தீபாவளிக்கு சொந்த ஊர் போறீங்களா? அரசு விரைவு பேருந்துகளில் ரிசர்வேசன் ஆரம்பம்
சென்னை: தீபாவளி பண்டிகைக்கு சென்னை, கோவை உள்ளிட்ட பெரு நகரங்களில் இருந்து சொந்த ஊர் செல்பவர்களுக்கு அரசு விரைவு பேருந்துகளில் முன்பதிவு தொடங்கியுள்ளது. அரசு போக்குவரத்து கழகத்தின் www.tnstc.in என்ற இணையதளம் அல்லது tnstc செயலி வாயிலாக முன்பதிவு செய்துகொள்ளலாம்.
தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 24ஆம் தேதி இந்தியா முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. பண்டிகை கால விடுமுறையை முன்னிட்டு சென்னையில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக ஆண்டுதோறும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில், இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகைக்காக சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன.
சென்னையில் வசிப்பவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகளும், சொந்த ஊர்களில் இருந்து திரும்பி வர 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.

அரசு விரைவு போக்குவரத்துகழகம்
சொந்த ஊர் செல்பவர்கள் ஏற்கனவே ரயில், ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ளனர். ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்நிலையில், அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.

தீபாவளிக்கு ரிசர்வேசன்
அரசு போக்குவரத்து கழகத்தின் www.tnstc.in என்ற இணையதளம் அல்லது tnstc செயலி வாயிலாக முன்பதிவு செய்துகொள்ளலாம். இது தவிர, பேருந்து நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்கள் வாயிலாகவும் முன்பதிவு செய்யலாம் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தீபாவளிக்கு அரசு சிறப்பு பேருந்துகள்
செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்துத்துறை அதிகாரிகள், விரைவு பேருந்துகளை பொருத்தவரை 30 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்ய முடியும். அந்த வகையில், அக்டோபர் 20ஆம் தேதிக்கான முன்பதிவு நேற்று தொடங்கியது. தீபாவளிக்கு 3 நாட்கள் முன்பு, அதாவது அக்டோபர் 21ஆம்தேதி பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளவர்கள் இன்று முதல் முன்பதிவு செய்யலாம். அக்டோபர் 22ஆம் தேதி செல்பவர்கள் நாளையும், அக்டோபர் 23ஆம் தேதி ஊருக்கு செல்பவர்கள் நாளை மறுநாள் செப்டம்பர் 23ஆம் தேதியும் முன்பதிவு செய்யலாம்.

6 இடங்களில் பேருந்து நிலையங்கள்
கடந்த சில ஆண்டுகளாகவே தீபாவளி பண்டிகை கால போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் சென்னையில் 6 இடங்களில் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, அரியலூர், திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், பொள்ளாச்சி, ஈரோடு, ராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு செல்லும் பேருந்துகள் இயக்கப்பட்டது.

ஜிஎஸ்டி சாலை வழியாக
தாம்பரம் மெப்ஸ் அண்ணா பேருந்து நிலையம் - திண்டிவனம், விக்ரவாண்டி, பண்ருட்டி, கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள் ஜி.எஸ்.டி சாலை வழியாக பேருந்துகள் இயக்கப்பட்டன. தாம்பரம் ரயில்வே ஸ்டேஷன் பேருந்து நிலையத்தில் இருந்து திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை, போளூர், வந்தவாசி, செஞ்சி, பண்ருட்டி, நெய்வேலி, கடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பேருந்துகள் ஜி.எஸ்.டி சாலை வழியாக இயக்கப்பட்டது.

வட மாவட்டங்களுக்கு பேருந்துகள்
பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து ஆரணி, வேலூர்,ஆற்காடு,திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், திருத்தணி மற்றும் திருப்பதி செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து ஆந்திரா செல்லும் பேருந்துகள் பொன்னேரி, கும்மிடிபூண்டி, ஊத்துக்கோட்டை வழியாக இயக்கப்பட்டன. நடப்பாண்டும் இதுபோல கூடுதல் பேருந்து நிலையங்களை அமைத்து பேருந்துகளை சிக்கலின்றி இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தசரா சிறப்பு பேருந்துகள்
இதனிடையே தசரா பண்டிகையையொட்டி திருச்செந்தூர் மற்றும் குலசேகரப்பட்டினத்துக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் கே.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
அதன்படி, வரும் அக்டோபர்1 முதல் 4 வரை சென்னை, கோவையில் இருந்து திருச்செந்தூர் மற்றும் குலசேகரப்பட்டினத்துக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பண்டிகை முடிந்து திரும்ப ஏதுவாக அக்டோபர் 6 முதல் 10ஆம் தேதி வரை கூடுதல் பேருந்துகள் இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications