காலையில் பலத்த சோகம்.. மாலையில் கரைபுரண்ட உற்சாகம்! பனையூரில் மொத்தமாக மாறிய காட்சிகள்
சென்னை: விஜய் ஆட்சி அமைப்பாரா? அவருக்கு மார்க்சிஸ்ட் கட்சிகள் ஆதரவு அளிக்குமா? என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான சூழல் நிலவிய நிலையில், இன்று காலை முதலே விஜய்யின் பனையூர் வீட்டின் முன்பு தவெகவினர் சோகத்துடன் காத்து கிடந்தனர். இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தவெகவுக்கு நிபந்தனையின்றி ஆதரவினை வழங்குவதாக தெரிவித்ததையடுத்து விஜய் வீட்டு முன்பு நின்றிருந்த தவெகவினர் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். டிவிகே.. டிவிகே.. என கத்தியபடி உற்சாகத்தில் ஈடுபட்டனர்.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும் இன்னும் ஆட்சி அமைக்க முடியாத நிலையில் இருந்தது. இருந்ததால் தவெகவினர் கவலையில் உறைந்தனர்.

விஜய்க்கு பெரும்பான்மை இல்லை
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் கடந்த 4 ஆம் தேதி வெளியான நிலையில் புதிய ஆட்சி இன்னும் பதவி ஏற்க முடியாத இழுபறியான நிலை ஏற்பட்டது. யாருக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.
இதையடுத்து காங்கிரஸ் கட்சி விஜய்க்கு நிபந்தனையுடன் ஆதரவு அளித்தது. ஆனால் ஆளுநர் விஜய்யை பதவியேற்க அழைக்கவில்லை. விஜய் பெரும்பான்மையை காட்டவில்லை. அப்படி இருக்கும் போது நாங்கள் எப்படி ஆட்சி அமைக்க அழைக்க முடியும் என ஆளுநர் தெரிவித்ததால் மீண்டும் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.
சோகத்தில் தவெகவினர்
இந்திய கம்யூனிஸ்டுகள் மற்றும் விசிக விஜய்க்கு ஆதரவு அளிக்குமா என்பதும் தெரியாமல் இருந்தது. இது ஒருபுறம் இருக்க அதிமுக - திமுக கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க உள்ளதாக பரவிய தகவலால் விஜய் முதல்வர் ஆக முடியாதோ என நினைத்து அவரது ரசிகர்கள் மற்றும் தவெக தொண்டர்கள் ஆழ்ந்த கவலையில் உறைந்தனர்.
ஏற்கனவே நேற்று காலையில் விஜய் பதவியேற்பு விழா நடக்க இருந்து கடைசியில் ரத்து செய்யப்பட்டதால் வருத்தத்தில் இருந்த தவெகவினருக்கு இந்த தகவல் மேலும் அதிர்ச்சியை கொடுத்தது. இதனால் தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஆதரவு அளிக்குமா என அவரது தொண்டர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்து இருந்தனர். மேலும் மதசார்பற்ற கூட்டணியின் உருவமாகவே விஜய்யும் இருப்பதனால் ஆதரவு அளிக்கும் என ஒரு தரப்பினரும் நம்பிக்கையில் இருந்தனர்.
உற்சாகத்தில் தவெகவினர்
இந்த நிலையில் தான் இன்று மாலை 4 மணியளவில் இந்திய கம்யூனிஸ்டு தவெகவுக்கு நிபந்தனையின்றி ஆதரவு அளிப்பதாக கூறியது. இந்த தகவல் கிடைத்ததுமே விஜய் வீட்டின் மும்பு நின்ற தவெக தொண்டர்கள், விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் ஈடுபட்டனர். டிவிகே.. டிவிகே.. தளபதி.. தளபதி.. முதல்வர் விஜய்.. என கத்தி உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய கம்யூனிஸ்டு ஆதரவு அளித்த நிலையில் அதை தொடர்ந்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியும் விஜய்யின் தவெகவுக்கு நிபந்தனையின்றி ஆதரவு அளிப்பதாக தெரிவித்தது. இதனால் தவெகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர். கம்யூனிஸ்டு முடிவுகளே எங்களது முடிவு என ஏற்கனவே திருமாவளவன் கூறியிருந்த நிலையில் விசிகவும் விஜய்க்கு நிபந்தனையின்றி ஆதரவு அளித்ததாக கூறப்படுகிறது.
ஆளுநரை சந்திக்கிறார்
இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. இதனால் விசிகவையும் சேர்த்தால் விஜய்க்கு பெரும்பான்மை கிடைத்துவிட்டது. இன்று மாலை 6 மணியளவில் விசிகவினர் தங்களது ஆதரவு கடிதத்தினை விஜய்யிடம் வழங்குவதாகவும் தகவல் வெளியானது. இதையடுத்து இந்த ஆதரவு கடிதங்களை விஜய் இன்று மாலை 6 மணிக்கு ஆளுநரை சந்தித்து ஆதரவு கடித்தை கொடுத்து ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு கூறுவார் என தகவல் வெளியாகி உள்ளது.














Click it and Unblock the Notifications