ரொம்ப தப்பு.. சனாதன வெறி ஆபத்தானது, அநாகரீகமானது.. தமிழக பாஜக மீது சி.பி.எம் பாலகிருஷ்ணன் பாய்ச்சல்
திமுக எம்பி ஆ ராசா பேச்சுக்கு சிபிஎம் பாலகிருஷ்ணன் ஆதரவு தெரிவித்துள்ளார்
சென்னை: பாஜக முன்னெடுக்கும் இத்தகைய அரசியல் வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்தப்பட வேண்டும்" என்று கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கே.பாலகிருஷ்ணன் காட்டமாக கூறியுள்ளார்.
திமுக எம்பி ஆ.ராசா, கடந்த சில தினங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, இந்துக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக பாஜகவும், இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களும் குற்றம்சாட்டி வருகின்றனர்,.
மேலும் ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், எம்பி பதவியில் இருந்து அவரை நீக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் விடுத்து வருகின்றனர்..
அண்ணாமலை அரசியல் முதிர்ச்சி அவ்வளவுதான்.. ”நாவடக்கத்துடன் பேச வேண்டும்” அட்வைஸ் செய்த பாலகிருஷ்ணன்!
சிபிஎம்
தமிழகம் முழுவதும் போலீசிலும் புகார் தந்து வருகின்றனர். பாஜகவும், இந்து முன்னணி உள்பட பல்வேறு இந்து அமைப்புகள், ஆ.ராசாவுக்கு கண்டனம் தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்தும் வருகின்றன... அதேநேரத்தில், திருமாவளவன், சீமான், வேல்முருகன் உள்ளிட்ட தலைவர்கள் ஆ.ராசாவின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.. அந்தவகையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஆ.ராசாவிற்கு ஆதரவு கரம் நீட்டியுள்ளது.
சாஸ்திரம்
இதுதொடர்பாக மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் கே.பாலகிருஷ்ணன் ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்.. திமுக எம்பி ஆ.ராசா பேசிய ஒரு மேடைப் பேச்சின் சிறு பகுதியை எடுத்து வைத்துக் கொண்டு, வன்முறையை தூண்டும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருகிறது. பாஜகவின் இந்தப் போக்கு வன்மையான கண்டனத்திற்கு உரியதாகும். மனு அநீதி சாஸ்திரத்திலும், சனாதன நூல்களிலும் காலம் காலமாக இடம்பெற்றுள்ள அநாகரீகமான கருத்துக்கள் குறித்து எந்த கோபமும் கொள்ளாதவர்கள், அதை எடுத்துக்காட்டி விமர்சித்த ஆ.ராசா மீது பாய்கிறார்கள். தாக்குதலைத் தூண்டிவிடுகிற பகிரங்க முயற்சிகளைச் செய்கிறார்கள்.
சனாதன வெறி
எத்தனையோ அறிஞர்களால் எடுத்துக் காட்டப்பட்டு, சாடப்பட்ட - இந்திய அரசமைப்புக்கு விரோதமான அந்த கருத்துக்களை சுட்டிக்காட்டி பலரும் கண்டித்துள்ளார்கள். ஆனால் அதையே ஆ.ராசா எடுத்துச் சொன்னால் மட்டும் எதிர்ப்பு எழுவது ஏன்? சாதி ஆதிக்கத்தின் அடிப்படையில் எழும் அதே சனாதன வெறிதானே? இந்த சிந்தனைதான் ஆபத்தானது, அநாகரீகமானது. பாஜக முன்னெடுக்கும் இத்தகைய அரசியல் வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்தப்பட வேண்டும்" என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சிண்டு முடியும்
ஆ.ராசாவுக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சி தரப்பில் யாருமே ஆதரவு தரவில்லை, ஆ.ராசாவை திமுக கைவிட்டுவிட்டது என்றெல்லாம் இன்னொரு பக்கம் யாரோ கிளப்பி வருகிறார்கள்.. இதற்கெல்லாம் பதிலடியாகத்தான் ஒவ்வொரு தலைவர்களாக தொடர்ந்து ஆதரவுக்கரங்களை நீட்டி வருகின்றனர்.. அத்துடன், ஆ.ராசா பேசிய கருத்து முற்றிலும் சரி என்பதுபோன்ற ஆதரவுகளும் பெருக ஆரம்பித்து விட்டன.. இதன்மூலம் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிக்குள்ளேயே சிண்டுமுடிய நினைத்த விஷமிகளின் அரசியல் கணக்கும் முறியடிக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.