Karur: வேலுச்சாமிபுரத்தில் தொலைந்த பெண் அரசு மருத்துவமனையில் உயிரிழப்பு.. பலி எண்ணிக்கை 41 ஆக உயர்வு
சென்னை: கரூரில் தவெக சார்பில் நடைபெற்ற பிரச்சார பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக தற்போது உயர்ந்துள்ளது. நேற்றிரவு வரை 40 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அரசு மருத்துவமனையில் மேலும் ஒரு பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள தவெக தலைவர் விஜய் 3வது கட்டமாக நேற்று முன்தினம் சனிக்கிழமை நாமக்கல் மற்றும் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

நாமக்கல் நிகழ்ச்சியை முடித்தக்கொண்டு இரவு 7 மணி அளவில் கரூர் வேலுச்சாமிபுரத்திற்கு விஜய் வந்தார். விஜய்யை பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. நெரிசலில் சிக்கி பலர் மயங்கிய நிலையில் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கூட்ட நெரிசல்
ஆனால் அதிகப்படியான கூட்டம் கூடியதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, சம்பவ இடத்திலேயே 30க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். பலர் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதில் மேலும் சிலர் உயிரிழந்துள்ளனர்..
தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த திருமணமாகாத கவின் என்பவர் சிகிச்சைப் பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்தார். இதையடுத்து, நேற்றிரவு நிலவரப்படி 40 பேர் உயிரிழந்து இருந்தனர்.
பலி எண்ணிக்கை 41
இதில் 34 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மேலும் ஒரு பெண் உயிரிழந்துள்ளார். இதனால் பலி எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. இச்சம்பவம் தமிழகம் மட்டுமல்லாது நாட்டையே உலுக்கி எடுத்து வருகிறது.
வேலுசாமிபுரத்தை சேர்ந்த நல்லுசாமி என்பவரின் மனைவி சுகுணா என்ற 65 வயது பெண், தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.. நேற்று முன்தினம் தவெக கூட்டம் முடிந்து இரவு வெகு நேரம் ஆகியும் சுகுணா வீடு திரும்பாமல் இருந்துள்ளார்.. இதனால், அவரது உறவினர்கள் சுகுணாவை தீவிரமாக தேடியிருக்கிறார்கள்..
கரூர் அரசு மருத்துவமனை
இதற்குபிறகுதான், கரூர் அரசு மருத்துவமனையில் சுகுணா சிகிச்சை பெற்று வரும் தகவல் குடும்பத்தினருக்கு கிடைத்துள்ளது.. மருத்துவமனையில் சுகுணாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி தற்போது உயிரிழந்துள்ளார். இதனால் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.
அதாவது 10 சிறுவர்கள், 19 பெண்கள் மற்றும் 12 ஆண்கள் என மொத்தம் 41 பேர் கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, கரூர் அரசு மருத்துவமனையில் 7 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், 2 பேர் ஆபத்தான நிலையில், சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் கூறுகின்றன..

வேலுச்சாமிபுரத்தில் சோகம்
முன்னதாக, கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கிய அடுத்தடுத்து பலரும் உயிரிழந்துகொண்டிருந்த போதே, விஜய் திருச்சி வழியாக தனி விமானம் மூலம் சென்னை திரும்பினார். அதே நேரத்தில் நள்ளிரவு 12.30 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து புறப்பட்டு திருச்சி வழியாக கரூர் சென்றார். அதிகாலை 3.15 மணிக்கு கரூர் அரசு மருத்துவமனைக்கு சென்ற முதலமைச்சர், அங்கு வைக்கப்பட்டிருந்த உடல்களுக்கு அஞ்சலி செலுத்தியதுடன், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications