லட்டில் மாட்டுக் கொழுப்பு? பாலின் தரம் ஏ1 தானா? எக்ஸ் ஐபிஎஸ் அதிகாரி தரும் தரமான விளக்கம்?
சென்னை: திருப்பதி லட்டில் மாட்டு கொழுப்பு கலக்கப்பட்டதாக எழுந்துள்ள புகார் குறித்து முன்னாள் ஆவின் லஞ்ச ஒழிப்பு பிரிவு ஐஜி ரவி ஐபிஎஸ் சில கருத்துகளை முன்வைத்துள்ளார்.
பாஜக ஒடிசாவில் பூரி ஜெகன்நாதரை வைத்து அரசியல் செய்து ஆட்சிக்கு வந்தது. இப்போது ஆந்திராவில் புதியதாக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த தெலுங்கு தேசம் கட்சி திருப்பதி ஏழுமலையானை வைத்து ஒரு புதிய அரசியல் சர்ச்சையைத் தொடங்கி இருக்கிறது. பல ஆண்டுகளாக மக்கள் விரும்பு உட்கொண்டு வரும் திருப்பதி லட்டில் மாட்டு கொழுப்பு கலக்கப்பட்டுள்ளது என்று ஒரு புதிய குண்டை முதல்வர் சந்திரபாபு நாயுடு தூக்கிப் போட்டுள்ளார். இந்தக் கலப்படம் கடந்தகால ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில்தான் அரங்கேறி இருக்கிறது என்றும் அவர் குற்றஞ்சாட்டி இருக்கிறார்.

இந்தப் புகார் குறித்து முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, "சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள். கடவுளைக்கூட அரசியலுக்குள் இழுத்து வந்து திசை திருப்பும் வல்லமை படைத்தவர் அவர். இப்படி எல்லாம் பொய் சொல்வது தர்மமா?" என்று கேட்டிருக்கிறார். அதேபோன்று கோயிலின் முன்னாள் தலைமை அர்ச்சகர் ரமண தீட்சதலு, "திருப்பதி கோயிலில் வழங்கப்படும் பிரசாதங்களில் சில அபசாரங்கள் நடந்துள்ளன. லட்டில் சேர்க்கப்படும் நெய்யில் சில ஜந்துக்களின் கொழுப்பு கலக்கப்பட்டுள்ளது. இதற்கான பரிகாரத்தைப் பெருமாளே நிர்ணயிப்பார்" என ஆதங்கப்பட்டுப் பேசி இருந்தார்.
இந்த விவகாரம் குறித்துப் பேசியுள்ள ராகுல் காந்தி, “திருப்பதி கோயில் பிரசாத சர்ச்சை குறித்த செய்திகள் கவலை அளிக்கின்றன. இது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பெருமாள் பக்தரையும் காயப்படுத்தும். இந்தியா முழுவதும் உள்ள அதிகாரிகள் நமது மதத் தலங்களின் புனிதத்தைப் பாதுகாக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.
இந்நிலையில் தமிழக ஆவின் லஞ்ச ஒழிப்புப் பிரிவில் ஐஜி ஆக பணியாற்றிய அனுபவம் பெற்றவர். அது மட்டும் அல்ல சொந்தமாக அவரது கிராமத்தில் மாட்டுப் பண்ணை வைத்து நடத்தி வருபவர். அவர் திருப்பதி லட்டு விவகாரம் பற்றி சில விளக்கங்களை அளித்துள்ளார். அவர் பேசுகையில், "நம்ம வீட்டில் செய்கின்ற லட்டுக்கும் திருப்பதியில் செய்யக் கூடிய லட்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது. திருப்பதியில் 2 விதமான லட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. ஒன்று பெரிய பந்து போல இருக்கும். மற்றொன்று சின்ன கிரிக்கெட் பந்துபோல இருக்கும். பொதுவாக வீடுகளில் செய்கின்ற லட்டு பூந்தி போன்று செய்து அதில் சர்க்கரை பாகு, நெய்யைக் கலப்பார்கள். இதன் சுவை ஒரு அளவுக்குத்தான் இருக்கும்.
ஆனால், திருப்பதி லட்டில் கலக்கப்படும் நெய் மிகத் தரமானது. அதன் சுவையைக் கூட்டுவதற்காக முதல் தரமான நெய்யைத்தான் கலப்பார்கள். இந்த லட்டை தயாரிக்கப் பல காலமாக நந்தினி என்ற நிறுவனம்தான் நெய்யை உற்பத்தி செய்து வழங்கி வருகிறது. இவர்கள் தயாரிப்பில் ஏ1 மில்க், ஏ2 மில்க் என்று 2 வகையான பால் உள்ளன. அது என்ன ஏ1? ஏ2? என சிலர் கேட்கலாம். வெளிநாட்டு மாடுகளிலிருந்து தயாரிக்கப்படும் தரமான பால் ஏ1 ஆகும். நாட்டு மாடுகளிலிருந்து பெறப்படும் பால் ஏ2 ஆகும். பாலில் உள்ள புரோட்டீன் அடர்த்தியை வைத்து இந்தத் தரம் பிரிக்கப்படுகிறது. இதை வைத்துத்தான் திருப்பதி லட்டில் பயன்படுத்தப்படும் பால் ஏ ஒன்னா? அல்லது ஏ2 ஆ? என்ற சர்ச்சை பல காலமாக ஒரு பக்கம் நடந்து வருகிறது.
திருப்பதி லட்டு செய்வதற்காக நெய் வாங்குவதற்காக ஒப்பந்தம் ஆறு மாதத்திற்கு ஒருமுறை விடப்படுகிறது. இந்தக் குறிப்பிட்ட நிறுவனம் கர்நாடகாவில் இருக்கிறது. ஆனால், ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சிக்கு வந்த பிறகு இந்த நிறுவனத்திலிருந்து நெய் கொள்முதல் செய்வதை நிறுத்தினார். யார் குறைவான விலைக்கு ஒப்பந்தத்தைக் கோருகிறார்களோ அவர்களைத் தேர்வு செய்யார்கள். அதன் மூலம் திண்டுக்கல்லைச் சேர்ந்த நிறுவனம் அந்த ஒப்பந்தத்தை எடுத்தது. ஜூன் மாதம் ஆந்திராவில் ஆட்சி மாறியதால், இந்த ஒப்பந்தம் நிறுத்தப்பட்டது. மீண்டும் சந்திரபாபு நாயுடு நந்தினியிடம் இருந்து நெய்யைக் கொள்முதல் செய்யத் தொடங்கினார்கள். இதனிடையே தான் ஜெகன்மோகன் ஆட்சிக்காலத்தில் தயாரான லட்டின் சுவை தரமாக இல்லை எனப் புகார் வந்தது. உடனே அதைப் பரிசோதனைக்கான அனுப்பினார்கள்.
குஜராத் மாநிலத்தில் நேஷனல் டெய்ரி டெவல்ப்மெண்ட் போர்டுக்கு லட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டது. இங்கே லட்டை பரிசோதித்ததில் மாட்டின் கொழுப்பு கலந்துள்ளது எனக் கண்டறியப்பட்டதாகச் சொல்கிறார்கள். கூடவே மீன் எண்ணெய் கலக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இந்தப் பொருட்கள் யாவும் குறைந்த அளவில் கலக்கப்பட்டுள்ளது என்று பரிசோதனை செய்த லேப் அறிக்கை கொடுத்துள்ளது.

இதை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவே பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். கால்நடை மருத்துவர்களிடம் கேட்டால், இது மாடு உட்கொள்ளும் பொருட்களில் இறைச்சியானது கலந்திருந்தால், அதன் மூலம் பாலில் இந்தக் கலப்பு ஏற்பட்டிருக்கலாம் என்கிறார்கள். இது கலப்படம் செய்யப்பட்ட நெய்யாக இருந்தால் இப்படி நேரலாம் என்றும் சந்தேகத்தை எழுப்புகிறார்கள்.
திருப்பதியில் லட்டு தயாரிப்பதற்காக மாதம் 42 ஆயிரம் கிலோ நெய் தேவைப்படுகிறது. வருடத்திற்கு 5 லட்சம் கிலோ நெய் தேவைப்படுகிறது. ஒரு நாளைக்குக் கிட்டத்தட்ட மூன்றரை லட்சம் லட்டுகள் தயாராகின்றன. ஒரு மாதம் தயாராகும் லட்டுக்கு 42 கிலோ நெய், 22 ஆயிரம் கிலோ முந்திரிப் பருப்பு, 15 ஆயிரம் கிலோ உலர் திராட்சை, 5 ஆயிரம் கிலோ ஏலக்காய் தேவையாகிறது என ஒரு கணக்கு சொல்கிறார்கள். இதனால்தான் இதை ஸ்ரீவாரி லட்டு என்கிறார்கள். இந்த லட்டை வேறு ஒருவரால் தயாரிக்க முடியாது. இதற்கு புவிசார் குறியீடு வாங்கப்பட்டுள்ளது.
திருப்பதி திருமலா தேவஸ்தானம் நிர்வாகம்தான் இதைத் தயாரிக்கும் பணிகளைச் செய்கிறது. அதன் செயலாளர்தான் அனைத்து நிர்வாகம் சம்பந்தமான நடவடிக்கை சார்ந்த முடிவை எடுப்பார். அவர்கள் கடும் நடவடிக்கை எடுப்பார்கள். மக்கள் சாப்பிடும் உணவுப் பொருட்களில் செய்யப்படும் கலப்படம் பல வகைகளில் நடைபெறுகிறது. அதைத் தடுக்க வேண்டும். அதற்கான உரியப் பரிசோதனை நிறுவனங்கள், அதிகாரிகள் உள்ளனர். அவர்கள் தங்களின் கடமையைச் சரியாகச் செய்ய வேண்டும்” என்கிறார்.












Click it and Unblock the Notifications