சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான அவதூறு வழக்கு ரத்து! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி
சென்னை: அதிமுக குறித் அவதூறாக பேசியதாக, அக்கட்சியின் வழக்கறிஞர் பாபு முருகவேல் சிறப்பு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடுத்திருந்தார். இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் அப்பாவு வழக்கு தொடுத்த நிலையில், பாபு முருகவேலின் அவதூறு வழக்கு ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
சென்னையில் கடந்த ஆண்டு நடந்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பங்கேற்று பேசியிருந்த, சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு, ஜெயலலிதா இறந்த நேரத்தில் திமுகவுக்கு வர 40 எம்எல்ஏக்கள் தயாராக இருந்ததாகவும் பேசியிருந்தார். இவரது பேச்சுக்கு ர.ராக்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்தது. அதிமுக வழக்கறிஞர் பாபு முருகவேல் என்பவர் அப்பவுக்கு எதிராக எம்பி எம்எல்ஏ களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பாவு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை கடந்த 17ம் தேதி நடைபெற்றது. அப்பாவு சார்பில் ஆஜராகியிருந்த வழக்கறிஞர் வில்சன், "ஒரு கட்சியின் மீது அவதூறு பரப்பப்படுவதாக அக்கட்சி நினைத்ததால், கட்சியின் தலைவர் அல்லது பொதுச்செயலாளர்தான் அவதூறு வழக்கை தாக்கல் செய்ய முடியும். ஆனால் வழக்கில் சம்பந்தமே இல்லாமல் பாபு முருகவேல் இங்கு வழக்கு தொடுத்திருக்கிறார்" என்று வாதாடினார்.
இதனையடுத்த பாபுவிடம் நீதிபதி, அவதூறு வழக்கை தாக்கல் செய்ய என்ன அடிப்படை உரிமை உள்ளது. 40 எம்.எல்.ஏ.க்களில் எவரும் வழக்கு தாக்கல் செய்யவில்லை. அப்பாவு தனது பேச்சில் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை. உங்கள் கட்சிக்கு அவர் அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேசவில்லை எனச் சுட்டிக்காட்டினார்.
மேலும், கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி விட்டதாக கற்பனையாக கூறக்கூடாது என பாபுமுருகவேல் தரப்புக்கு அறிவுறுத்திய நீதிபதி, அதிமுக ஆட்சி ஐந்து ஆண்டுகள் பதவிக்காலத்தை பூர்த்தி செய்தது. எவரும் கட்சி தாவவில்லை. சபாநாயகர் பேச்சால் எப்படி அதிமுக-வின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டது? எப்படி அவதூறாகும் எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும் அப்பாவுவின் மனுவுக்கு அக்டோபர் 22ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி பாபு முருகவேலுக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை அன்றைய தினத்துக்கு தள்ளிவைத்திருந்தார். இதற்கிடையில் சபாநாயகர் பேச்சு அவதூறு இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்தார். எனவே இன்று விசாரணைக்கு வந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications