வெளியாகுது அறிவிப்பு.. ரிலீஸ் ஆன அகவிலைப்படி கணக்கீடு.. அரசு ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு உயரும்?
சென்னை: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை 2025க்கான அகவிலைப்படி உயர்வு 4% ஆக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்திய பணவீக்க புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இந்த கணிப்பு அமைந்துள்ளது.
அகவிலைப்படி உயர்வு ஆண்டுக்கு இரண்டு முறை அறிவிக்கப்படும். பிப்ரவரி-மார்ச் மற்றும் செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் இந்த அறிவிப்புகள் வெளியாகும். ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் இருந்து இது நடைமுறைக்கு வரும். தற்போது 7வது ஊதியக்குழுவின் கீழ் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.

8வது ஊதியக்குழுவை மத்திய அரசு ஊழியர்கள் எதிர்பார்த்து காத்திருந்தாலும், தற்போதுள்ள 7வது ஊதியக்குழுவின் கீழேயே இன்னும் ஒரு அகவிலைப்படி உயர்வை அவர்கள் பெற வாய்ப்புள்ளது. பணவீக்கத்தின் தாக்கத்தை ஈடுசெய்யும் வகையில் இந்த உயர்வு இருக்கும்.
இந்த ஆண்டு மார்ச் மாதம் 2% உயர்வு அமல்படுத்தப்பட்ட பிறகு, தற்போது அகவிலைப்படி விகிதம் 55% ஆக உள்ளது. அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படுகிறது, ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலை நிவாரணம் வழங்கப்படுகிறது.
ஜூலை-டிசம்பர் 2025க்கான எதிர்பார்க்கப்படும் அகவிலைப்படி உயர்வு எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதைப் பார்ப்போம். தொழில்துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI-IW) அடிப்படையில் அகவிலைப்படி உயர்வு கணக்கிடப்படுகிறது. இந்த குறியீட்டை தொழிலாளர் பணியகம் ஒவ்வொரு மாதமும் வெளியிடுகிறது.
அகவிலைப்படி எப்படி கணக்கிடப்படும்?
7வது ஊதியக்குழுவின் கீழ் ஒரு குறிப்பிட்ட சூத்திரத்தைப் பயன்படுத்தி, முந்தைய 12 மாதங்களுக்கான CPI-IW தரவை சராசரியாகக் கொண்டு அரசாங்கம் அகவிலைப்படி உயர்வை கணக்கிடுகிறது. அதன்படி, DA (%) = [(12 மாத சராசரி CPI-IW - 261.42) ÷ 261.42] × 100 என்ற சூத்திரம் பயன்படுத்தப்படுகிறது.
7வது ஊதியக்குழுவின் கீழ் 261.42 என்பது அடிப்படை CPI-IW சராசரி (2016 அடிப்படை ஆண்டு) ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் அமைச்சகத்தின் கருத்துப்படி, விவசாய மற்றும் கிராமப்புற தொழிலாளர்களுக்கான சில்லறை பணவீக்கம் (CPI-AL மற்றும் CPI-RL மூலம் அளவிடப்படுகிறது) மே 2025 இல் 2.84% மற்றும் 2.97% ஆகக் குறைந்துள்ளது, இது ஏப்ரலில் 3.5% ஆக இருந்தது. CPI-AL மற்றும் CPI-RL ஆகியவை சற்று குறைந்து 1305 மற்றும் 1319 புள்ளிகளாக உள்ளன.
சம்பளம் எவ்வளவு உயரும்?
CPI-AL மற்றும் CPI-RL ஆகியவை DA ஐ கணக்கிட நேரடியாகப் பயன்படுத்தப்படாவிட்டாலும், அவை CPI-IW இல் பிரதிபலிக்கக்கூடியது. CPI-IW வரும் நாட்களில் நிலையானதாக இருந்தால் அல்லது மிதமாக உயர்ந்தால், அரசாங்கம் 3% முதல் 4% வரை DA உயர்வை அங்கீகரிக்கக்கூடும், இதனால் அகவிலைப்படி 58% அல்லது 59% ஆக இருக்கும். ஜூன் 2025க்கான CPI-IW தரவு ஜூலை இறுதிக்குள் வெளியான பின்னரே இறுதி உயர்வு தெரியவரும். இதைத் தொடர்ந்து, மத்திய அமைச்சரவை பொதுவாக செப்டம்பர் மற்றும் அக்டோபரில் புதிய DA விகிதத்தை அங்கீகரிக்கும், இது ஜூலை முதல் நிலுவைத் தொகையுடன் வழங்கப்படும்.
அகவிலைப்படி 3% உயர்த்தப்பட்டால், ஆரம்ப நிலை மத்திய அரசு ஊழியரின் சம்பளம், அதாவது மாதம் சுமார் ரூ.18,000 அடிப்படை சம்பளம் வாங்குபவருக்கு, ஜூலை 1, 2025 முதல் மாதம் ஒன்றுக்கு சுமார் ரூ.540 அதிகரிக்கும். ஒருவரின் சம்பளம் மாதம் ரூ.30,000 ஆகவும், அடிப்படை சம்பளம் ரூ.18,000 ஆகவும் இருந்தால், அவர் தற்போது அகவிலைப்படியாக ரூ.9,990 பெறுகிறார், இது அடிப்படை சம்பளத்தில் 53 சதவீதம் ஆகும். எதிர்பார்க்கப்படும் 3 சதவீத உயர்வுக்குப் பிறகு, ஊழியர் மாதம் ரூ.10,440 பெறுவார், இது ரூ.540 அதிகமாகும்.












Click it and Unblock the Notifications