வாடிப்பட்டி ஆட்டுச்சந்தைக்குள் நுழைந்த கூட்டம்.. மறு நொடியே 4 கோடி பிசினஸ்! மதுரையில் நம்ப முடியலயே
சென்னை: தமிழ்நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகைக்கான ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக நடந்து வரும் வேளையில், மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட சந்தையில் நடந்த விசித்திரமான வர்த்தகப் போட்டி ஒட்டுமொத்த மாநிலத்தையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. வரும் மே 28ம் தேதி இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான பக்ரீத் கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழகத்தின் மிக முக்கிய ஆட்டுச்சந்தைகளில் ஒன்றான மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஆட்டுச்சந்தையில் இதுவரை இல்லாத வகையில் ஒரு பிரம்மாண்ட விற்பனைச் சாதனை அரங்கேறியுள்ளது.
இந்த ஆண்டு பக்ரீத் பண்டிகை வரும் வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது.. அடுத்த நாளான வெள்ளிக்கிழமையும் சேர்ந்து தொடர்ச்சியாக சுப முகூர்த்த தினங்கள் அமைந்துள்ளன.

இதுமட்டுமன்றி, மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள புகழ்பெற்ற கோவில்களில் வைகாசி மாத திருவிழாக்களும் இதே காலகட்டத்தில் உற்சாகமாகத் தொடங்கியுள்ளன. பண்டிகை, திருமணம், கோவில் திருவிழா என மூன்று முக்கிய நிகழ்வுகளும் ஒரே நேரத்தில் சங்கமித்துள்ளதால், இறைச்சிக்கான தேவை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த முறை உச்சத்தை தொட்டுள்ளதாம்.
மதுரை ஆட்டு வியாபாரிகள்
இதற்காக அதிகாலையிலேயே வாடிப்பட்டி சந்தையை நோக்கி ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் வியாபாரிகள் படையெடுக்க துவங்கிவிட்டார்கள்..
அந்தவகையில் இன்று காலை 7 மணிக்கெல்லாம் சந்தை தொடங்கிய சில நிமிடங்களிலேயே, வாங்குபவர்களுக்கும் விற்பவர்களுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவ ஆரம்பித்தது. தரமான மற்றும் ஆரோக்கியமான ஆடுகளைக் கைப்பற்றுவதற்காக மக்கள் கூட்டம் அலைமோதியது. ஆடுகளின் விலையைக் கேட்டு பேரம் பேசி, அடுத்த நொடியே பணத்தைக் கொடுத்து ஆடுகளை வாகனங்களில் ஏற்றிச் செல்லும் பரபரப்பான காட்சிகளும் சந்தையில் காண முடிகிறதாம். .
4 கோடி ரூபாய் இமாலய சாதனை
சிறிய ஆடுகள் முதல் பெரிய அளவிலான பிரம்மாண்ட ஆடுகள் வரை அனைத்தும் வந்த வேகத்திலேயே விற்றுத் தீர்ந்தன. சந்தை நிர்வாகிகளின் அதிகாரப்பூர்வ தகவலின்படி, இன்று காலை தொடங்கிய சில மணி நேரங்களுக்குள் மட்டும் சுமார் 4 கோடி ரூபாய் மதிப்பிலான ஆடுகள் அதிரடியாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் 4 கோடி ரூபாய்க்கும், விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் 6 கோடி ரூபாய்க்கும், திருநெல்வேலி மேலப்பாளையத்திலும் கோடிக்கணக்கில் வர்த்தகம் நடந்த நிலையில், இப்போது மதுரை வாடிப்பட்டியும் இந்த இமாலய சாதனையை எட்டியுள்ளது.
விலைவாசி கடந்த வாரங்களை விட கணிசமாக உயர்ந்திருந்த போதிலும், தேவையின் அவசரம் காரணமாக பொதுமக்கள் எந்தத் தயக்கமும் இல்லாமல் ஆடுகளை வாங்கிச் சென்றனர்.
பெரும் வர்த்தகம்
சந்தைக்கு திரண்டு வந்த கூட்டத்தையும், சில மணி நேரங்களில் நிகழ்ந்த 4 கோடி ரூபாய் பணப் பரிவர்த்தனையையும் கண்டு வியாபாரிகள் மற்றும் உள்ளூர் மக்கள் பெரும் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனராம்.. பக்ரீத் நெருங்கி வரும் நாட்களிலும் இந்த விறுவிறுப்பு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், விலை அதிகமாக இருந்தாலும் தரமான ஆடுகளை வாங்க மக்கள் தயங்கவில்லை.. பண்டிகை நெருங்குவதால் வரும் நாட்களில் விற்பனையும் வரத்தும் மேலும் அதிகரிக்கும் என வியாபாரிகள் நம்புகின்றனர்.. தமிழக சந்தைகளில் நடந்துள்ள இந்த பல கோடி ரூபாய் வர்த்தகம் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தியுள்ளது.. இதனால் ஆடு வளர்ப்போர் மற்றும் வியாபாரிகள் திக்குமுக்காடி போயிருக்கிறார்களாம்..!!












Click it and Unblock the Notifications