நடிகை மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்துங்க.. மத்திய குற்றப்பிரிவுக்கு நீதிமன்றம் உத்தரவு!
சென்னை: பட்டியலின மக்களை அவதூறாக பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுனை கைது செய்து ஆகஸ்ட் 11 ஆம் தேதி ஆஜர்படுத்த சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாடலிங் துறையில் இருந்த மீரா மிதுன், தானா சேர்ந்த கூட்டம், 8 தோட்டாக்கள், போதை ஏறி புத்தி மாறி என சில படங்களில் நடித்தார். பின்னர் விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் தமிழ் மக்கள் பாராட்டும் இயக்குநர் சேரன் மீது கேவலமான அவதூறுகளை சொல்லி கடும் விமர்சனத்துக்கு உள்ளானார்.

பேட்டி ஒன்றில் பட்டியலின மக்களை குறிப்பிட்டே மிக மோசமான விமர்சனங்களை முன்வைத்தார் மீரா மிதுன். பட்டியலின சமூகத்தினர் குற்றப்பின்னணி கொண்டவர்கள்; அப்படி இருப்பதால்தான் அவர்களை அனைவரும் விமர்சிக்கிறார். இத்தகைய சமூகத்தைச் சேர்ந்தவர்களை ஒட்டுமொத்தமாக சினிமா துறையில் இருந்தே வெளியேற்ற வேண்டும் என ஏகத்துக்கும் இழிவுபடுத்தி பேசி இருந்தார் மீரா மிதுன். அவரது இந்த பேச்சு திரைத்துறையில் மட்டுமல்ல பொதுவாக கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதனையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு உள்ளிட்ட பலரும் பல்வேறு காவல்நிலையங்களில் மீரா மிதுன் மீது எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி போலீசில் புகார் கொடுத்தனர். சென்னையில் வன்னி அரசு கொடுத்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு- சைபர் கிரைம் போலீசார் நடிகை மீரா மிதுன் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.
வன்கொடுமை தடுப்பு சட்டம், கலகம் செய்யத் தூண்டுதல், ஜாதி மதம் குறித்து பேசி கலகத்தை உருவாக்குதல் என ஜாமீனில் வெளிவர முடியாத 7 பிரிவுகளில் மீரா மிதுன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. நடிகை மீரா மிதுனை கைது செய்து ஆகஸ்ட் 11 ஆம் தேதி ஆஜர்படுத்த சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications