உணவுப் பொருட்கள் மூலமாக வீட்டிற்குள் நுழையும் கொரோனாவைத் தடுப்பது எப்படி?
சென்னை: தற்போது உணவுப் பொருட்கள் மூலம் வீட்டுற்குள் கொரோனா தொற்று நுழைந்து விடுகிறது. இப்படி உணவு பொருட்கள் மூலம் கொரோனா வீட்டிற்குள் நுழைவதை தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து மருத்துவர் முத்து செல்வக்குமார் அவர்கள் கூறும் விளக்கத்தை இப்போது பார்ப்போம்.
மருத்துவ பேராசிரியர் முத்து செல்லக்குமார் இது தொடர்பாக வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: "இந்த கொரோனா காலத்தில் மக்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் எழுந்து கொண்டே இருக்கிறது. உணவு மூலம் கொரோனா உடலுக்குள் போய் பாதிப்பை ஏற்படுத்துமா என்ற சந்தேகம் வந்திருக்கிறது.
நீங்கள் திருவிளையாடல் படம் பார்த்திருப்பீர்கள். அதில் சிவனாக சிவாஜியும், கருமி என்கிற மிகவும் கஷ்டப்பட கூடிய புலவராக நாகேசும் நடித்திருப்பார்கள். அதில் சிவாஜி, நாகேஷிடம் நீ கேள்வி கேட்கிறாயா நான் கேள்வி கேட்வா என்று கேட்பார். அதற்கு நாகேஷ் எனக்கு கேள்வி கேட்க மட்டும் தான் தெரியும் என்று கூறுவார். இந்த காட்சியை பார்த்திருப்பீர்கள். அதேபோல் தான் இப்போது டாக்டர்களிடம் மக்கள் கேள்வி கேட்டபடி உள்ளார்கள். ஆனால் ஒன்றும் பதில் சொல்ல முடியவில்லை. ஏனெனில் கொரோனா வைரஸ் பற்றி நிறைய தகவல்கள் புதிது புதிதாக வந்து கொண்டே இருக்கிறது.
கொரோனா எங்கு பரவுகிறது
மருந்துகள் ஆராய்ச்சி ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கும் அதேநேரம் சிகிச்சையும் அளித்துக் கொண்டிருக்கிறோம். கொரோனா வைரஸை கட்டுப்படுத்த என்னென்ன செய்ய வேண்டும் என்று அரசும் பல்வேறு வழிமுறைகளை வெளியிட்டு வருகிறது. அதை செய்திகளில் படித்திருப்பீர்கள். அதை கடைபிடித்தும் வருகிறீர்கள். இந்த வைரஸ் உணவு மூலமாக பரவுமா என்று கேட்டால், அதற்கு பதில் சொல்வதற்கு முன்பு, என்ன சொல்கிறேன் என்றால், உணவு மூலம் பரவுகிறதோ இல்லையோ, உணவு வாங்க போகும் இடத்தின் மூலம் பரவுகிறது என்று என்னால் உறுதியாக சொல்லிவிட முடியும்.
காசிமேடு மீன் மார்க்கெட்
நீங்கள் கோயம்பேடு மார்க்கெட்டில் பரவியதை பார்த்திருப்பீர்கள். அங்கு கிளஸ்டர், பெரிய பாதிப்பு ஏற்பட்டது. காய்கறி வாங்க வந்தவருக்கு ஏற்பட்ட பாதிப்பு அங்கு பலருக்கு பாதித்தது. அங்கிருந்து மேலும் பலருக்கு பாதித்தது. ஆக, உணவு வாங்க போகிற இடத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல், முகக்கவசம் அணியாமல், கூட்டமாக செல்வதால் கொரோனா பரவுகிறது. அதேபோல் தான் காசிமேடு மீன் மார்க்கெட்டில் ஞாயிறு லாக்டவுன் என்றால் சனிக்கிழமையே மொத்தமாக போய் கூட்டமாக வாங்கினார்கள். அங்கும் கொரோனா பரவியது. இதேபோல் மளிகைக்கடை, பழமுதிர்சோலை, காய்கறி கடைகளுக்கு மக்கள் கூட்டமாக மாஸ்க் அணியாமல் செல்வதால் கொரோனா பரவுகிறது. எனவே உணவை வாங்க போகும் இடத்தில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.
உணவு மூலம் பரவாது
இப்போது அடுத்த கேள்வி உணவு மூலம் கொரோனா பரவுமா என்றால், உலக சுகாதார மையமும் சரி, உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு ஆணையமும் சரி, நோய் தடுப்பு பாதுகாப்பு அமைப்பும் சரி, அல்லது நம் நாட்டில் உள்ள உணவு பாதுகாப்பு ஆணையமும் சரி, எல்லோரும் என்ன சொல்கிறார்கள் என்றால், உணவு மூலம் கொரோனா பரவ வாய்ப்பு மிகக்குறைவு என்று தான் கூறுகிறார்கள். குறிப்பாக இந்த நோய் பற்றி ஆராய்ச்சி செய்யக்கூடிய தொற்றுநோயியல் நிபுணர்கள் (epidemiologist), வைரஸ்களை ஆய்வு செய்யக்கூடிய அறிஞர்கள், வைராலாஜிஸ்ட், எல்லோரும் சொல்வது என்னவென்றால், உணவு மூலமாக கொரோனா பரவுவது நிரூபிக்கப்படவில்லை. ஒருவர் குறிப்பிட்ட உணவை சாப்பிட்டு அதன் மூலம் கொரோனா தொற்று பரவியதாக நிரூபிக்கப்படவில்லை என்று சொல்கிறார்கள்.
உணவின் பேக்கில் இருக்கலாம்
பொதுவாக கொரோனா, சளி, இருமல் மூலமாக பரவுகிறது. அல்லது ஒருவருடன பேசும் போது பரவுகிறது. இல்லாவிட்டால் அவர் இருமி, தும்மிய பின்னர் பயன்படுத்திய பொருட்களை பயன்படுத்திய போது கொரோனா பரவியது. ஆனால் கொரோனா உணவு சாப்பிட்டதால் பரவியதாக தகவல் இல்லை. ஆனால் இதில் உள்ள பிரச்சனை என்னவென்றால் உணவு பொருட்கள் பேக்கிங்கில் வருகிறது. அதில் கூட சில நாட்கள் கொரோனா தங்கியிருக்கலாம். பல்வேறு பிளாஸ்டிக் பொருட்களில் மூன்று நாள் வரை கூட இருக்கலாம். ஒரு வேளை அதைத்தொட்டுவிட்டு, கண்ணையோ, மூக்கையோ, வாயையோ தொடும் போது கொரோனா பரவ வாய்ப்பு உள்ளது. ஆனால் நேரடியாக உணவு சாப்பிடுவதால் கொரோனா பரவுவது இல்லை. எனவே மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மூன்று விதமாக வாங்குகிறோம்
உணவை வாங்க செல்வதை மூன்று விதமாக பார்க்கிறோம். ஒன்று கடைக்கு நேராக செல்கிறார். இன்னொன்று வீட்டு வாசலுக்கு பொருட்கள் வருகிறது. மூன்றாவது ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்குகிறார்கள். கடைகளுக்கு செல்லும் போது பிரச்சனையாகிறது. அங்கு கூட்டமாக இருக்கிறது. ஒருவருக்கு ஒருவர் நெருக்கமாக நின்று பொருட்கள் வாங்குகிறார்கள். அங்கு சிலர் மாஸ்க் அணியாமல் வருகிறார்கள்..பக்கத்தில் போய் பேச வேண்டியுள்ளது. பண பரிவர்த்தனை மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஏடிஎம் கார்டை எடுத்து பயன்படுத்த வேண்டியுள்ளது. அதை நீங்கள் குறைக்க வேண்டும். வீட்டுக்கு அருகில் வந்து உணவு விற்பவர் பல பகுதிகளுக்கு செல்கிறார். எனவே அவரிடம் இடைவெளியை பின்பற்ற வேண்டும். காய்கறி உள்ளிட்ட பொருட்களை வாங்கும் போது தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் போது வீட்டு வாசலில் வைத்திருக்கிறார்கள். அதனால் கொரோனா பரவ வாய்ப்பு இல்லை. ஏற்கனவே பணத்தை ஆன்லைனில் நீங்கள் செலுத்தி இருப்பதால் நேரில் சந்தித்து பேச வாய்ப்பு இல்லை. எனவே இது பாதுகாப்பான முறை. இதை யாரெல்லாம் செய்ய முடியுமோ செய்யலாம்.
சோப்பாயிலும் போடக்கூடாது
அப்படி வீட்டுக்கு உணவுப்பொருட்கள் வாங்கி கொண்டு வந்த பிறகு, காய்கறிகளை சோப்பு போட்டு சிலர் கழுகிறார்கள், சிலர் சோப்பாயில் (சானிடைசர்) பயன்படுத்துகிறார்கள். சிலர் காரப்பொருட்கள் போடுகிறார்கள். சிலர் வினிகர் போட்டு கழுவுகிறார்கள். இதெல்லாம் விட வேண்டும். இது உடலுக்கு கெடுதியானது. பல்வேறு விதமான சோப்புகளை போட்டால் அதில் பார்மால்டிகைடு (formaldehyde) இருக்கும். அது காய்கறிகளின் சிறிய துளைகள் வழியாக உள்ளே செல்ல வாய்ப்பு உள்ளது. அதை சாப்பிடும் போது வாந்தி, வயிற்று வலி போன்றவை ஏற்படலாம். கொரோனாவிலும் இதே பாதிப்புகள் வரும். எனவே எதனால் இந்த பாதிப்பு ஏற்பட்டது என்று தெரியாமல் போய்விடும். எனவே இதை தவிர்த்து விடுங்கள்.
சுடு தண்ணீரில் கழுவலாம்
சரி எப்படி தடுப்பது? அதைத்தான் இப்போது சொல்லப்போகிறேன். வீட்டுக்கு முன்பு காய்கறி கொண்டு வந்தாச்சு, வீட்டுக்கு வெளியே செல்லும் போது, முககவசம் அணிந்து கொள்ளுங்கள். கைகளை சோப்புபோட்டு கழுவுகள், கையில் கிளவுஸ் போட்டு கொள்ளுங்கள் வேண்டிய காய்கறிகளை எடுங்கள். அதை ஒரு பாத்திரத்தில் போட்டுவிடுங்கள். உணவு பேக்குகளையும் அப்படியே எடுத்து போடுங்கள் அதன்பிறகு அந்த கிளவுஸை கழட்டி போடுங்கள் அப்படியே கையை கழுவி விடுங்கள். நார்மலாக வீடுகளில் என்ன செய்கிறார்கள் என்றால், மஞ்சள் மற்றும் உப்பு நீரில் காய்கறி பழங்களை கழுவுகிறார்கள். அப்படி செய்து கொள்ளலாம். அதன்பிறகு சுடுதண்ணீர் நன்றாக கொதிக்க வைத்து , அதில் காய்கறிகளை போட்டு , சில நிமிடங்கள் வைத்துவிட்டு (வீடியோவில் திருத்தம் சில நிமிடங்கள்) அதை சுத்தமான பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ளலாம். அதன்பிறகு மஞ்சள் பாத்திரம், சுடு தண்ணீர் வைத்த பாத்திரம் எல்லாவற்றையும் சுத்தமாக கழுவி விடுங்கள். அதன்பிறகு நீங்கள் எடுத்து வைத்துள்ள காய்கறி, பழங்களை தைரியமாக பயன்படுத்தலாம்" இவ்வாறு கூறினார். மேலும் மருத்துவர் கூறும் பல தகவல்களை வீடியோவில பாருங்கள்.