200 சவரன் நகை கேட்டார்கள்! பாமக MLA சதாசிவம் குடும்பத்தினர் மீது மருமகள் வீட்டார் வரதட்சணை புகார்!
சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் குடும்பத்தினர் மீது மருமகள் வீட்டார் வரதட்சணை புகார் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு பாமக எம்.எல்.ஏ.சதாசிவத்தின் சம்பந்தி முருகேசன் அளித்துள்ள பேட்டியில் குற்றச்சாட்டுக்களை அடுக்கியுள்ளார்.
திருமணம் நடக்கும் வரை தங்களிடம் அன்பாக பேசிய சதாசிவம் எம்.எல்.ஏ. குடும்பத்தினர், திருமணம் முடிந்து 30 நாட்களில் தங்கள் சுயரூபத்தை வெளிப்படுத்த ஆரம்பித்ததாக வேதனைத் தெரிவிக்கிறார் பெண்ணை பெற்ற தந்தை.

சேலம் மாவட்டம் மேட்டூர் தொகுதி பாமக எம்.எல்.ஏ.ஆக இருப்பவர் சதாசிவம். இவரது மனைவி பெயர் பேபி, மகன் பெயர் சங்கர். தனது மகன் சங்கருக்கு கடந்த 2019ஆம் ஆண்டு மேட்ரிமோனியல் மூலம் பெண் பார்த்து பெரியவர்களால் பேசி நிச்சயிக்கப்பட்டு, முருகேசன் என்பவரது மகள் மனோலியாவை திருமணம் செய்து வைத்திருக்கிறார் சதாசிவம் எம்.எல்.ஏ.
மகனுக்கு திருமணம் நடத்தி வைத்த போது சதாசிவம் எம்.எல்.ஏ.ஆக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே 200 சவரன் நகை, 40 லட்சம் ரூபாய் மதிப்பில் சொகுசு கார், வெள்ளிப்பொருட்கள் என மருமகள் வீட்டாரிடம் பாமக எம்.எல்.ஏ. சதாசிவம் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறிப்பாக தனது மகள் மனோலியா கர்ப்பம் தரித்த போது ஆண் பிள்ளையாக இருந்தால் வைத்துக்கொள்ளலாம், பெண் பிள்ளையாக இருந்தால் அழித்துவிடலாம் என தனது சம்பந்தி பேபி (சதாசிவம் எம்.எல்.ஏ. மனைவி) கூறியதாகவும், இதைக்கேட்டு தாங்கள் அதிர்ச்சி அடைந்ததோடு ஆண் பிள்ளையாக இருந்தால் என்ன, பெண் பிள்ளையாக இருந்தால் என்ன அழிக்க வேண்டாம் என தாம் கூறியதாக தெரிவிக்கிறார் பெண்ணை பெற்ற தந்தை முருகேசன்.
மருமகனுக்கு தன்னால் 40 லட்சம் ரூபாயில் கார் வாங்கிக் கொடுக்க முடியாது எனக் கூறி சொத்துக்களை விற்று 25 லட்ச ரூபாய்க்கு கார் வாங்கிக் கொடுத்ததாக வேதனைத் தெரிவிக்கிறார் சதாசிவம் எம்.எல்.ஏ.வின் சம்பந்தி முருகேசன். மொத்தத்தில் பிரச்சனைக்கு பிள்ளையார்சுழி போட்டதே சதாசிவம் எம்.எல்.ஏ.வின் மனைவி பேபியும், அவரது மகன் சங்கரும் தான் என்பது முருகேசனின் பேட்டி மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஒரு கட்டத்தில் மாமியார் மற்றும் கணவரின் குடைச்சல் தாங்கமுடியாமல் தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார் மனோலியா. இதனிடையே காவல்துறையில் புகார் அளித்தும் அவர்கள் வழக்குப் பதியாமல் இழுத்தடித்து வந்ததால் மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு குடும்பத்துடன் காவல் நிலைய வாசலில் தற்கொலை செய்துகொள்வோம் என பெண்ணின் தந்தை முருகேசன் தெரிவித்திருக்கிறார்.
இதனால் நோட்டீஸ் சர்வ் செய்து பாமக எம்.எல்.ஏ. சதாசிவம் மற்றும் அவரது மனைவி, மகனை விசாரணை அழைத்திருக்கின்றனர் காவல்துறையினர். இதனிடையே இந்த விவகாரம் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் கவனத்திற்கும் சென்றிருப்பதால் சதாசிவம் எம்.எல்.ஏ. அதிர்ச்சி அடைந்து கலக்கம் அடைந்துள்ளார்.












Click it and Unblock the Notifications