சிலுப்பிகிட்டு போன சிவி சண்முகம்.. வேற வேலையைப் பார்க்கப் போன வேலுமணி! அதிமுகவின் ஓயாத பஞ்சாயத்து!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியலில் கடந்த சில வாரங்களாக அரங்கேறி வரும் அதிமுக உட்கட்சி மோதல் தற்போது புதிய திருப்பத்தை எட்டியுள்ளது. தேர்தல் தோல்விக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய எஸ்.பி. வேலுமணி அணி மீண்டும் அதிமுகவின் எடப்பாடி டீமுடன் இணைந்துவிட்ட நிலையில், முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மட்டும் இன்னும் தனித்து நிற்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது. அதிலும், அவர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணையலாம் என்ற தகவல்கள் வெளியாகி வருவது பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளது.

2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்தது. திமுக கூட எதிர்க்கட்சியாக அமர்ந்த நிலையில், அதிமுக மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. இதுவே கட்சிக்குள் கடும் அதிருப்திக்கு காரணமாக அமைந்தது.

CV Shanmugam SP Velumani AIADMK

தொடர் தோல்விகளுக்குக் காரணம் எடப்பாடி பழனிசாமிதான் என்றும், அவர் தனிச்செயல்பாட்டில் ஈடுபடுகிறார் என்றும் கூறி, எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், சி. விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் தனி அணியாக செயல்படத் தொடங்கினர்.

அதிமுக உட்கட்சி மோதல்

இதன் உச்சமாக, சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், அதிமுகவில் இருந்த 25 எம்எல்ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இது அதிமுகவுக்குள் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனடியாக அந்த அணியில் இருந்தவர்களின் கட்சிப் பதவிகளை பறித்த எடப்பாடி பழனிசாமி, அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் சபாநாயகரிடம் மனு அளித்தார். அதேநேரத்தில், வேலுமணி தரப்பினருக்கும் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. தவெக அமைச்சரவையில் தங்களுக்கு இடம் கிடைக்கும் என அவர்கள் நம்பியிருந்தனர்.

எஸ்பி வேலுமணி

குறிப்பாக, சி.வி. சண்முகம், வேலுமணி உள்ளிட்ட சில முக்கிய தலைவர்கள் அமைச்சர் பதவிக்காக காத்திருந்ததாகவே அரசியல் வட்டாரங்கள் பேசின. ஆனால், முதல்வர் விஜய் அந்த விவகாரத்தில் எந்த நகர்வும் மேற்கொள்ளவில்லை. இதனால் வேலுமணி அணிக்குள் அதிருப்தி ஏற்பட்டது. இதற்கிடையில், மரகதம் குமரவேல், சத்யபாமா, ஜெயக்குமார், இசக்கி சுப்பையா உள்ளிட்ட 4 எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தது பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால், வேலுமணி அணியில் இருந்த மற்ற எம்எல்ஏக்களும் கலக்கமடைந்தனர்.

எடப்பாடி பழனிசாமி

ஒருபுறம் கட்சி தாவல் தடைச் சட்டம், மறுபுறம் அரசியல் எதிர்காலம் என்ற இரட்டை அழுத்தம் காரணமாக, மீண்டும் எடப்பாடி பழனிசாமியுடன் சமாதானம் பேச வேண்டிய நிலை ஏற்பட்டது. அதன்படி, நேற்று சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, நத்தம் விஸ்வநாதன், கே.சி. வீரமணி, எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் நேரில் சென்றனர். கொறடா உத்தரவை மீறி நடந்துகொண்டதற்கு வருத்தம் தெரிவித்து, மன்னிப்பு கடிதமும் வழங்கினர்.

சி.வி. சண்முகம்

பின்னர், இரு அணிகளும் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை சந்தித்து, ஒருவருக்கு எதிராக ஒருவர் அளித்த மனுக்களை வாபஸ் பெற்றனர். இதன் மூலம் அதிமுகவில் ஏற்பட்டிருந்த பிளவு முடிவுக்கு வந்துவிட்டதாக எஸ்.பி. வேலுமணி அறிவித்தார். "இது பிளவு அல்ல, கருத்து வேறுபாடு மட்டுமே. இப்போது அனைத்து பிரச்சினைகளும் முடிந்துவிட்டது" என்றும் அவர் கூறினார். ஆனால், இந்த முழு நிகழ்விலும் சி.வி. சண்முகம் மட்டும் பங்கேற்கவில்லை என்பதுதான் தற்போது மிகப்பெரிய அரசியல் பேசுபொருளாக மாறியுள்ளது.

தனியாக முடிவு

வேலுமணி அணியினர் அனைவரும் இபிஎஸ் இல்லத்துக்கு சென்றபோதும், சி.வி. சண்முகம் மட்டும் செல்லவில்லை. அவரை சமாதானப்படுத்த தங்கமணி மற்றும் வேலுமணி தனியாக சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. ஆனால், அந்த பேச்சுவார்த்தை வெற்றியளிக்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. கடைசி வரை அவர் கடும் ஆவேசத்திலேயே இருந்ததாகவும், "இனி தனியாக முடிவு எடுக்கலாம்" என்ற மனநிலையில்தான் இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குதிரை பேரம்

இதன் பின்னணியில்தான் அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணையலாம் என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஏற்கனவே அதிமுகவிலிருந்து பல எம்எல்ஏக்கள் தவெகவில் இணைந்துள்ள நிலையில், சி.வி. சண்முகமும் அதே பாதையை தேர்வு செய்வாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஆனால், அவரை விஜய் ஏற்றுக்கொள்வாரா என்ற கேள்வியும் எழுகிறது. ஏற்கனவே "குதிரை பேரம்" என்ற விமர்சனத்தில் தவெக சிக்கியுள்ள நிலையில், மேலும் முக்கிய அதிமுக தலைவர்களை இணைத்துக்கொண்டால் எதிர்க்கட்சிகள் கடுமையாக தாக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தவெகவில் இணைகிறாரா?

இதனால், சி.வி. சண்முகத்தின் அடுத்த அரசியல் நகர்வு என்னவாக இருக்கும் என்பது தற்போது தமிழக அரசியலில் மிகப்பெரிய கேள்வியாக மாறியுள்ளது. அவர் மீண்டும் அதிமுகவில் இணைவரா? தனியாக அரசியல் செய்வாரா? அல்லது விஜய் தலைமையிலான தவெகவில் இணைகிறாரா? என்பது விரைவில் தெரியவரும் என அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+