அசுரர்களை சம்ஹாரம் செய்த அம்பிகை..தமிழகமெங்கும் விஜயதசமி கோலாகலம்..கோவில்களில் வித்யாரம்பம்
சென்னை: நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று விஜயதசமியை முன்னிட்டு பல ஊர்களில் அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. கோவில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விஜயதசமி திருவிழா தீமை என்ற அரக்கனை வென்று நன்மையை நிலை நாட்டிய விழாவாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. வட இந்தியாவில் துர்க்கா பூஜை, ராவண வதம் என்று கொண்டாடப்பட்டாலும் தமிழ்நாட்டில் எருமைத்தலையானான மகிஷாசுரனை அழித்து சம்ஹாரம் செய்த நாள்தான் விஜயதசமியாக கொண்டாடப்படுகிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா ஒன்பது நாட்கள் கோலாகலமாக நடைபெற்றது. தினம் ஒரு அலங்காரத்தில் அம்மன் கொலு மண்டபத்தில் எழுந்தருளினார். நேற்றைய தினம் மகிஷாசூரமர்த்தினி கோலத்தில் அம்மன் எழுந்தருளி அருள் பாலித்தார். இன்றைய தினம் வீணை கச்சேரி நடைபெறுகிறது. தமிழகம் மட்டுமின்றி உலகெங்கிலும் உள்ள வீணை கலைஞர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.
சமயபுரம் மாரியம்மன் அம்பு போடும் நிகழ்ச்சி
சக்தி தலங்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா கடந்த பத்து நாட்களாக கோலகலமாக நடைபெற்று வருகிறது. விஜயதசமியையொட்டி இன்று இரவு 7.30 மணிக்கு அம்பாள் வெள்ளி குதிரை வாகனத்தில் வேடுபரி அலங்காரத்தில் கோவிலிலிருந்து புறப்பாடாகி வன்னிமரம் சென்றடைகிறார். அங்கு அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
திருநெல்வேலி தசரா விழா
நெல்லை டவுனில் உள்ள பிட்டாபுரத்தி அம்மன், துர்க்கையம்மன், சாலியர் தெரு மாரியம்மன், நல்லமுத்தம்மன், முப்பிடாதி அம்மன், உச்சிமாகாளி அம்மன், தடிவீரன் கோவில் தெரு மாரியம்மன், திருப்பணிமுக்கு மாரியம்மன், தங்கம்மன், காந்தாரி அம்மன், பூமாதேவி அம்மன், ஆயுள்பிராட்டி அம்மன், ராஜராஜேசுவரிஅம்மன், திரிபுரசுந்தரி அம்மன், வாகையடி அம்மன், முத்தாரம்மன், சுந்தராட்சி அம்மன், அறம்வளர்த்தநாயகி அம்மன், பூமாதேவி அம்மன் உள்ளிட்ட அம்மன் கோவில்களிலும் தசரா விழா கோலாகலமாக நடைபெற உள்ளது.
விஜயதசமி புராண கதை
சும்பன், நிசும்பன் என்ற அண்ணன், தம்பி இருவரும், அரக்கர்கள். அவர்களது அக்கிரம ஆட்சி தாங்காமல், மக்கள் தவித்திருக்கின்றனர். இந்த அரக்கர்களை எப்படியாவது அழித்து, மக்களைக் காப்பாற்ற வேண்டும் என, சிவா, விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளிடம் தேவர்கள் முறையிட்டிருக்கின்றனர். மும்மூர்த்திகளும், மகா சக்தியைத் தோற்றுவித்து, அவளுக்குத் தங்களது சக்தியையும், ஆயுதங்களையும், வாகனங்களையும் அளித்தனர். தேவி, அழகிய பெண் உருவம் எடுத்து, பூலோகத்திற்கு வந்தாள். அரக்கர்களின் வேலையாட்கள், சண்டன், முண்டன் என்ற இருவரும், இந்த அழகுப் பதுமையான மகாசக்தியைப் பார்த்ததும், தங்களது அரசர்களுக்கு ஏற்றவள் இவள் என முடிவு செய்து, தேவியிடம், தங்களது ராஜாக்களில் ஒருவரைத் திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினர்.
அன்னையுடன் போர்
அப்போது தேவி, தான் ஒரு சபதம் செய்திருப்பதாகக் கூறி, "யார் என்னை போரில் வெல்கின்றனரோ, அவர்களைத்தான் மணப்பேன்' என்றாள். அதற்கு சண்டனும், முண்டனும், "தேவர்கள், அசுரர்கள் எல்லாருமே, எங்கள் ராஜாக்களுக்கு அடிமை. பெண்ணான நீ எம்மாத்திரம்? பேசாமல் எங்களுடன் வா...' என்றனர். அதற்கு அம்பிகையோ,"தெரிந்தோ, தெரியாமலோ, சபதம் செய்து விட்டேன். நீ போய் ராஜாவிடம் சொல். அவர்கள் எப்படி சொல்கின்றனரோ, அப்படியே நடக்கட்டும் என்று கூறினார்.
ரக்த பீஜன்
போர் தொடங்கியது. ஒவ்வொரு அசுரர்களாக அம்பிகையுடன் போரிட்டனர். அவர்கள் எல்லாரையும் அழித்தாள் தேவி. அதில், ரக்த பீஜன் என்று ஒரு அரக்கன். இவன் கடுந்தவம் செய்து, ஒரு வரம் பெற்றிருக்கிறான். இவன் உடம்பிலிருந்து விழும் ஒவ்வொரு சொட்டு ரத்தத்திலிருந்தும், மீண்டும் ஒரு ரக்த பீஜன் தோன்றுவான். அவனும் ரக்த பீஜன் போலவே ஆற்றலுடன் இருப்பான். ரக்த பீஜனை தேவி அழிக்கத் துவங்கி, கீழே விழும் ஒவ்வொரு துளி ரத்தத்திலும், ஒரு ரக்த பீஜன் தோன்றி, உலகமே ரக்த பீஜர்களால் நிறைந்தது.
அசுர வதம் செய்த அன்னை
உடனே தேவி, தன்னிடம் உள்ள சாமுண்டி என்ற காளியை, வாயை அகலமாகத் திறந்து, ரக்த பீஜனின் உடம்பிலிருந்து விழும் ஒவ்வொரு துளி ரத்தத்ததையும் குடிக்க வேண்டும் என்று ஆணையிட்டாள். சாமுண்டியும், தேவியின் கட்டளையை நிறைவேற்றினாள். கடைசியில் ரக்த பீஜன் தன் ரத்தமெல்லாம் வெளியேற சோர்ந்து, இறந்து விடுகிறான். இறுதியில் சும்பன், நிசும்பன்களையும் அழித்து விடுகிறாள் தேவி. 9 நாட்கள் போர் முடிந்து பத்தாம் நாள் வெற்றி திருநாளாக விஜயதசமியாக கொண்டாடப்படுகிறது.
கோவில்களில் வித்யாரம்பம்
விஜயதசமியை முன்னிட்டு கோவில்களிலும், பள்ளிகளிலும் நேற்று வித்யாரம்பம் நடைபெற்றது. கூத்தனூர் சரஸ்வதி கோவிலில் நெல், பச்சரிசியைக் கொண்டு அச்சரம் எழுதி குழந்தைகள் தங்களின் கல்வியை ஆரம்பித்தனர். விஜயதசமி நாளில் கல்வி, கலைகள் என இந்நாளில் எது தொடங்கினாலும் ஜெயமாக முடியும் என்பது நம்பிக்கை. குழந்தைகளின் கை பிடித்து, பரப்பி வைத்திருக்கும் நெல்லில் 'அ' என்று எழுத கற்றுக் கொடுப்பது வித்யாரம்பம் எனப்படுகிறது.