சர்வர் கோளாறால் பத்திரப்பதிவு அலுவலகங்களில் பஞ்சாயத்து! வாரத்திற்கு 2 நாட்களாவது இந்த பிரச்சனை!
சென்னை: தமிழகமெங்கும் அடிக்கடி ஏற்படும் சர்வர் கோளாறு காரணமாக பத்திரப்பதிவு அலுவலகங்களில் பத்திரங்களை பதிய முடியாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக வாரத்தின் முதல் வேலை நாளான திங்கட்கிழமை அன்று சொல்லவே தேவையில்லை, காலை 10 மணிக்கு போடப்பட்ட முதல் டோக்கனே பிற்பகலில் தான் பதிய வேண்டிய அவலம் உள்ளது. பத்திரப்பதிவுத் துறையில் எவ்வளவோ நவீன வசதிகளை கொண்டு வந்துவிட்டதாக அமைச்சர் மூர்த்தி கூறினாலும், இந்த சர்வர் பிரச்சனைக்கு மட்டும் இதுவரை எந்த நிரந்தர தீர்வையும் ஏற்படுத்தவில்லை.

சர்வர் பிரச்சனை காரணமாக பத்திரப்பதிவு அலுவலகங்களில் பொதுமக்களுக்கும், அலுவலர்களுக்கும் வாக்குவாதம் முற்றி பல இடங்களில் மோதல் வரை செல்கிறது. தமிழகம் முழுவதும் 575 பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தினம் தோறும் ஆயிரக்கணக்கானோர் வீடு, விவசாய நிலம், வங்கி அடமானம் பத்திரம், எம்.ஓ.டி. ரத்து, பாகப்பிரிவினை பதிவு, திருமணப் பதிவு, வில்லங்கம் ஏற்றுதல், தான செட்டிலெண்ட், என இன்னும் பல தேவைகளுக்காக குவிந்து வருகின்றனர்.
ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை என ஸ்லாட் ஒதுக்கப்பட்டு டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. தமிழக பத்திரப்பதிவுத் துறையின் சர்வர் பிரச்சனை என்பது மாதத்திற்கு ஒரு முறை நடந்தால் பரவாயில்லை, வாரத்திற்கு 2 நாட்களாவது இந்தப் பிரச்சனை வந்துவிடுகிறது. பத்திரப்பதிவுத் துறையின் மூலம் அரசுக்கு வருவாயை ஈட்டுவதில் மட்டும் ஆர்வம் காட்டும் அமைச்சர் மூர்த்தி, சர்வர் வேலை செய்யவில்லை என்ற பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னை, வேலூர், கோவை, மதுரை, திருச்சி, கடலூர், சேலம், நெல்லை, தஞ்சாவூர், ஆகிய ஒன்பது மண்டலங்களில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களும் ஒரே சர்வரில் இணைக்கப்பட்டுள்ளன. இந்த சர்வை பிரபல தனியார் மென்பொருள் நிறுவனம் தான் பராமரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications