சென்னை திருச்சி ஹைவேயில் துணிகரம்! கார் கண்ணாடியை உடைத்து.. நகை கடை மேலாளரிடம் 10 கிலோ தங்கம் கொள்ளை
திருச்சி: திருச்சி டூ சென்னை தேசிய நெடுஞ்சாலையில் (Chennai-Trichy Highway:) இரவில் துணிகர சம்பவம் அரங்கேறியுள்ளது. திருச்சியில் இருந்து சென்னை சென்ற நகைக்கடை மேலாளரிடம் 10 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியில் இருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்த நகைக்கடை மேலாளர் காரின் கண்ணாடியை உடைத்து மிளகாய் பொடியை தூவி இந்த துணிகர சம்பவத்தை மர்ம கும்பல் அரங்கேற்றியுள்ளனர்.
சமீப நாட்களாக தங்க நகை கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. தங்கத்தின் விலை அதிகமாக இருப்பதால், நகைகளை திருடி செட்டில் ஆக வேண்டும் என நினைத்து வருகிறார்கள். ஆனால் போலீசாரின் பிடியில் சிக்கி கடைசியில் கம்பி எண்ணும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

அப்படித்தான், திருச்சி சமயபுரத்தில் மர்ம கும்பல் ஒன்று இரவில் துணிகர கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர். இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
சென்னை சவுக்கார்பேட்டையில் உள்ள பிரபல ஆர்.கே. ஜுவல்லரியில் இருந்து தமிழகம் முழுக்க பல்வேறு நகைக்கடைகளுக்கு தங்கம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆர் கே ஜுவல்லரி மேலாளர் ஒருவர் கடந்த 8 ஆம் தேதி சென்னையில் இருந்து கிலோ கணக்கில் ஆபரண தங்கத்தை எடுத்துக் கொண்டு காரில் திண்டுக்கல் புறப்பட்டார்.
அங்கு சில கடைகளுக்கு தங்க நகைகளை விற்பனை செய்தார். பின்னர் மீதமுள்ள 10 கிலோ தங்கத்துடன் 3 ஊழியர்களுடன் நேற்று இரவு சென்னைக்கு காரில் திரும்பினார். கார் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. திருச்சி சமயபுரம் அருகே வந்தபோது சிறுநீர் கழிப்பதற்காக காரை நிறுத்தியிருக்கிறார்கள்.
அப்போது திடீரென மர்ம கும்பல் ஒன்று ஓடி வந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்கள் மீது மிளகாய் பொடி தூவி, காரின் கண்ணாடியை உடைத்தனர். பின்னர் காரில் இருந்த 10 கிலோ தங்கத்தை கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதனால் செய்வதறியாது திகைத்த நகைக்கடை மேலாளர் உடனடியாக இதுபற்றி சமயபுரம் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். இதன் பிறகு கொள்ளை கும்பலை பிடிக்க 4 தனிப்படைகளை அமைத்து உத்தரவிடப்பட்டது. இதையடுத்து தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நகைக்கடை மேலாளரின் காரை வழிமறித்து 10 கிலோ நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications