"இந்த பாஜகவே இப்படித்தான்.. ஆளுநர்கள் நியமனம் ஏன் தெரியுமா?".. இரா. முத்தரசன் தந்த புது விளக்கம்..!
பாஜகவை கம்யூனிஸ்ட் கட்சி முத்தரசன் விமர்சித்துள்ளார்
சென்னை: பாஜக பின்னடைவை சந்தித்து வருகிறது.. அதை சரி கட்டுவதற்காக தான் மத்திய அமைச்சர்களை மாற்றுவது, மாநில முதல்வர்களை மாற்றுவது, தோற்றவர்களுக்கு கவர்னர் பதவி அளிப்பது, புதிய கவனர்களை நியமிப்பது என்று புதிது புதிதாக தலைவர்களை கொண்டு வருகின்றனர்... இப்படி தான் அந்த கட்சி இன்னைக்கு உள்ளது என்று கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் இரா.முத்தரசன் விமர்சித்துள்ளார்.
கடந்த வாரம், தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என் ரவியை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து தமிழக அரசியலில் பரபரப்பு தொற்றி கொண்டது. நாகாலாந்து ஆளுநராக மத்திய அரசால் நியமிக்கப்பட்டார் ரவி.. 2 வருடங்கள் நாகாலாந்தில் ஆளுநராக பணியாற்றிய நிலையில், இப்போது தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்..

ஸ்டாலின்
இந்த நியமனத்தை, தமிழக முதல்வர் ஸ்டாலின் அன்றைய தினமே வரவேற்றிருந்தார்.. நேற்றுகூட, சென்னை வந்திருந்த புது ஆளுநரை விமான நிலையத்தில் முதல்வர் வரவேற்றிருந்தார்.. நாளை ஆர்.என்.ரவி ஆளுநராக பதவியேற்று கொள்ளவுள்ளார்.. அவருக்கு சென்னை ஹைகோர்ட் தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார்..

நெருக்கடி
மற்றொருபுறம் புதிய ஆளுநரின் நியமனம் குறித்து சோஷியல் மீடியாவில் பல்வேறு கருத்துக்களும், விவாதங்களும் நடந்து கொண்டே இருக்கின்றன. அதற்கு காரணம், திமுக ஆட்சி இப்போதுதான் தற்போதுதான் அமைந்திருக்கிறது.. எனவே, மாநில அரசுடன் அவர் இணக்கமாக செல்வாரா, நெருக்கடியை ஏற்படுத்துவாரா? பாஜக அரசுக்கு ஆதரவாக செயல்படுவாரா? என்பன போன்ற சந்தேகங்களும் எழுந்தபடியே உள்ளன..

வைகோ
திமுக கூட்டணியில் மதிமுக உள்ள நிலையில், அதன் பொதுச்செயலாளர் வைகோ நேற்று முன்தினம் ஒரு பேட்டி தந்திருந்தார். அதில், "புதிதாக பதவி ஏற்க இருக்கும் ஆளுநர் முந்தைய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் செய்த தவறை செய்ய மாட்டார் என்று நினைக்கிறேன்" என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நம்பிக்கையை வெளிப்படுத்தியிருந்தார்.

இரா.முத்தரசன்
இப்போது மற்றொரு கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட்டும் ஆளுநர் நியமனம் குறித்து கருத்து தெரிவித்துள்ளதுடன், கோரிக்கை ஒன்றையும் இப்போதே வைத்துள்ளது.. திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது அவர் "தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக மசோதா தாக்கல் செய்யப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது...

தலைவர்கள்
புதிதாக பொறுப்பேற்கவுள்ள ஆளுநர், காலதாமதமின்றி உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும். ஒப்புதல் வழங்காமல் மாணவ, மாணவிகளை வஞ்சித்தால் போராட்டம் தீவிரமடையும். நாடு முழுவதும் பாஜக பின்னடைவை சந்தித்து வருகிறது... அதை சரி கட்டுவதற்காக தான் மத்திய அமைச்சர்களை மாற்றுவது, மாநில முதல்வர்களை மாற்றுவது, தோற்றவர்களுக்கு கவர்னர் பதவி அளிப்பது, புதிய கவனர்களை நியமிப்பது என்று புதிது புதிதாக தலைவர்களை கொண்டு வருகின்றனர்... இப்படி தான் அந்த கட்சி இன்னைக்கு உள்ளது..

கொடநாடு
லஞ்ச ஒழிப்பு புகாரில் சோதனைக்கு செல்லும் அதிகாரிகளை தடுக்க முயற்சிக்கும் நோக்கில் போராட்டங்களில் ஈடுபடுவது குற்றமாகும்... பிரச்னையை திசை திருப்புவதற்கான முயற்சி தான் இந்த போராட்டம்... ஆனால், திசை திருப்ப முடியாது... கொடநாடு விவகாரத்தில் மடியில் கனமில்லை என்றால் வழியில் பயம் எதற்கு? யாராக இருந்தாலும் குற்றம் செய்யாவிட்டால் ஏன் பயப்பட வேண்டும்?" என்றார்.

பாஜக
4 நாட்களுக்கு முன்புகூட ஈரோட்டில் முத்தரசன் ஒரு பேட்டி தந்திருந்தார்.. அதிலும் ஆளுநர் நியமனம் குறித்தும், பாஜகவையும் விமர்சித்திருந்தார்.. "தொடர்ந்து 4 மாநில பாஜக முதல்வர்கள் ராஜினாமா என்பது பாஜகவின் செல்வாக்கு சரிவதையே காட்டுகிறது.. பாஜக ஆளாத மாநிலத்தில் மாநில அரசுக்கு குடைச்சல் கொடுக்கவே ஆளுநரை ஒன்றிய அரசு பயன்படுத்துகிறது... ஒன்றிய அரசு எதை விரும்புகிறதோ, எதை செய்ய சொல்கிறதோ அதை நிறைவேற்றக்கூடியவர்தான் ஆளுநர்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications