விஜய் அழைத்தால் கூட்டணி? யாருங்க சொன்னா? இல்லவே இல்லை என மறுத்த மா., கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்
சென்னை: தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இந்நிலையில் தான் கூட்டணி ஆட்சி அமைக்க விஜய் அழைப்பு விடுத்தால் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் கூறியதாக தகவல்கள் வெளியானது. இந்த கட்சிக்கு 2 எம்எல்ஏக்கள் உள்ளதால் தவெகவினர் ஹேப்பியாகினர். இந்நிலையில் தான் அப்படி நான் சொல்லவே இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மொத்தம் 234 சட்டசபை தொகுதிகள் உள்ளன. தனித்து ஆட்சியை பிடிக்க 118 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். ஆனால் நேற்றைய தேர்தல் முடிவில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. விஜய்யின் தவெக 107 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக மாறி உள்ளது. ஆனால் மெஜாரிட்டி கிடைக்கவில்லை.

விஜய் ஆட்சியமைத்து முதல்வராக வேண்டும் என்றால் இன்னும் 11 எம்எல்ஏ (விஜய் 2 தொகுதியில் ஜெயித்துள்ளார். ஒன்றை ராஜினாமா செய்யும் காலியிடத்தையும் சேர்த்து) ஆதரவு தேவையாக உள்ளது. இதனால் பிற கட்சிகளை தொடர்பு கொண்டு விஜய் ஆதரவு கோரி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் தனியார் தொலைக்காட்சியில் இன்று செய்தி வெளியானது. அதில், ''கூட்டணி ஆட்சிக்கு விஜய் அழைப்பு விடுத்தால் ஆலோசித்து முடிவு - சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம்'' என கூறப்பட்டு இருந்தது. இதுதொடர்பான ஸ்கிரீன்ஷாட் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் பரவின.
பரவும் இந்த தகவலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் முற்றிலுமாக மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தனியார் தொலைக்காட்சியில் வெளியான ஸ்கிரீன்ஷாட்டை பகிர்ந்து கூறியுள்ளதாவது:
இன்று பாலிமர் தொலைக்காட்சியில் வெளியான செய்தி முற்றிலும் தவறானது.
— Shanmugam P (@Shanmugamcpim) May 5, 2026
அந்த செய்தியில் வெளியிடப்பட்ட கருத்துகள் எனது கருத்துகள் அல்ல. நான் அப்படிப்பட்ட எந்த கருத்தையும் எந்த ஊடகத்திற்கும் வழங்கவில்லை.
எனது பெயரை பயன்படுத்தி தவறான தகவல் பரப்பப்பட்டுள்ளது. pic.twitter.com/1WZkiqz3T3
''இன்று தொலைக்காட்சியில் வெளியான செய்தி முற்றிலும் தவறானது. அந்த செய்தியில் வெளியிடப்பட்ட கருத்துகள் எனது கருத்துகள் அல்ல. நான் அப்படிப்பட்ட எந்த கருத்தையும் எந்த ஊடகத்திற்கும் வழங்கவில்லை. எனது பெயரை பயன்படுத்தி தவறான தகவல் பரப்பப்பட்டுள்ளது'' என்று கூறியுள்ளார்.
இதன்மூலம் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு வழங்குவது பற்றி ஆலோசிப்பதாக வெளியான தகவலை அவர் மறுத்துள்ளார். இதன்மூலம் தற்போதைய சூழலில் தவெகவிற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏக்களின் ஆதரவு இல்லை என்பது இதன்மூலம் உறுதியாகி உள்ளது. இருப்பினும் அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் ஒவ்வொரு நகர்வுகளையும் உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமுக கூட்டணியில் பயணித்து வருகிறது. நடந்து முடிந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 5 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் 3ல் தோல்வியை தழுவியது. 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கீழ்வேளூர் (தனி) தொகுதியில் லதா என்பவர் 56,108 வாக்குகள் வாங்கி தவெக வேட்பாளர்கள் செந்தில் பாண்டியனை 2,278 ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளார். செந்தில் பாண்டியன் மொத்தம் 53,830 வாக்குகள் வாங்கி தோல்வியடைந்தார்.
அதேபோல் கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் செல்லசாமி 68,938 வாக்குகள் வாங்கி வெற்றி பெற்றார். இங்கு தவெக வேட்பாளர் கிருஷ்ணகுமார் 53,369 வாக்குகள் வாங்கி தோல்வியடைந்தார். ஒருவேளை இவர்கள் 2 பேரும் தவெகவிற்கு ஆதரவு அளிக்கும் பட்சத்தில் மெஜாரிட்டிக்கான 118 மேஜிக் நம்பரை எட்டுவதில் ஒருபடி விஜய்யின் தவெக முன்னோக்கி செல்லும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications