இனி இந்தி தெரிந்தால் மட்டுமே மத்திய அரசு வேலை? ‘மூர்க்கத்தனமான செயல்பாடு’ - கொந்தளித்த பாலகிருஷ்ணன்!
சென்னை : பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவை சிதைத்து, ஒற்றைத் தன்மையை நோக்கி நாட்டை நகர்த்திச் செல்கிறது மத்திய பாஜக அரசு என சிபிஐஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.
இந்தி பேசும் மாநிலங்களில் ஐஐடி, மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் இந்தி பயிற்று மொழியாகவும், பிற மாநிலங்களில் பிராந்திய மொழிகள் பயிற்று மொழியாகவும் இருக்க வேண்டும் என அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது.
இதற்கு கடும் கண்டனங்கள் வலுத்து வரும் நிலையில், இதுகுறித்து சிபிஐஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இனி இந்தி தெரிந்தால் மட்டுமே மத்திய அரசில் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற நிலை உருவாக்கப்படுவது இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு எதிரானது எனத் தெரிவித்துள்ளார்.

அமித்ஷா குழுவின் அறிக்கை
உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக்குழு தனது 11-வது அறிக்கையை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் அளித்தது. அதில், எல்லா மாநிலங்களிலும் மத்திய அரசினுடைய கல்வி நிறுவனங்களான ஐஐடி போன்ற மத்திய பல்கலைக்கழகங்களில் ஆங்கிலத்தை விட பிராந்திய மொழிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. இதற்கு பல்வேறு கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஸ்டாலின் கடும் கண்டனம்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்தி மொழியை நாடு முழுமைக்கும் ஒரே பொது மொழியாக மாற்றக்கூடிய முயற்சி என்பது ஏற்றுக்கொள்ள முடியாது, அனைத்து மொழிகளுக்கும் மத்திய அரசினுடைய அலுவல் மொழி என்ற நிலையை ஏற்றிட வேண்டும், அதற்கு நேர் எதிரான மூர்க்கத்தனமான நிலைப்பாட்டை எடுத்து இந்தியை கட்டாயமாக்க முயன்று, இன்னொரு மொழிப்போரை எங்கள் மீது திணித்திட வேண்டாம் என முதலமைச்சர் ஸ்டாலின் கடுமையாக கண்டித்திருந்தார்.

சிபிஐஎம் பாலகிருஷ்ணன்
இந்தி மொழி திணிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டித்து அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனும் மத்திய அரசின் நட்டிக்கைகளை கண்டித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம் என்ற ஆர்எஸ்எஸ் கருத்தியலின் அடிப்படையில், பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவை சிதைத்து, ஒற்றைத் தன்மையை நோக்கி நாட்டை நகர்த்திச் செல்கிறது ஒன்றிய பாஜக கூட்டணி அரசு. இதன் ஒரு பகுதியாகவே, ஒன்றிய அரசு நடத்தும் ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் போன்ற உயர்கல்வி மற்றும் மத்திய அரசின் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் இந்தி மட்டுமே பயிற்று மொழி. ஆங்கில வழி கல்வி கூடாது என்ற அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் (11 வது தொகுதி) சிபாரிசு அமைந்துள்ளது.

நேருவின் உறுதிமொழிக்கு எதிராக
அலுவல் மொழிக்கான நாடாளுமன்ற குழுவின் அறிக்கையை அந்தக் குழுவின் தலைவர் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் வழங்கியுள்ளார். அதில், 'ஆங்கிலம் என்பது அந்நிய மொழி. எனவே, ஆங்கில வழிக்கல்வி என்ற காலனியாதிக்க நடைமுறையை கைவிட வேண்டும்' என கூறப்பட்டுள்ளதாக அந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தி பேசாத மாநில மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமும் துணை அலுவல் மொழியாக தொடரும் என நாடாளுமன்றத்தில் அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு அளித்த உறுதிமொழிக்கு எதிராக இந்தப் பரிந்துரை அமைந்துள்ளது.

இந்தியில் மட்டுமே
ஒன்றிய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் இந்தி அல்லது அந்தந்த பிராந்திய மொழிகளே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்று இந்தக் குழு கூறியிருந்த போதும், இந்த பரிந்துரையின் நோக்கம், இந்தி மொழியை திணிப்பதே ஆகும். புதிய தேசிய கல்விக் கொள்கையின் படியே இந்த மொழித் திணிப்பு அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி, ஐ.நாவின் அலுவல் மொழியாக இந்தியை சேர்க்க வேண்டும் என்றும் இந்தக் குழு பரிந்துரை செய்துள்ளது. இதன் மூலம் ஐ.நா.வுடனான இந்தியாவின் தகவல் தொடர்பு இனி இந்தியில் மட்டுமே இருக்கும் என்பதே இதன் பொருளாகும்.

தமிழ் உட்பட
அரசியல் சாசனத்தில் இடம்பெற்றுள்ள தமிழ் உட்பட அனைத்து மொழிகளையும் ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக்கிட வேண்டும். இந்தியா பல்வேறு மொழிகளை பேசும் மக்களைக் கொண்டுள்ள விரிந்து பரந்த நாடாகும். அரசியல் சாசனத்தின் எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளையும், ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக்க வேண்டும் என்ற நியாயமான கோரிக்கை தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இனி இந்தி தெரிந்தால் மட்டுமே, மத்திய அரசில் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற நிலை கொஞ்சம் கொஞ்சமாக உருவாக்கப்படுவது, இந்தியாவின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் எதிரானதாகும்.

மூர்க்கமாக
மத்திய அரசின் பணியாளர் தேர்வின் போது இந்தி தெரிந்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படும் எனவும் இந்தக் குழு பரிந்துரை செய்துள்ளதாக தெரிகிறது. மொழிகளின் சமத்துவத்திற்கு எதிராகவே நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரைகள் அமைந்துள்ளன. மத்திய அரசு இந்தக் குழுவின் பரிந்துரைகளை நிராகரித்து தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளையும் ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக்கிட முன்வர வேண்டும். மத்திய அரசின் கல்வி நிலையங்களில் ஆங்கில வழிக் கல்வியும் தொடர வேண்டும். இந்தி மற்றும் சமஸ்கிருதத் திணிப்பில் மூர்க்கத்தனமாக மத்திய அரசு ஈடுபட்டு வருவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. அனைத்து நிலைகளிலும் இந்திய மொழிகளின் சமத்துவம் நிலைநிறுத்தப்பட வேண்டும். மொழித் திணிப்பு முற்றாக கைவிடப்பட வேண்டும்" என அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications