ஜெயலலிதா பிறந்தநாளில் அடாவடி.. மக்களுக்கு இடையூறு.. அதிமுக மாவட்ட செயலாளரின் ஜாமீன் மனு தள்ளுபடி
ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் குறித்து அவதூறு வீடியோக்கள் வெளியிடப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சென்னை: பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை கொண்டாடியதாக பதிவான வழக்கில், அதிமுக சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் உள்ளிட்ட மூவரின் முன் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி அதிமுகவினரால் தமிழகம் முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. சில மாவட்டங்களில் ஜெயலலிதாவின் பிறந்த நாளை ஒரு வாரத்துக்கு மேலாகவும் அதிமுகவினர் கொண்டாடி வருகிறார்கள்.
அந்த வகையில், கடந்த 5-ம் தேதி சென்னை ஆர்.கே.நகரில் அதிமுக சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தலைமையில் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறு
அப்போது போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக நூற்றுக்கணக்கான பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும், தமிழக முதல்வர் ஸ்டாலின் குறித்த அவதூறான கருத்துக்களை எல்.இ.டி. திரை வைத்து ஒளிபரப்பியதாகவும், இதில் எந்த பாதுகாப்பு விதிமுறைகளும் கடைப்பிடிக்கப்படவில்லை எனவும் கூறி திமுக வட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன் என்பவர் போலீஸில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் ஆர்.எஸ்.ராஜேஷ் உள்ளிட்ட 21 பேர் மீது தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

"வெற்றியை பொறுக்க முடியாமல் புகார்"
இந்நிலையில், இந்த வழக்கில் தங்களுக்கு முன் ஜாமீன் கோரி ஆர்.எஸ்.ராஜேஷ், தெற்கு மண்டல செயலாளர் எம்.என்.சீனிவாச பாலாஜி, வட்ட செயலாளர் எஸ்.ஆர்.அன்பு ஆகியோர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவானது, நீதிபதி எஸ்.அல்லி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அதிமுக பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியின் வெற்றியை பொறுக்காமல் இந்த புகார் அளிக்கப்பட்டிருப்பதாகவும், சாலையின் சந்திப்பில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்ட நிலையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்ததாக கூறுவது தவறான குற்றச்சாட்டு எனவும் வாதிட்டார்.

வீடியோ தாக்கல்
இதையடுத்து, புகார்தாரரான தமிழ்செல்வன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உரிய அனுமதி பெறாமலும், பாதுகாப்பு ஏற்பாடுகளை முறையாக செய்யாமலும் எல்இடி திரைகளை வைத்து, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டுள்ளதால் முன்ஜாமீன் வழங்கக் கூடாது என வாதிட்டார். பின்னர் காவல்துறை தரப்பில் இதுதொடர்பான வீடியோ பதிவுகளின் குறுந்தகடாக தாக்கல் செய்யப்பட்டது.

ஜாமீன் தள்ளுபடி
அனைத்து தரப்பு வாதங்களுக்கு பிறகு, குறுந்தகட்டை ஆய்வு செய்த நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். அதில், "பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நெருப்பை கக்கும் கலை நிகழ்ச்சி நடத்தியது; மக்கள் நடமாட்டம் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக பேனர்களை வைத்ததும் நிரூபணம் ஆகியுள்ளது. இவை அனைத்தும் உயர்நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளுக்கு முரணானது என்பதால், மூவரின் முன்ஜாமின் மனுவும் தள்ளுபடி செய்யப்படுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications