இன்ஸ்பெக்டர் மேல டவுட் இருக்கு! சிபிஐ விசாரிக்கணும்! டிஜிபிக்கு பறந்த கடிதம்! சீறிய சி.வி.சண்முகம்!
சென்னை : அதிமுக தலைமை கழகத்தில் நடைபெற்ற திருட்டு வழக்கை சிபிசிஐடி அல்லது சிபிஐக்கு மாற்றக்கோரி சி.வி சண்முகம் டிஜிபி அலுவலகத்திற்கு தபால் மூலமாக புகார் அளித்துள்ளார்.
அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்தநிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் அருகே கடந்த 11-ம் தேதி ஓபிஎஸ் - இபிஎஸ் தரப்பினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.
இதுதொடர்பாக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, அதிமுக அலுவலகத்துக்கு வருவாய் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். பின்னர், உயர் நீதிமன்ற உத்தரவின்படி, சீல் அகற்றப்பட்டு, இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமியிடம் கட்சி அலுவலக சாவி ஒப்படைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, அதிமுக அலுவலகத்தில் பழனிசாமி தரப்பு நிர்வாகிகள் ஆய்வு செய்தனர்.

ஆவணங்கள் கொள்ளை
இந்நிலையில், அதிமுக அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் புகார் அளித்திருந்தார். அதில்," கடந்த 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்த நாளில், தலைமை அலுவலக மேலாளர் மகாலிங்கம், ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தை பூட்டிவிட்டு, அனைத்து பணியாளர்களுடன் வானகரத்தில் பொதுக்குழு நடைபெறும் மண்டபத்துக்கு சென்றுவிட்டார்.

சி.வி.சண்முகம் புகார்
இதை அறிந்த ஓ.பன்னீர்செல்வம், 300 அடியாட்கள் மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் அங்கு வந்துள்ளார். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர், கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, புகழேந்தி, பெரம்பலூர் முன்னாள் மாவட்டச் செயலாளர் ராமச்சந்திரன், எம்.எம்.பாபு, கீதா ஆகியோரும் அவருடன் சேர்ந்து, அவ்வை சண்முகம் சாலையில் இருந்த அனைத்து வாகனங்களையும் அடித்து நொறுக்கியும், மக்களை தாக்கியும், கற்களை வீசியும் அலுவலகத்துக்குள் நுழைந்துள்ளனர்.

பரபரப்பு புகார்
அலுவலகம் பூட்டியிருப்பதை பார்த்த ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் அடியாட்களுடன் சேர்ந்து கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். பின்னர், அலுவலகத்தை சூறையாடி, அங்கிருந்த விலை உயர்ந்த பொருட்கள், முக்கிய ஆவணங்களை கொள்ளையடித்து சென்றுவிட்டனர். குறிப்பாக அசல் பத்திரங்கள், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் தங்கக் கவசம் வங்கியில் வைக்கப்பட்டதற்கான அசல் ஆவணங்கள், பீரோவில் வைத்திருந்த ரூ.31 ஆயிரம் பணம், கணக்கு வழக்குகள் சம்பந்தமான விவரங்கள் அடங்கிய 2 கணினி, ஹார்டு டிஸ்க், 37 வாகனங்களின் அசல் பதிவு பத்திரம், தரை தளத்தில் உள்ள அனைத்து அறைகளின் சாவிகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள், பொருட்களை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்." என கூறியிருந்தார்.

மீட்க வேண்டும்
மேலும்," அலுவலகத்தின் பின்புறம் நிறுத்தியிருந்த வாகனங்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியுள்ளனர். ஜெயலலிதா அலுவலக அறை, ரசீது போடும் அறை, 'நமது அம்மா' அலுவலக அறை, அவைத் தலைவர் அறை, முதல் மாடியில் உள்ள கூட்ட அரங்கு, கணினி அறை, 2-ம் மாடியில் உள்ள நூலக அறை, போட்டோ கேலரி உட்பட அனைத்து அறை கதவுகளும் அடித்து உடைக்கப்பட்டுள்ளன. எனவே, ஓபிஎஸ் உள்ளிட்ட மேற்கண்ட 9 பேர் மீதும், உடன் வந்த நபர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து, கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை மீட்டு தரவேண்டும்" என கூறப்பட்டிருந்தது.

புதிய கோரிக்கை
அதிமுக தலைமை கழகத்தில் நடைபெற்ற திருட்டு வழக்கை சிபிசிஐடி அல்லது சிபிஐக்கு மாற்றக்கோரி சி.வி சண்முகம் டிஜிபி அலுவலகத்திற்கு தபால் மூலமாக புகார் அளித்துள்ளார். இதுகுறித்து சி.வி.சண்முகம் தபால் மூலம் அனுப்பி உள்ள கடிதத்தில், " அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த கொள்ளை குறித்து புகார் அளித்து இரண்டு நாட்களுக்கு மேலாகியும் இதுவரை முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யப்படவில்லை.

சிபிஐ விசாரணை
மேலும் ராயப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் ஒருதலைபட்சமாக செயல்படுகிறாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதிமுக தலைமை அலுவலகத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள அசல் ஆவணங்கள் வெள்ளி வேல் உள்ளிட்ட பொருட்கள் திருடு போயுள்ளது. எனவே காவல்துறையினர் இந்த விவகாரத்தில் சுணக்கம் காட்டுவதால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அல்லது சிபிசிஐடி போன்ற தனி விசாரணை அமைப்புகள் மூலம் விசாரணை நடத்த வேண்டும்" என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications