மழை விட்டு 12 மணி நேரமாகியும் கார்களை எடுக்காத மக்கள்.. வேளச்சேரி மேம்பாலத்தில் வரிசைகட்டி நிற்குதே!
சென்னை: புயல் எச்சரிக்கை வந்ததுமே, சென்னை மக்கள் அடித்துப் பிடித்து தங்கள் கார்களை மேம்பாலங்களில் நிறுத்தத் தொடங்கினர். நேற்று மாலையுடன் சென்னையில் மழை நின்ற நிலையில், இன்னும் பெரும்பாலானோர் தங்கள் கார்களை எடுக்கவில்லை. வேளச்சேரி மேம்பாலத்தில் 500க்கும் மேற்பட்ட கார்கள் தற்போதும் வரிசைகட்டி நிற்கின்றன.
ஒவ்வொரு ஆண்டும் பருவமழைக் காலங்களில் சென்னையில் கனமழை வெள்ளம் ஏற்படுவது வழக்கமாகியுள்ளது. ஃபெஞ்சல் புயலால் கனமழை கொட்டித் தீர்த்த நிலையில், சென்னையில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. குறிப்பாக வேளச்சேரி, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், பெரும்பாக்கம், கோவிலம்பாக்கம், கீழ்கட்டளை, துரைப்பாக்கம், தரமணி, பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

சென்னையில் கனமழை பெய்தாலே பாதிக்கப்படும் பகுதிகளில் முக்கியமானதாக வேளச்சேரி உள்ளது. அந்தப் பகுதியில் குடியிருப்புகளில் நிறுத்தப்பட்டிருக்கும் கார்கள், வெள்ள நீரில் பாதிப்படைவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது போன்ற மழை நேரங்களில் தங்களது கார்களை பாதுகாப்பாக வைப்பதற்காக, உயரமான பகுதிகளில் பார்க்கிங் செய்வது வழக்கமாக உள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் புயல் எச்சரிக்கையை தொடர்ந்து கனமழை பெய்ததால், குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்தால் கார்கள் பாதிப்படையும் என்பதால், வேளச்சேரி, பள்ளிக்கரணை பாலங்களில் கார்களை குடியிருப்பு வாசிகள் பார்க்கிங் செய்தனர். மழைநீர் புகுந்து கார் பழுதானால் பல ஆயிரம் ரூபாயை செலவழிக்க வேண்டியதிருக்கும் என்பதால் மக்கள் பாதுகாப்பிற்காக கார்களை மேம்பாலத்தில் நிறுத்தினர்.
வேளச்சேரி, ரயில்வே நிலையம் அருகே உள்ள மேம்பாலத்தின் மீது ஏராளமான கார்கள் வரிசைகட்டி நின்றன. இதனால் வேளச்சேரி பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதற்கு போக்குவரத்து காவல் துறை அபராதம் விதித்ததாக வீடியோ வெளியானது. ஆனால், மேம்பாலத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார்களுக்கு அபராதம் எதுவும் விதிக்கப்படவில்லை என்று காவல்துறை விளக்கம் அளித்தது.
இந்த நிலையில், சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் ஃபெஞ்சல் புயலால், கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் வேளச்சேரி மக்கள் மீண்டும் மேம்பாலத்தில் கார்களை நிறுத்தினர். வேளச்சேரி பாலத்தின் இரு பகுதிகளிலும் மக்கள் கார்களை நிறுத்தினர்.
இந்நிலையில், ஃபெஞ்சல் புயல் நேற்று இரவு புதுச்சேரி அருகே கரையைக் கடந்த நிலையில், சென்னையில் மழை விட்டுள்ளது. மழை விட்ட நிலையில், மழைநீர் தேங்கிய இடங்களில் தண்ணீர் அகற்றப்பட்டு வருகிறது. எனினும், வேளச்சேரி மேம்பாலத்தில் கார்களை பார்க் செய்தவர்கள் இன்னும் காரை எடுக்கவில்லை. 500க்கும் மேற்பட்ட கார்கள் வரிசை கட்டி நிற்கின்றன. போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தாமல் அவர்கள் கார்களை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக உள்ளது.












Click it and Unblock the Notifications