ஜெயலலிதா படம்.. தீபாவுக்கு வழக்கு தொடர எந்த தகுதியும் இல்லை.. கௌதம் வாசுதேவ் மேனன் பதில்
சென்னை: ஜெயலலிதாவை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று கூறிய தீபாவுக்கு வழக்கு தொடர எந்த தகுதியும் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் திரைப்பட இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றின் அடிப்படையில் கங்கனா ரனாவத் நடிக்கும் தலைவி என்ற தமிழ் படத்தை இயக்குனர் ஏ.எல்.விஜய்-யும், ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் "குயின்" என்ற இணையதள தமிழ் தொடரை இயக்குனர் கவுதம் வாசுதேவ மேனனும் இயக்கி வருகின்றனர்.

தன் அனுமதியில்லாமல் தலைவி, ஜெயா, குயின் ஆகிய படங்கள், இணையதள தொடருக்கு தடை விதிக்க கோரி ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயகுமாரின் மகளான ஜெ.தீபா உரிமையியல் வழக்கு செய்திருந்தார். வழக்கை தனி நீதிபதி, தள்ளுபடி செய்ததையடுத்து, தீபா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது .
அந்த மனுவில், ஜெயலலிதாவின் கண்ணியத்திற்கும், தனது வாக்கைக்கும் பாதிப்பில்லாமல் இந்த திரைக்கதைகள் எழுதப்பட்டிருக்கின்றனவா என்பதை சரிபார்க்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு இயக்குனர்கள் ஏ.எல்.விஜய் ,கொளதம் வாசுதேவமேனன் உள்ளிட்டோர் பதிலளிக்குமாறு உத்தரவிட்டிருந்தனர்.வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனன் சார்பில் பதில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த பதில் மனுவில் தீபாவுக்கு வழக்கு தொடர்வது எந்த தகுதியும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
உள்நோக்கத்துடன் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், ஜெயலலிதாவின் நெருங்கிய உறவினர் என கூறும் தீபா பலமுறை ஜெயலிதாவை தான் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டியிருக்கிறார் .இந்த கதை உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது என்றும் மேலும் ஏற்கனவே
தி குயின் என்ற பெயரில் அனிதா சிவகுமார் என்பவர் எழுதிய புத்தகத்தின் அடிப்படையில் இந்த தொடர் எடுக்கப்பட்டுள்ளதாக மனுத் தாக்கல் செய்துள்ளார்.
எனவே தீபவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இந்த வழக்கில் இயக்குனர் விஜய் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்கப்பட்டது். இதையடுத்து வழக்கு விசாரணை மார்ச் 6-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications