கொரோனா தடுப்பூசி செலுத்த நேரம் நிர்ணயிக்கப்படவில்லை... இரவு 10 மணி வரை செலுத்தலாம்
கொரோனா தடுப்பூசி மையங்கள் செயல்படுவதற்கு நேரம் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் மனோகர் அகானி தெரிவித்துள்ளார்.
சென்னை: கொரோனா தடுப்பூசி மையங்கள் செயல்படுவதற்கு காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப் படவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் மனோகர் அகானி தெரிவித்துள்ளார், இரவு பத்து மணிவரைக்கும் தடுப்பூசி செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி முதல் நேற்று வரை 150 கோடிக்கும் மேற்பட்ட டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே கொரோனா தடுப்பூசி பயனாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா மூன்றாவது அலை தீவிரமடைந்துள்ளதால் தடுக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே என்ற விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

சிறார்களுக்கு தடுப்பூசி
கொரோனா 2 தவணை தடுப்பூசிகள் மற்றும் 15 வயது முதல் 18 வயது வரையிலான சிறார்களுக்கான தடுப்பூசி ஆகியவற்றை தொடர்ந்து நேற்று முதல் 60 வயதை தாண்டியவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசிகள் வழங்கும் நடவடிக்கையும் தொடங்கி உள்ளது. இதனையடுத்து கொரோனா தடுப்பூசி மையங்களில் மீண்டும் அதிக கூட்டம் கூடத் தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி
தமிழகத்தில் நடைபெறும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே கொரோனா தடுப்பூசி பயனாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகளிலும் மாலை 6 மணி வரை தடுப்பூசி செலுத்தப்படுகிறது. வார நாட்களில் அலுவலகம் செல்பவர்களுக்கு ஏதுவாக தடுப்பூசி செலுத்தும் நேரத்தை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இரவு 10 மணி வரை தடுப்பூசி
இந்நிலையில், கொரோனா தடுப்பூசி மையங்கள் செயல்படுவதற்கு காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப் படவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் மனோகர் அகானி தெரிவித்துள்ளார். தேவை மற்றும் கோரிக்கையின் அடிப்படையில் நேர நிர்ணயம் செய்து கொள்ளலாம் என்றும் இரவு 10 மணி வரை தகுதியானவர்களுக்கு கொரோனா தடுப்பூசியை கொரோனா தடுப்பூசி மையங்கள் வழங்கலாம் என்றும் மத்திய சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அனைத்து தடுப்பூசி மையங்களுக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தடுப்பூசி செலுத்துவது அவசியம்
கொரோனா வைரஸ் தினசரியும் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோரை பாதித்து வருகிறது. தமிழகத்தில் தினசரியும் 14 ஆயிரம் பேர் பாதிக்கப்படுகின்றனர். முககவசம் அணிவது கட்டாயம் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதே போல 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே புறநகர் ரயில்களில் பயணிக்க முடியும் எனவும் அதிக கூட்டம் கூடும் பொது இடங்களில் நடமாட முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. எனவே கொரோனாவில் இருந்து தப்பிக்க அனைவரும் தடுப்பூசி செலுத்தியே ஆக வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications