மெரினாவில் பறவைகளுக்காக பட்டாசு வெடித்த விமான படையினர்! பொதுமக்களுக்கும் முக்கிய அறிவுறுத்தல்
சென்னை: சென்னை மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சியின் போது பறவைகளின் குறுக்கீடுகளை தடுப்பதற்காக மெரினாவில் பட்டாசுகளை வெடித்து வருகிறார்கள். மேலும் பறவைகளுக்கு உணவு அளிக்க வேண்டாம் என்று பொதுமக்களுக்கும் அறிவுரை வழங்கப்படுகிறது.
இந்திய விமான படை 92 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதைக் கொண்டாடும் வகையில் சென்னை மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சி இன்று காலை 11 மணி வரை முதல் 1 மணி வரை நடைபெறுகிறது.

விமான சாகச நிகழ்ச்சியை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பார்வையிட உள்ளனர். இதையொட்டி பொதுப் பணித் துறை சார்பில் மெரினா கடற்கரை மணல் பரப்பில் 15-க்கும் மேற்பட்ட சாமியானா பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்ச்சிக்காக எந்தவித கட்டணத்தையும் பொதுமக்களிடம் பெறவில்லை. இதை காண எந்த டிக்கெட்டும் கிடையாது. வாகனங்களை நிறுத்த மட்டுமே பாஸ் தேவை. மொத்தம் 72 விமானங்கள் இந்த சாகச நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளன.
விமான சாகச நிகழ்ச்சியில் ஸ்டென்ட் ஷோக்களையும் இந்திய விமானப்படை செய்யவுள்ளது. விமானப் படையின் ஆகாஷ் கங்கா அணி, சூர்யகிரண் ஏரோபாட்டிக் அணி, சாரங் ஹெலிகாப்டர்கள், சுகோய் 30 எம்கேஐ, மிராஜ் 2000, மிக் 29, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நவீன இலகு ரக விமானமான தேஜஸ் உள்ளிட்டவையும் இருக்கின்றன.
இலகுரக போர் ஹெலிகாப்டர் பிரசாந்த் மற்றும் 1971 ஆம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிரான போரில் பயன்படுத்தப்பட்ட டகோட்டா மற்றும் ஹார்வர்ட் ஆகிய விமானங்களும், அதிநவீன போர் விமானமான ரஃபேல் விமானம் உள்ளிட்டவையும் இந்த சாகச நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளன.
சாகச பயிற்சிக்காக ஒத்திகையை விமான படை ஏற்கெனவே தொடங்கி தினமும் நடத்தி வந்தது. இந்த விழாவை காண 15 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிகளுக்காக 8000 போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்களின் வசதிக்காக மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் பேருந்துகள், மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் சிற்றுந்துகளும் இயக்கப்படுகின்றன.
இந்த நிலையில் விமான சாகச நிகழ்ச்சியின் போது பறவைகளின் குறுக்கீட்டை தடுக்க மெரினாவில் பட்டாசுகளை வெடித்து வருகிறார்கள். இந்த சாகச நிகழ்ச்சிகளின் போது புறாக்கள், கழுகுகள், காகங்கள் குறுக்கீட்டை தடுக்க இந்த பட்டாசுகள் வெடிக்கப்பட்டுள்ளன. அது போல் பறவைகளுக்கு உணவளிக்க வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications