அரபிக்கடலில் உருவாகும் பைபர்ஜோய் புயல்..எந்த நாடு பெயர் சூட்டியது தெரியுமா?
சென்னை: அரபிக்கடலோரம் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுவடைந்து புயலாக உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அரபிக்கடலில் உருவாகும் புயலுக்கு பைபர்ஜோய் புயல் என்று பெயர் வைக்கப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய கிழக்கு-மத்திய அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மேலும் வலுப்பெற வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புயலாக உருவானால், அதற்கு "பைபர்ஜோய் புயல்" என்று பெயர் வைக்கப்படும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கேரளா, தமிழ்நாட்டில் வழக்கமாக ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கி விடும். ஜூன் 6ம் தேதி ஆன நிலையில் இதுவரை தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறியே தென்படவில்லை. இந்த நிலையில் அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஏற்பட்டுள்ளதால் ஒருசில நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே நேரம், அரபிக்கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் அடுத்த 3 நாட்களில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கேரளா, தெற்கு கர்நாடகாவின் உள்பகுதியில் மழைப்பொழிவுக்கு அதிக வாய்ப்புள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழை தொடரும் என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாளை முதல் 10ஆம் தேதி வரை கேரளாவில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் கூறியுள்ளது. பைபர்ஜோய் புயல் காரணமாக தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் என்று தனியார் வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
ஒவ்வொரு கடல் பகுதி ரீதியாக புயலின் பெயர் ஏற்கனவே முடிவு செய்யப்படும். அதாவது பசுபிக் பெருங்கடல், அட்லாண்டிக் கடல் என வெவ்வேறு கடல் பகுதிக்கு தனித்தனி பெயர் பட்டியல் தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 7 தட்பவெப்ப மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் வட இந்திய பெருங்கடல் மண்டலத்தில் இந்தியா இடம்பெற்றுள்ளது. இதனுடன் வங்கதேசம், ஈரான், மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், கத்தார், சவுதி அரேபியா, இலங்கை, தாய்லாந்து, ஐக்கிய அரபு நாடுகள், ஏமன் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. மொத்தமுள்ள 13 நாடுகளும் தலா 13 பெயர்களை தேர்வு செய்து வைத்துள்ளது. இதில் ஒவ்வொரு பெயராக தேர்வு செய்து புயலுக்கு பெயர்கள் வைக்கப்படுகின்றன.
புயலின் வேகம், அது ஏற்படுத்தும் விளைவுகளைப் புரிந்துகொள்வதற்கு ஓர் அளவுகோல் தேவை என்று பிரிட்டிஷ் ராணுவ அட்மிரல் சர் பிரான்சிஸ் பீபோர்ட் 19ஆம் நூற்றாண்டில் நினைத்தார். இதையடுத்துப் புயலை வகைப்படுத்த ஓர் அளவுகோலை அவர் உருவாக்கினார். இந்த அளவுகோலின்படி பூஜ்யம் என்றால் எதுவுமே அசையாது. 5 என்றால் மிதமான தென்றல் காற்று. 8 என்றால் ஓரளவு புயல் காற்று, மரக்கிளைகள் ஓடியலாம். 10 என்றால் புயல் காற்று வீசும். 11 தொடங்கி 17 வரையிலான வேகத்தில் வீசும் காற்றுகள் வெப்பமண்டலப் புயல்கள். இவை அனைத்துமே மணிக்கு 74 கி.மீ. வேகத்துக்கு அதிகமாக காற்று வீசுபவை.
புயல் என்பது உலகின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. மேற்கிந்திய தீவுகளில் ஹரிகேன் அதாவது சூறாவளி என்றும் அமெரிக்காவில் டொராண்டோ என்றும் அதாவது சுழன்றடிக்கும் சூறாவளி என்றும் அழைப்பார்கள். சீனக் கடற்கரைப் பகுதிகளில் தைபூன் என்றும் அதாவது சூறாவளிப் புயல் என்றும் மேற்கு ஆஸ்திரேலியக் கடற்கரைப் பகுதிகளில் வில்லி வில்லி என்று அழைக்கப்படுகிறது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் சைக்லோன் எனப்படுகிறது. பல பெயர்களில் அழைக்கப்பட்டாலும் பொதுவான பெயர் புயல்தான்.
ஒவ்வொரு புயலுக்கும் தனித்தனிப் பெயர் வைத்து அழைப்பார்கள். வானிலை ஆய்வாளர்களும், கடல் மாலுமிகளும், பொதுமக்களும் வானிலை எச்சரிக்கையைச் சரியாகப் புரிந்துகொண்டு செயல்படுவதற்கும் ஞாபகத்தில் வைத்துக்கொள்வதற்கும் வசதியாகவே பெயர்கள் கொடுக்கப்படுகின்றன. இந்த பெயர்கள் மூலம் தனிபுயல்களை எளிதில் அடையாளம் காணமுடியும். அதன் வளர்ச்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும். தயார் நிலையில் இருக்க முடியும். மேலும் குழப்பங்களை தவிர்க்கவும் இது வழிவகுக்கும். ஒரு புயலுக்கு பெயர் வைக்கும் போது சில விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த விதிகளுக்கு உட்பட்டிருந்தால் மட்டுமே வெப்ப மண்டல சூறாவளிகளுக்கான குழு அந்த பெயரை இறுதிப்படுத்தும்.
புயலுக்கு எண் கொடுப்பதால் ஏற்படும் குழப்பத்தை, இதன்மூலம் தவிர்க்கலாம். பெயர்கள் சுருக்கமாக இருக்க வேண்டும் என்பதே அடிப்படை விதி. இரண்டாம் உலகப் போர் நிகழ்ந்த போது புயல்களை அடையாளம் காண்பதற்குப் பெண்களின் பெயர்களை வைக்கும் வழக்கத்தை வானிலை ஆய்வாளர்கள் தொடங்கி வைத்தனர். 1953இல் இருந்து அமெரிக்காவிலும் இது தொடர்ந்தது. ஆனால், அழிவை ஏற்படுத்தும் புயல்களுக்குப் பெண்களின் பெயரைச் சூட்டுவதா என்று பெண்ணியவாதிகள் எதிர்க்க ஆரம்பித்த பிறகு, 1978 முதல் ஆண்களின் பெயர்களும் இந்தப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்பட்டன.
வட இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைக்கும் நடைமுறை 2000ஆம் ஆண்டில் தொடங்கியது. டெல்லியில் உள்ள உலக வானிலை அமைப்பின் மண்டலச் சிறப்பு வானிலை ஆய்வு மையம் 2004 செப்டம்பரில் இருந்து புயல்களுக்குப் பெயர் வைக்க 64 பெயர்களைப் பட்டியலிட்டுள்ளது.
இந்தியா 13 புயல்களுக்கான பெயரை வழங்கியுள்ளது. சமீபத்தில் வங்கக்கடலில் மோச்சா புயல் உருவானது. அரபிக்கடலில் இன்னும் சில தினங்களில் உருவாக உள்ள புதிய புயலுக்கு வங்கதேசம் வழங்கிய பைபர்ஜோய் என்று பெயரிடப்பட்டுள்ளது.
அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை அடுத்த 48 மணி நேரத்தில் இது வடக்கு நோக்கி நகர்ந்து தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய கிழக்கு-மத்திய அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை விரைவில் தொடங்கும் எனவும் பருவமழையானது மும்பையை அடைய இந்த புயல் உதவும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. ஜூன் 8 முதல் ஜூன் 10 வரை கர்நாடகா,மகாராஷ்டிரா கடற்கரையோரங்களில் கடல் கொந்தளிப்பாகவும் காணப்படும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்












Click it and Unblock the Notifications