இன்று உருவாகுது மோச்சா புயல்.. தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு வெளுக்க போகும் மழை
சென்னை: அந்தமானை ஒட்டிய வங்ககடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று புயலாக (மோச்சா புயலாக) வலுப்பெறுவதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் மே 13ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்து வந்தாலும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. மேலும் கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதேபோல, தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று அதே இடத்தில் நிலை கொண்டிருக்கிறது.
இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இன்று (புதன்கிழமை) தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்க கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும். இது நாளை வடமேற்கு திசையில் நகர்ந்து, வடகிழக்கு திசையில் திரும்பி வங்காளதேசம்-மியான்மர் கடற்கரை நோக்கி நகரக்கூடும்.
இந்த புயலின் காரணமாக இன்று முதல் 13-ந் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் " இவ்வாறு வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

காற்றின் வேகம் 50 கி.மீ. முதல் 70 கி.மீ. வரை இருக்கும் என்பதால் 11-ந் தேதி வரையிலும் அந்தமான் கடல் பகுதிகளுக்கும், காற்றின் வேகம் 70 கி.மீ. முதல் 100 கி.மீ. வரை வீச வாய்ப்பு இருக்கிறது. மேலும் இன்று முதல் 13-ந் தேதி வரை தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளுக்கும், 60 கி.மீ. முதல் 150 கி.மீ. வேகத்தில் காற்றின் வேகம் இருக்கக்கூடும்.
மேலும் 13-ந் தேதி வரை மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிகளுக்கும், 120 கி.மீ. வேகம் வரை காற்றின் வேகம் இருக்கக்கூடும் . எனவே வரும் 13-ந் தேதி வரை மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளுக்கும் மீனவர்கள் செல்லவேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. இதனிடையே ஆழ்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருக்கும் மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.












Click it and Unblock the Notifications