"கேரள முதல்வர் பினராயி விஜயன் தேர்தலில் தோற்கப்போகிறார்” - டிகே சிவக்குமார் பாய்ச்சல்!
பெங்களூர்: "கேரள முதல்வர் அரசியல் விளையாட்டில் ஈடுபடுகிறார். அவர் தேர்தலில் தோற்கப்போகிறார். உண்மைகளை அறியாமல் அரசியல் செய்து வருகிறார் பினராயி விஜயன்." என கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் காட்டமாகக் கூறியுள்ளார். கடந்த சில நாட்களாக கேரள முதல்வருக்கும், கர்நாடக காங்கிரஸ் அரசுக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது.
கர்நாடக மாநிலம் பெங்களூர் யலஹங்கா கோகிலு பகுதியில் பக்கீர் காலனி, வசீம் லே அவுட் ஆகிய இடங்களில் பொது இடங்களில் இருந்த ஆக்கிரமிப்பு வீடுகள் கடந்த டிசம்பர் 20 ஆம் தேதி அகற்றப்பட்டன. பாதிக்கப்பட்ட மக்கள் புகாரை தொடர்ந்து, ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட பகுதிகளில் மார்க்சிஸ்ட் கட்சி குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். வீடுகளை இழந்த மக்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து கர்நாடகா அரசின் நடவடிக்கையை கேரள முதல்வர் பினராயி விஜயன் விமர்சித்து இருந்தார். கேரள முதல்வர் பினராயி விஜயன் இந்த நடவடிக்கையை "புல்டோசர் ராஜ்ஜியம்" என்றும் சிறுபான்மையினருக்கு எதிரான அரசியல் என்றும் விமர்சித்தார். பினராயி விஜயனின் விமர்சனத்தை கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கண்டித்து இருந்தார்.
இந் நிலையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட பகுதிகளில் ஒன்றான பக்கீர் காலனிக்கு கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் சென்றார். அங்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை அவர் பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து, இன்று செய்தியாளர்களைச் சந்தித்த டி. கே. சிவகுமார் பேசுகையில், "கேரள முதல்வர் அரசியல் விளையாட்டில் ஈடுபடுகிறார். அவர் தேர்தலில் தோற்கப்போகிறார்.
உண்மைகளை அறியாமல் அரசியல் செய்து வருகிறார் பினராயி விஜயன். கர்நாடக விவகாரங்களில் தேவையின்றி தலையிடுகிறார். கர்நாடகத்தில் அரசு சொத்தை சட்டவிரோத ஆக்கிரமிப்பாளர்கள் கையகப்படுத்துவதை நாங்கள் விரும்பவில்லை. பெங்களூரில் குடிசைப் பகுதிகள் வருவதையும் விரும்பவில்லை. அரசு சொத்தை பாதுகாக்க வேண்டியது எங்களது கடமை. அதையே நாங்கள் செய்கிறோம்" என்றார்.
இந்த விவகாரம் குறித்து பேசிய கர்நாடக முதல்வர் சித்தாரமையா, "கேரள சட்டப்பேரவைத் தேர்தல் மார்ச் அல்லது ஏப்ரலில் நடைபெறவுள்ளதை ஒட்டியே பெங்களூர் ஆக்கிரமிப்பு அகற்றம் விவகாரத்தை சர்ச்சையாக்கி பேசுகிறார் கேரள முதல்வர். இதன் காரணமாகவே, அவர் ஒரு எம்.எல்.ஏவையும் எம்.பியையும் சம்பவ இடத்துக்கு ஆய்வுக்கு அனுப்பினார்.
இந்த இடம் அரசுக்கு சொந்தமானது. அங்கு வசித்து வந்த மக்கள் தற்காலிக குடிசைகளில் இருந்தனர். அவற்றையே மாநகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்தி இருக்கிறது.
அந்த மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டும் வருகிறது. எக்காரணத்தைக் கொண்டும் சட்டவிரோத வசிப்பிடங்களை அனுமதிக்க முடியாது" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications