக ரிசல்ட் பெற்ற திமுகவால் கொங்கு மண்டலத்தில் பெரிதாக வெற்றிபெற முடியவில்லை. ஏன் லோக்சபா தேர்தலில் 2019ல் கொங்கு மண்டலத்தில் திமுக பெற்ற வெற்றி அளவிற்கு கூட சட்டசபை தேர்தலில் பெற முடியவில்லை.
கட்டமைப்பு
இதனால்தான் சட்டசபை தேர்தல் முடிவில் இருந்தே முதல்வர் ஸ்டாலின் கோவைக்கும் மற்ற கொங்கு மண்டல மாவட்டங்களுக்கும் தனி கவனம் செலுத்தி வருகிறார். கொரோனா காலத்தில் நேரடியாக சென்று இரண்டு முறை ஆய்வுகளை செய்தார். கோவை குறித்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதோடு இன்னொரு பக்கம் செந்தில் பாலாஜியும் திமுகவை கொங்கு மண்டலத்தில் வலிமைப்படுத்தும் பணிகளில் தீவிரமாக இறங்கிவிட்டார். கொங்கு மண்டலத்தில் முதல்வர் ஸ்டாலினின் "குட் புக்கில்" இடம்பெற்று இருக்கும் அமைச்சர் செந்தில்பாலாஜி. தேர்தலுக்காக 3 மாதமாக இவர் தீவிரமாக அங்கு வேலை செய்து வருகிறார்.
வலிமை
நாடாளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தல் இரண்டிலும் நல்ல ரிசல்ட்டை கட்சிக்கு கரூரில் செந்தில் பாலாஜி தேடிக்கொடுத்தார். தேர்தலோடு முடியாமல் தேர்தலுக்கு பின்பும் கரூர் மற்றும் அருகாமை கொங்கு மாவட்டங்களில் திமுகவை வலிமைப்படுத்தும் பணிகளில் செந்தில் பாலாஜி மிக தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக பல அதிமுக கவுன்சலர்கள் செந்தில் பாலாஜி மூலம் திமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
மகேந்திரன்
இன்னொரு பக்கம் கோவையில் டாக்டர் மகேந்திரனும் திமுகவிற்காக சைலண்ட்டாக பணிகளை மேற்கொண்டு வருகிறாராம். தேர்தல் எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம். நகராட்சி, மாநகராட்சி பதவிகளை கைப்பற்ற வேண்டும். நமக்கு நெருக்கமானவர்களை மேயர் பதவியில் அமர வைக்க வேண்டும் என்பதற்காக மகேந்திரன் தரப்பு திமுகவிற்காக தீவிரமாக உழைத்துக் கொண்டு இருக்கிறதாம். கோவையில் திமுக வென்றால் மகேந்திரனுக்கு பெரிய பொறுப்புகள் கூட வரலாம். இதனால் திமுகவின் கொங்கு மண்டல நகராட்சி மாநகராட்சி தேர்தல் பணிகள் ஏற்கனவே unofficial ஆக தொடங்கிவிட்டது.
ஸ்டாலின்
இப்படி பெரிய டீம் உள்ளே வேலைகளை செய்து கொண்டு இருக்கும் போதுதான் முதல்வர் ஸ்டாலினும் சுயமாக கொங்கு மண்டலத்தில் களமிறங்கி உள்ளார். நேரடியாக நலத்திட்ட பணிகளை தொடங்கி வைக்கும் விதமாகவும், மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை வழங்கும் விதமாகவும் முதல்வர் ஸ்டாலின் நேரடியாக கோவை மற்றும் திருப்பூர் சென்று இருக்கிறார். மேயர், நகராட்சி தேர்தல்களை கவனத்தில் வைத்து முதல்வர் ஸ்டாலின் காய் நகர்த்த தொடங்கி இருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிகின்றன.
திமுக
முதல்வர் இரண்டு நாள் பயணத்தில் கோவை, திருப்பூர் மக்களை கவரும் வரும் நிறைய விஷயங்களை பேசினார். முக்கியமாக கோவையில் தாய்மார்களை கவரும் வகையில் முதல்வர் ஸ்டாலின் நேற்று பேசினார். நான் கால் வலித்தாலும் கோவை, திருப்பூரில் எல்லோருக்கும் நலத்திட்டங்கள் சென்று சேரும் வரை உழைப்பேன். மக்களுக்கு உதவிகள் சேர்வதுதான் முக்கியம். தாய்மார்கள் முகத்தில் தோன்றும் சிரிப்பே எனக்கான வெகுமதி என்று முதல்வர் பேசி இருந்தார்.
பயணம்
கோவை, திருப்பூர் பயணம், நலத்திட்ட அறிவிப்புகள் என்று முதல்வர் ஸ்டாலினும் கொங்கு மண்டல நகராட்சி, மாநகராட்சி தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்கி வைத்துவிட்டார். இதுபோக செந்தில்குமார் எம்பியும் சட்டசபை தேர்தலில் விட்டதை பிடிக்கும் வகையில் முக்கியமான உறுப்பினர்களை திமுக பக்கம் கொண்டு வரும் பணிகளை கடந்த 2 மாதமாக செய்து வருகிறார். சமீபத்தில் பாமக நிர்வாகிகள் பலர் திமுகவில் இணைய செந்தில் குமார் எம்பி காரணமாக இருந்தார்.
கொங்கு
மொத்தத்தில் கொங்கு மண்டலத்தில் திமுக அமைச்சர்கள், திமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள், முதல்வர் என்று எல்லோரும் களமிறங்கி பணிகளை தீவிரமாக கவனித்து வருகிறார்கள். ஆனால் அதிமுக இன்னும் பெரிய அளவில் தான் வலுவாக இருக்கும் கொங்கு மண்டலத்தில் செல்ப் எடுக்கவில்லை. கோ பேக் ஸ்டாலின் என்று அதிமுகவினர், பாஜகவினர் செய்த டிரெண்ட், முதல்வரின் விழா புறக்கணிப்பு தவிர கொங்கில் அதிமுக பெரிதாக எந்த அதிரடியையும் காட்டவில்லை.
ஏன்
கட்சிக்குள் தலைமைக்கு இடையே நிலவும் கோஷ்டி மோதல் காரணமாக கொங்கில் தேர்தல் பணிகளை கவனிக்க முடியாமல் அதிமுக திணறுகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த தேர்தல் அதிமுகவிற்கு கட்சி ரீதியாகவும், எடப்பாடி பழனிசாமிக்கு தனிப்பட்ட வகையிலும் முக்கியமானது. தன்னுடைய பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு உள்ளது. இதனால் கண்டிப்பாக திமுகவின் தேர்தல் பணிகளுக்கு பதிலடி தரும் விதமாக அதிமுக முக்கிய கூட்டங்களை விரைவில் நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.