“கடைசி அரைமணியில் என்ன நடந்தது?”.. கே. ராஜன் மரணம் குறித்து பாலாஜி பிரபு சொன்ன அதிர்ச்சி தகவல்கள்!
சென்னை: மூத்த தயாரிப்பாளர் கே ராஜன் தமிழ் திரையுலகையே உலுக்கி இருக்கிறது. சினிமா உலகில் தயாரிப்பாளர், விநியோகஸ்தர், அமைப்பு நிர்வாகி, மேடைப் பேச்சாளர் என பல முகங்களுடன் இருந்த கே. ராஜன், இப்படி திடீரென உயிரிழந்தது திரையுலகினரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக அவர் இறப்பதற்கு முன் நடந்ததாக கூறப்படும் சம்பவங்கள் குறித்து தயாரிப்பாளர் பாலாஜி பிரபு பகிர்ந்த தகவல்கள் தற்போது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.

தயாரிப்பாளர் பாலாஜி பிரபு பேட்டி
இதுகுறித்து பாலாஜி பிரபு பேட்டியில் பேசும்போது , சம்பவத்தன்று கே. ராஜன் தனது காரில் பயணம் செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அடையாறு பகுதி அருகே சென்றபோது, காரை நிறுத்துமாறு ஓட்டுநரிடம் கூறியதாக தகவல். வழக்கம்போல சிறிது நேரம் நடைப்பயிற்சி செய்து வருகிறேன் என்று சொல்லிவிட்டு காரில் இருந்து இறங்கியதாகவும் கூறப்படுகிறது. இதுவரை பார்த்தால் இது ஒரு சாதாரண நிகழ்வாகத்தான் தெரிகிறது.
ஆனால் அதற்குப் பிறகுதான் எதிர்பாராத சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. சுமார் அரை மணி நேரம் நடைப்பயிற்சி செய்துவிட்டு மீண்டும் காரிடம் வந்த கே. ராஜன், காரின் கதவைத் திறந்ததாகவும், அந்த நொடியில் என்ன நினைத்தார் என்று யாருக்கும் தெரியவில்லை என்றும் பாலாஜி பிரபு தெரிவித்துள்ளார். காருக்குள் ஏறாமல் திடீரென மீண்டும் திரும்பி அடையாறு பாலம் நோக்கி சென்றதாகவும், அங்கேயிருந்து ஆற்றுக்குள் குதித்ததாகவும் கூறப்படுகிறது.
தயாரிப்பாளர் கே ராஜன் மரணம்
இந்த காட்சியை பார்த்த ஓட்டுநர் அதிர்ச்சியில் உறைந்துவிட்டதாக தகவல். ஒரு நொடி என்ன நடக்கிறது என்று புரிந்துகொள்வதற்குள் சம்பவம் நடந்துவிட்டதாகவும், உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பின்னர் அவரது உடல் மீட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாலாஜி பிரபு மேலும் கே ராஜன் குடும்ப பின்னணி குறித்தும் சில தகவல்களை பகிர்ந்துள்ளார். கே. ராஜனுக்கு மூன்று மகன்களும் ஒரு மகளும் இருக்கிறார்கள். அவருடைய மகன்களில் ஒருவர் பத்திரிகை நடத்தி வருவதாகவும், பிரபு என்ற மகன் எல்.கே.ஜி திரைப்படத்தை இயக்கியவர் என்றும் தெரிவித்துள்ளார். அந்த படம் வெற்றி பெற்ற பிறகுதான் அப்பா-மகன் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.
தயாரிப்பாளர் கே ராஜன் குடும்பம்
அதேபோல், கே. ராஜனுக்கு தனது மகள் விஜி மீது அளவுகடந்த பாசம், குடும்பத்தில் மகளிடம் அவருக்கு மிகுந்த பாசம் இருந்ததாகவும், அந்த உறவு அவருக்கு மிகவும் முக்கியமானதாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால் குடும்பத்தில் ஏற்கனவே ஒரு பெரிய சோகம் நடந்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். அவரது மகளின் கணவர் சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பே உயிரிழந்ததாக தகவல். அந்த குடும்பச் சோகம் இன்னும் மறையாத சூழ்நிலையிலேயே கே. ராஜனும் இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
குடும்ப பிரச்சனை
மேலும், குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக அவர் தனது வீட்டில் இல்லாமல் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் கடந்த சில ஆண்டுகளாக தங்கி வந்ததாகவும் பாலாஜி பிரபு கூறியுள்ளார். குடும்பத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தாரா? அந்த தனிமை மனரீதியாக அவரை பாதித்ததா? என்ற கேள்விகளும் எழுகின்றன.
அதுமட்டுமல்லாமல், கடந்த வாரத்தில்தான் ஒரு பிரபல மருத்துவமனைக்கு சென்று உடல்நிலை பரிசோதனையும் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. உடல்நலப் பிரச்சனை ஏதேனும் இருந்ததா? அதுவும் மனஅழுத்தத்திற்கு காரணமா? என்ற கேள்விகளும் தற்போது பேசப்படுகின்றன.
தைரியமான மனிதர்
பாலாஜி பிரபு மேலும் பேசும்போது "இவ்வளவு தைரியமான மனிதர் இப்படி ஒரு முடிவை எடுத்தது நம்ப முடியவில்லை" என்று உருக்கமாக பேசியிருக்கிறார். ஏனெனில் கே. ராஜன் எப்போதுமே மேடைகளில் தயக்கமின்றி பேசி வந்தவர். யாரையும் பார்த்து பயப்படாதவர். மனதில் பட்டதை நேராகச் சொல்லக்கூடியவர். திரையுலகில் பல பிரச்சனைகளில் வெளிப்படையாக கருத்து கூறியவர்.
அப்படிப்பட்ட ஒருவர் உள்ளுக்குள் இவ்வளவு வேதனையை சுமந்திருந்தாரா என்ற கேள்வி இப்போது பலரிடமும் எழுந்துள்ளது. வெளியில் தைரியமாகத் தெரியும் மனிதர்களின் உள்ளுக்குள் எவ்வளவு சோகங்கள் இருக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது என்பதையே இந்த சம்பவம் மீண்டும் நினைவூட்டியிருக்கிறது. என்னதான் இருந்தாலும் எது சூழ்நிலையிலும் தற்கொலை பிரச்சனைக்கு தீர்வு தராது அதனால் யாரும் தற்கொலையை பற்றி நினைத்து கூட பார்க்காதீர்கள் மனதில் பிரச்சனை இருந்தால் நல்ல நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் அதை பகிர்ந்து கொள்ளுங்கள்.












Click it and Unblock the Notifications