பயிர்க்கடன்.. தாராளம் காட்டிய தமிழக கூட்டுறவுத்துறை.. ரூ.7700 கோடி பயிர்க் கடன்.. விவசாயிகள் ஹேப்பி
சென்னை: தமிழகத்தில் மழை பொழிவு சாதகமாக இருப்பதால், கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடன் வாங்க, விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்களாம்.. இந்த சூழலில் தமிழக கூட்டுறவுத்துறை குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. இது விவசாயிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.
தமிழக கூட்டுறவுத் துறையானது, பயிர் கடன்களை மிககுறைந்த வட்டியில் மக்களுக்கு வழங்கி வருகிறது. முக்கியமாக, சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள், இடுபொருட்கள், வேளாண் கருவிகள் போன்றவற்றை வாங்குவதற்காகவே இந்த பயிர் கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், இந்த வருடம் 16,000 கோடி ரூபாய் பயிர் கடன் வழங்க வேண்டும் என்று கூட்டுறவுத்துறை இலக்கு நிர்ணயித்துள்ளது.

அதேபோல, பயிர்க்கடனில் 30 சதவீதம் புதிய உறுப்பினர்களுக்கும், 20 சதவீதம் பட்டியலின வகுப்பு விவசாயிகளுக்கும் வழங்கி வருகிறது.. பட்டியலின வகுப்பு, பழங்குடியினரின் நில உடமையின் அடிப்படையில், 20 சதவீதம் குறியீட்டினை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு நிர்ணயம் செய்யவேண்டும் என்றும் அவ்வப்போது அறிவுறுத்தப்பட்டும் வருகிறது.
விண்ணப்பம்: அதேபோல, பயிர்க்கடன் பெறுவதில் எளிய வசதிகளையும் கூட்டுறவுத்துறை கொண்டு வந்துள்ளது. முன்பெல்லாம் கடனை பெற வங்கிகளுக்கு நேரில் செல்ல வேண்டியிருந்தது. ஆனால், இப்போது கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் வங்கிகளில் இணையவழியில் கடன் பெற விண்ணப்பிக்கும் வசதியுடன் கூடிய "கூட்டுறவு" (Kooturavu) என்ற செயலி அறிமுகமாகியிருக்கிறது. இதில், பயிர்க்கடன், நகைக்கடன் மட்டுமல்லாமல், பல்வேறு கடன்களின் விவரம் பட்டியலிடப்பட்டிருக்கும்.
இந்நிலையில், நடப்பு நிதியாண்டில் கடந்த அக்டோபர் வரை, 8.50 லட்சம் பேருக்கு, 7,700 கோடி ரூபாய் பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளதாக மகிழ்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது..
கூட்டுறவு வங்கி: கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்களில், அனைத்து பிரிவுகளிலும் நடப்பு நிதியாண்டில் ஒட்டுமொத்தமாக, 1.03 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், நகை கடன் பிரிவில், 57,563 கோடி ரூபாயும், பயிர் கடன் பிரிவில், 16,500 கோடி ரூபாயும் கடன் வழங்கப்பட உள்ளது.
நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் அக்டோபர் வரை, 25,000 கோடி ரூபாய்க்கு நகைக் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.. அதேபோல கடந்த அக்டோபர் வரை, 8.50 லட்சம் விவசாயிகளுக்கு, 7,700 கோடி ரூபாய் பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலத்தில், 7.50 லட்சம் விவசாயிகளுக்கு, 7,200 கோடி ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டிருந்ததாம்.
விவசாயிகள் ஆர்வம்: மொத்தத்தில், கூட்டுறவு வங்கிகளில் அனைத்து பிரிவுகளிலும் சேர்த்து, ஏப்ரல் முதல் அக்டோபர் வரை, 47,000 கோடி ரூபாய் கடன்கள் வழங்கப்பட்டுள்ளதாக அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மழை பொழிவும் தற்போது நன்றாக உள்ளதால், பயிர் சாகுபடியில் விவசாயிகள் முழுவீச்சில் ஈடுபட, பயிர் கடன் வாங்க ஆர்வம் காட்ட துவங்கிவிட்டார்களாம்.












Click it and Unblock the Notifications