5000 கோடிக்கு அக்ரிமென்ட்.. மின்சார கொள்முதலில் ஊழல்.. ஆவணங்களை வெளியிடுவேன்.. அண்ணாமலை எச்சரிக்கை
சென்னை: மின்சார கொள்முதலில் தமிழகத்தின் 'ஆளும் கட்சி' பிரமுகர் பலனடையும் விதமாக முறைகேடு அரங்கேற உள்ளதாகவும், அப்படி நடந்தால் ஆதாரங்களை வெளியிட பாஜக ரெடியாக உள்ளதாகவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில், அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தபோது இந்த விஷயத்திற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து அவர் பேட்டியளித்தார்.
இதோ அண்ணாமலை கூறியது அவரது வார்த்தைகளில்..
புரட்டாசினு ஒரு மாசம் விட்டு வச்சா... அநியாயத்துக்கு இப்டி வளர்ந்து நிக்குது இது!
5000 கோடி மதிப்பு
தமிழகத்தைச் சேர்ந்த ஒரு எனர்ஜி கம்பெனி, 4000 முதல் 5000 கோடி ஆர்டரை தமிழ்நாடு மின்சார வாரியத்துடன் மேற்கொள்ள உள்ளது. தற்போது அந்த கம்பெனி நொடிந்து போய் உள்ளது. ஆனால் ஆளும் கட்சி பிரமுகர் ஒருவர் அதை வாங்கி, தமிழ்நாடு மின்சார வாரியத்திடமிருந்து 4000 கோடி முதல் 5000 கோடி வரையில் ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டுள்ளார்.
முறைகேடு
இதை போன்ற சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆளும் கட்சியைச் சேர்ந்த சிலருக்கு லாபத்தை ஏற்படுத்த இந்த முயற்சி நடக்கிறது. கம்பெனி பெயரை இப்போது குறிப்பிட விரும்பவில்லை. அவர்கள் போகிற பாதை அதை நோக்கி போகிறது.
ஊழல்
நஷ்டமடைந்த நிறுவனத்தை வாங்கி, மின்சார வாரியத்திடமிருந்து ஒப்பந்தம் போட்டு லாபம் சம்பாதிக்க உள்ளனர். இதனால், மின்சார சப்ளை கூடி விடும் என்று காட்டுவார்கள். திமுக அரசுக்கு இது கை வந்த கலை.
ஆவணங்களை வெளியிடுவோம்
எனவே எச்சரிக்கையாக சொல்கிறேன். 2006-11 ஆட்சி கால பாதைக்கு திமுக போகாது என நம்புகிறேன். அப்படி போனால் எங்களுக்கு வேறு வழியில்லை. அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் ஆவணங்களை ஒவ்வொன்றாக வெளியிடுவோம். தமிழக மின்சாரத் துறை அமைச்சர் மற்றும் மின்சாரத் துறை அதிகாரிகளுக்கு இதை எச்சரிக்கையாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஒத்த ஓட்டு
மேலும், அண்ணாமலை கூறுகையில், ''துபாய்க்கு ஒருவர் சென்று அங்கு ஐ.பி.எல். நடக்கும்போது, ஒத்த ஓட்டு பாஜக என்று எழுதி காட்டியுள்ளார். யார் அந்த டிக்கெட்டை ஸ்பான்சர் செய்தார்கள் என்பதை எல்லாம் தாண்டி, அந்த ஒத்த ஓட்டை யார் வாங்கினாரோ அதற்கான காரணத்தையும் சொன்னால், அவருக்கும் கூட வெற்றிபெறுவதற்கு வாய்ப்பு கொடுக்கின்ற கட்சியாக பாஜக இருக்கும். வார்டு மெம்பர் தேர்தலில் 381 பேர் வெற்றி பெற்றுள்ளனர். கட்சியின் சார்பாக அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்'' என்றார்.