“பச்சோந்தி” நிர்மல் குமார்.. “நிஜத் தலைவன்” அண்ணாமலைக்கே துரோகமா? வரிந்து கட்டி வந்த பாஜக டெய்சி
"உங்களை போன்ற பச்சோந்திகளுக்கு இத்தனை உயர்ந்த பதவி கொடுத்த நிஜ தலைவன் அண்ணாமலைக்கு எத்தனை பெரிய துரோகம்? உங்களை போன்றவர்கள் கட்சியை விட்டு போனது நல்லதே” என்று டெய்சி விமர்சனம்
சென்னை: பாஜக ஐடி விங் மாநில தலைவராக இருந்த நிர்மல் குமார் நேற்று அண்ணாமலை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி கட்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்த நிலையில், அவரை பச்சோந்தி என்று விமர்சித்து உள்ளார் பாஜக சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் டெய்சி. நிர்மல் குமார் போன்றவர்கள் கட்சியை விட்டு சென்றதே நல்லது எனவும் கூறினார்.
நேற்று நிர்மல் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், "என்னால் முடிந்த வரை பல சங்கடங்களை கடந்து கடந்த 1.5 ஆண்டுகளாக பயணித்தேன்! உண்மையாக நேர்மையாக உழைத்தேன், வேதனை மட்டுமே மிச்சம்! விடைபெறுகிறேன்." என்று குறிப்பிட்டு ஒரு கடிதத்தை வெளியிட்டால்.
அந்த கடிதத்தில் அண்ணாமலையின் பெயரை குறிப்பிடாமல், 420 மலை என்று குறிப்பிட்டு அவர் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து விலகலுக்கான காரணத்தை நிர்மல் குமார் குறிப்பிட்டு இருந்தார்.

விலகுகிறேன்
அதில், "கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பலநூறு முறை சிந்தித்து இன்று நான் பாஜவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்கிறேன். பல ஆண்டுகளாக எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் உண்மையாக, நேர்மையாக கட்சியின் வளர்ச்சிக்காக என்னால் முடிந்த வரை பணியாற்றினேன் இன்று விடைபெறுகிறேன்.

ஒன்றரை ஆண்டுகள்
என் மீது நம்பிக்கை வைத்து என்னுடன் பயணித்த உங்களிடம் எனது இந்த முடிவிற்கான காரணத்தை தெரிவிப்பது எனது கடமை, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழக பாஜக தலைமை தொண்டர்களையும் கட்சியையும் செருப்பாக பயன்படுத்தி கட்சியை பற்றி துளியும் சிந்திக்காது, சொந்த கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் வேவு பார்த்து ஆனந்தம் அடைவதை போன்ற எதுவும் இல்லை.

செங்கல் வியாபாரம்
அதையும் தாண்டி தன்னை நம்பி இருக்கும் தொண்டர்கள், கட்சி மற்றும் கமலாலயத்தின் ஒவ்வொரு செங்கலையும் வியாபாரமாக்கி இடத்திற்கேற்ப நடித்து ஏமாற்றி வரும் தலைமையை பார்த்து ஒவ்வொரு நாளும் வேதனை அடைந்தது தான் மிச்சம். தொண்டர்களை மதிக்காது தான்தோன்றி தனம் இவற்றுடன் மனநலம் குன்றிய மனிதரை போல் செயல்படும் நபரால் கட்சி அழிவை நோக்கி செல்வதை ஒவ்வொரு நாளும் பார்க்க முடிகிறது.

20% கூட இல்லை
2019 யில் இருந்த கட்சி அமைப்பில் தற்போது 20% கூட இல்லை அதைப்பற்றி துளியும் கவலை இல்லாமல் மாய உலகத்தில் சுற்றி வரும் ஒரு நபரால் கள எதார்த்தத்தை என்றும் உணர முடியாது, அதை உணர்த்த முயன்று என்னை போன்று பலர் தோல்வியுற்றோம். எல்லாவற்றிற்கும் மேலாக நான் ஒரு அமைச்சருடன் கடுமையான சட்ட போராட்டம் நடத்தி வரும் நிலையில் அந்த அமைச்சரை வெளியில் வீராவேசமாக பேசிவிட்டு திரைமறைவில் பேரம் பேசும் நபருடன் எப்படி பயணிக்க முடியும்?

ஏமாற்றும் தலைமை
மொத்தத்தில் திராவிட மாடல் அமைச்சர்களேயே மிஞ்சும் அளவிற்கு ஒரு #420மலை-யாக இருக்கும் நபரால் தமிழக பாஜகவிற்கு மட்டுமல்ல தமிழகத்திற்கே மிகப்பெரிய கேடு. தன்னை நம்பி இருக்கும் தொண்டர்கள் மற்றும் கட்சியை ஏமாற்ற நினைக்கும் ஒரு தலைமையை நம்பி எப்படி பயணிக்க முடியும்?" என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

டெய்சி தங்கய்யா
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு இருக்கும் பாஜக சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் டெய்சி, "சிடி நிர்மல் குமார் இன்னும் எத்தனை கட்சி மாறபோகிறீர்கள்? உங்களை போன்ற பச்சோந்திகளுக்கு இத்தனை உயர்ந்த பதவி கொடுத்த நிஜ தலைவன் அண்ணாமலைக்கு எத்தனை பெரிய துரோகம்? உங்களை போன்றவர்கள் கட்சியை விட்டு போனது நல்லதே" என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications