செந்தில் பாலாஜி வழக்கில் குற்றச்சாட்டு பதிவு இன்று இல்லை.. நேரில் ஆஜராகவும் வேண்டாம்.. நீதிமன்றம்
சென்னை: அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் விசாரணையை தொடங்க எதிர்ப்பு தெரிவித்த செந்தில் பாலாஜியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்து செந்தில் பாலாஜி மேல் முறையீடு செய்துள்ள நிலையில் இன்று குற்றச்சாட்டு பதிவு செய்யப்படாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் இதய அறுவை சிகிச்சை மேற்கொண்ட பிறகு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த ஆகஸ்ட் மாதம் செந்தில் பாலாஜிக்கு எதிராக குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறையினர் பதிவு செய்துள்ள, சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில், கடந்த ஜனவரி 22-ஆம் தேதி குற்றச்சாட்டுகள் பதிவு செய்வதற்காக தேதி நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், செந்தில் பாலாஜி சார்பில் ஒரு மனு அன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், போக்குவரத்து கழகங்களில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட 3 பிரதான வழக்குகளின் விசாரணை முடியும் வரை அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள வழக்கின் விசாரணையை துவங்கக் கூடாது.
இந்த விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த மனு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு கடந்த வாரம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில், மத்திய குற்றப்பிரிவு வழக்கில் விடுவிக்கப்படும் பட்சத்தில் அமலாக்கத்துறை வழக்கு செல்லாததாகிவிடும் என வாதிடப்பட்டது.
மேலும், இந்த வழக்கு தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்ட ஆணவங்களின் விவரங்களை தங்களுக்கு வழங்கவில்லை என்றும் இந்த வழக்கில் ஆவணங்கள் திரிக்கப்பட்டுள்ளதாகவும் செந்தில் பாலாஜி தரப்பில் புகார் கூறப்பட்டது. இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இந்த மனுவை நீதிபதி எஸ். அல்லி தள்ளுபடி செய்து நேற்று உத்தரவிட்டார்.
மேலும் அந்த தீர்ப்பில், அரிதான மற்றும் மிக சரியான காரணங்களை கொண்ட வழக்குகளை தவிர்த்து இதர வழக்குகளை எக்காரணம் கொண்டும் தொடர்ந்து ஒத்திவைக்க தேவையில்லை என உச்ச நீதிமன்றம் தெளிவாக கூறி உள்ளது. செந்தில் பாலாஜி மீதான குற்ற வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தாலும், அந்த வழக்கு அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கை விசாரிப்பதற்கு தடையாக இல்லை.
எனவே, அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கின் விசாரணையை தொடங்கக்கூடாது என செந்தில் பாலாஜி கோருவதில் எந்த அடிப்படையும் இல்லை. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் குற்றச்சாட்டை பதிவு செய்யலாம் என நீதிபதி கூறினார். இதற்கிடையே, செந்தில் பாலாஜி தரப்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.
இந்த நிலையில், செந்தில் பாலாஜி வழக்கில் இன்று குற்றச்சாட்டு பதிவு இல்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குற்றச்சாட்டு பதிவு இல்லை என்பதால் நேரில் ஆஜராக தேவையில்லை என்றும் நீதிமன்ற காவல் நீட்டிப்புக்காக காணொலியில் மட்டும் ஆஜர்படுத்தினால் போதும் எனவும் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications