தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு.. இன்று இரவு 9க்குப் பதில் நாளை காலை 5 மணி வரை தொடரும்
சென்னை: தமிழகத்தில் நாளை காலை 5 மணி வரை மக்கள் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. மற்ற நாடுகளில் வைரஸின் தாக்கம் 4 அல்லது 5 ஆவது வாரத்தில் அதிகமாக இருந்தது. அது போல் இந்தியாவிலும் ஏற்பட்டு அனைவருக்கும் வைரஸ் பாதிக்கக் கூடாது என மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்கிறது.
இந்த 4 ஆவது வாரத்தில் கொரோனாவை 3 ஆவது நிலையை அடைவதிலிருந்து தடுக்க நாடு முழுவதும் இன்று சுய ஊடரங்கு பிறப்பிக்க பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டார்.

புராதன சின்னங்கள்
அதன்படி இன்று காலை 7 மணி நாடு முழுவதும் ஊரடங்கு தொடங்கியது. இது இரவு 9 மணி வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. அதோபோல் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. அதன்படி நாடு முழுவதும் உள்ள சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

அனுமதி ரத்து
ஏற்கெனவே பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோயில்கள், வழிப்பாட்டு தலங்கள், சுற்றுலா தலங்கள், புராதன சின்னங்கள், மால்கள், தியேட்டர்கள் என அனைத்தும் மூடப்பட்டுவிட்டன. அது போல் சென்னையில் உள்ள கடற்கரைகளுக்கு பொதுமக்கள் அனுமதி ரத்து செய்யப்பட்டுவிட்டது.

நீட்டிக்க
கொரோனாவிலிருந்து பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் ஜரூராக உள்ளன. இந்த ஊரடங்கு இன்னும் நீட்டிக்கப்பட வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுவையில் வரும் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு என முதல்வர் நாராயணசாமி அறிவித்திருந்தார்.இந்த நிலையில் தமிழகத்தில் இன்று 9 மணி வரை இருந்த ஊரடங்கு நாளை காலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

நீட்டிப்பு
பொதுமக்களின் நலன் கருதி இந்த நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் அனைவரும் ஒத்துழைப்பு நல்குமாறும் தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. எனினும் அத்தியாவசிய பணிகள் தொடர எந்த தடையும் இல்லை என தெரிவித்துள்ளது. புதுவையில் வரும் 31-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு போடப்பட்டிருக்கும் நிலையில் தமிழகத்தில் நாளை காலை வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications