தீபாவளி.. ரிசர்வேசன் இல்லாத சிறப்பு ரயில் இயக்கப்படுமா? தமிழக தென் மாவட்ட மக்கள் எதிர்பார்ப்பு
சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை - நாகர்கோவில் இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளுக்காக 2 ரயில்களை இயக்க வேண்டும் என்று தெற்கு ரயில்வே அதிகாரிகளுக்கு தென் மாவட்ட பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகை வரும் 12ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், மக்கள் புத்தாடைகள் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். வெளியூர்களில் வேலைக்காகவும், படிப்புக்காகவும் சென்றுள்ளவர்கள் அனைவரும் தங்களது சொந்த ஊர்களுக்கு தீபாவளி கொண்டாட செல்வது வழக்கம்.

அரசு அறிவித்துள்ள சிறப்பு பேருந்துகளில் முன்பதிவு நடைபெற்று வருகிறது. ஆம்னி பேருந்துகளில் 2000 ரூபாய்களுக்கு மேல் கட்டணம் உள்ளதால் சாமானிய மக்களால் பயணம் செய்ய முடியாத சூழ்நிலை உள்ளது. பலரும் ரயில் பயணங்களையே விரும்புகின்றனர். கட்டணம் குறைவாக இருப்பதோடு சவுகரியமும் அதிகம் என்பதால் ரயில்களில் 4 மாதங்களுக்கு முன்பே ரிசர்வேசன் செய்து விடுவார்கள்.
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் வழக்கமான ரயில்களில் டிக்கெட் முன்பதிவு கடந்த ஜூன் மாதத்தில் முடிந்தது. அனைத்து ரயில்களிலும் 200க்கு மேல் வெயிட்டிங் லிஸ்ட் உள்ளது. இதையடுத்து, பயணிகள் நெரிசலை குறைக்க சிறப்பு ரயில்கள் இயக்க கோரிக்கை வைக்கப்பட்டது.
இதன்பேரில், மொத்தம் 5 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தென் மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்ட இரண்டு ரயில்களில் பண்டிகைக்கு சென்றுவர பொருத்தமான ஓரிரு நாட்களுக்கு மட்டும் டிக்கெட் முன்பதிவு முடிந்துள்ளது. இருப்பினும், இந்த இரண்டு ரயில்களும் பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யவில்லை. சில ரயில்கள் ஏன் அறிவித்திருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. இதனால் தென்மாவட்ட பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
எனவே, கூடுதல் சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அதோடு முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தெற்கு ரயில்வே மண்டல ஆலோசனைக் குழு உறுப்பினர் பாண்டியராஜா, கொரோனா காலத்திற்கு முன்பு வரை பண்டிகை காலத்தில் ரயில்களில் முன்பதிவு டிக்கெட் கிடைக்காத மக்களுக்காக, பகல் நேர முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்பட்டது.
கடந்த சில ஆண்டுகளாக, பண்டிகை காலத்தில் முன்பதிவில்லாத சிறப்பு ரயில் போதிய அளவு இயக்கப்படாமல் உள்ளது. எனவே, இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக, சென்னை-நாகர்கோவில் இடையே 2 முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்க வேண்டும். இது ஏழை, நடுத்தர மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள தெற்கு ரயில்வே அதிகாரிகள், தற்போது, தீபாவளி பண்டிகைக்காக சிறப்பு ரயில்களை அறிவித்து வருகிறோம்.
பயணிகளின் தேவை அதிகமுள்ள வழித்தடங்களில் கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்து உள்ளோம். அந்தவகையில், தென் மாவட்டங்களுக்கு கூடுதல் சிறப்பு ரயில்களை எதிர்பார்க்கலாம். மேலும், முன்பதிவில்லாத ரயில் இயக்குவது தொடர்பான முடிவு பரிசீலனையில் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications