வருமான வரித்துறை ரெய்டு.. தேர்தல் நிதி திரட்டுவதற்காகத்தான்! பாஜகவிற்கு குட்டு வைத்த சிபிஎம்
சென்னை: கடந்த 5 நாட்களாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டை மேற்கொண்டனர். இந்த ரெய்டு குறித்து, "வருமான வரித்துறை சோதனை நடத்துவது தமிழ்நாட்டில் பாஜக தேர்தல் நிதி திரட்டுவதற்காகத்தான்" என சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விமர்சனம் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் உள்ள அமைச்சர் எ.வ.வேலு வீடு, அவரது கல்லூரி, எ.வ.வேலுவின் மகன் கம்பன் வீடு, அவர்களோடு தொடர்புடைய இடங்களில் 200க்கும் அதிகமான வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டு மேற்கொண்டனர். இந்த ரெய்டில் பணம் கைப்பற்றப்பட்டதாக சொன்னாலும், அது தனக்கு சொந்தமான பணம் கிடையாது என அமைச்சர் மறுத்திருக்கிறார்.

மேலும், ரெய்டு என்ற பெயரில் தனது ஓட்டுநரை வருமான வரித்துறையினர் அச்சுறுத்தப்பட்டதாக கூறிய அவர், தன் வீட்டிலோ, தன் மனைவி வீட்டிலோ, தன் மகன் வீட்டிலோ ஒரு பைசா கூட எடுக்கவில்லை என்றும் விளக்கமளித்திருக்கிறார். இந்நிலையில் இந்த ரெய்டு குறித்து சிபிஎம் பல்வேறு கேள்விகளை எழுப்பி விமர்சனம் தெரிவித்திருக்கிறது. கட்சியின் மாநில செயலாளர் கே.பலகிருஷ்ணன் x வலைத்தளத்தில் இது குறித்து குறிப்பிட்டுள்ளதாவது
"தமிழ்நாட்டில் அமைச்சர்கள் தொடர்புடைய இடங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஒன்றிய அரசின் அமலாக்கத்துறை சோதனை நடக்கிறது. இந்த நேரத்தில் தீவிரமாக சோதனை நடத்துவதற்கான காரணம், தேவை என்ன இருக்கிறது? எதிர்க்கட்சித் தலைவர்களை மிரட்டிப் பணிய வைப்பதற்கான நடவடிக்கையாக இது உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் இது போன்ற எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடாமல் தற்போதைய அமைச்சர்கள், தொழிலதிபர்கள், சிறு தொழில் முதலாளிகள் உள்ளிட்டவர்களின் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்துவது தமிழ்நாட்டில் பாஜக தேர்தல் நிதி திரட்டுவதற்காகத் தான் என்று மக்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது. இத்தகைய மிரட்டல் நடவடிக்கைகளை ஒன்றிய அரசு உடனடியாக கைவிட வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications