மிக்ஜாம்: தமிழ்நாட்டுக்கு உடனே ரூ5,000 கோடி வழங்குக- மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்!
சென்னை: மிக்ஜாம் மழை வெள்ள பாதிப்பு நிவாரணப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு உடனடியாக ரூ5,000 கோடி நிதி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மிக்ஜாம் புயல், மழை வெள்ள பாதித்த பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பார்வையிட்டார். முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை நேரில் சந்தித்தும் அவர்களுக்கான உதவிகளை கேட்டறிந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

இதன் பின்னர் சென்னை செய்தியாளர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது: வரலாறு காணாத பெருமழையால் மழை நீர் தேங்கி இருந்தது. மழை வெள்ளத்தைப் பொருட்படுத்தாமல் நேற்று முதலே மீட்பு, நிவாரணப் பணிகள் தொடங்கிவிட்டன.
வராலாறு காணாத மழை வெள்ளத்தை நாம் சந்தித்த போதும் கடந்த காலத்தை ஒப்பிடும்போது பாதிப்பு குறைவாக உள்ளது. 2015ம் ஆண்டை ஒப்பிடும்போது தற்போது மிக்ஜாம் புயலால் ஏற்பட்டுள்ள மழையின் அளவு மிக அதிகம்.
சென்னையில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோதும், தமிழ்நாடு அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் உயிரிழப்புகள் மற்றும் பாதிப்புகள் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. 2015ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் 199 பேர் உயிரிழந்தனர். ஆனால் தற்போது அதைவிட அதிகமான மழை பெய்தும் 9 பேர் மட்டும் உயிரிழந்துள்ளனர். இந்த உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்க் கூடாது. இதற்காக மிகவும் வருந்துகிறேன்.
ரூ4,000 கோடி மதிப்பில் ஏற்படுத்திய மழைநீர் வடிகால் பணிகளால்தான் வரலாறு காணாத மழையிலும் பாதிப்புகள் மிக குறைவாக உள்ளன. மழை, வெள்ள பாதிப்புகளுக்காக மத்திய அரசு ரூ5,000 கோடி உடனடியாக வழங்க வேண்டும் என கேட்டு இன்று கடிதம் அனுப்ப உள்ளோம். நாடாளுமன்றத்திலும் திமுக எம்.பி.க்கள் இந்த கோரிக்கையை மத்திய அரசிடம் இன்று வலியுறுத்துவார்கள். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications